– தொகுப்பு: மு.அ.அப்துல் முஸவ்விர்
பிறகு, அவர் அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர்: “மர்யமே! நீ ஒரு பெரும் பாவச்செயலைச் செய்து விட்டாயே…! ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்ட மனிதராய் இருக்கவில்லை; உன் தாயும் தீய நடத்தையுடையவளாய் இருக்கவில்லை!” அப்போது, மர்யம் குழந்தையின் பக்கம் சைக்கினை செய்தார். அதற்கு மக்கள் கேட்டார்கள்: “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசுவது?” உடனே, குழந்தை கூறிற்று: “நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதம் அருளினான்; என்னைத் தூதராகவும் ஆக்கினான்; பெரும் பாக்கியமுடையவனாயும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும் சரியே! தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான், நான் உயிரோடு இருக்கும் காலம் வரை! மேலும், என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாயும் என்னை ஆக்கினான். மேலும், முரடனாகவும், துர்ப்பாக்கியமுடையவனாகவும் என்னை ஆக்கவில்லை. என் மீது சாந்தி உண்டாகும் நான் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், உயிரோடு மீண்டும் எழுப்பப்படும் நாளிலும்!” இவர்தான் மர்யமின் குமாரர் ஈஸா! இதுதான் இவரைக் குறித்து மக்கள் ஐயம் கொண்டிருக்கும் விஷயத்தில் உண்மையான கூற்றாகும்.(19:27:35)
முன்னுரை
ஒரு முன்னாள் மினிஸ்டர் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் இருள்களில் நடந்து செல்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது என் மீது கடமையாக இருக்கிறது. நான் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு சத்திய இஸ்லாத்தின் ஒளியை அனுபவிப்பதற்கு பாக்கியம் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டிய அத்தியாவசிய தேவையிருப்பதை உணர்ந்தேன்.
முஹம்மது (ஸல்) அவர்களும் மற்றும் நேர்வழி பெற்ற அவருடைய வழிவந்தவர்களான சத்திய சஹாபாக்கள் போதித்தவாறும் அழகிய மார்க்கமான இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கும் என் மீது கருனை புரிந்த வல்ல இறைவனுக்கு நான் நன்றி கூற மிகவும் கடமைப்பட்டுள்ளேன். நாம் உண்மையான நேர்வழியை அடைவதும், இம்மை மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் அந்த நேர்வழியைப் பின்பற்றுவதற்குரிய ஆற்றலை அடைவதும் இறைவனின் கருனையினாலேயன்றி வேறில்லை.
நான் இஸ்லாத்தை தழுவும் போது அஷ்செய்க் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்கள் என் மீது அன்புகாட்டியதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஒவ்வொரு தடவையும் அவரை சந்திக்கும் போது நான் அவரிடமிருந்து கற்ற கல்வியை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் ஆசைப்படுகிறேன். இவர் தவிர இன்னும் அநேகர் எனக்கு ஆர்வமுட்டி மார்க்க அறிவைப் பெறுவதில் உதவினார்கள். அவர்களின் பெயர்களில் யாரையேனும் நான் விட்டுவேனோ என்ற அச்சத்தின் காரணமாக அவர்களின் பெயரை நான் பட்டியலிடவில்லை. எனவே நான் ஒரு உண்மையான முஸ்லிமாக மாறுவதற்காக ஒவ்வொரு சகோதர, சகோதரிகளையும் எனக்கு எல்லாவகையிலும் உதவி செய்ய வைத்த அல்லாஹ்விற்கு நான் நன்றி செலுத்தினால் போதும் என எண்ணுகிறேன்.
இந்த சிறிய முயற்சி அனைவருக்கும் பயனளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன். கிறிஸ்தவ உலகில் பெருவாரியாகக் காணப்படும் மனம் போன போக்கில் வாழும் வாழ்க்கைக்கு ஒருவிடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை கிறிஸ்தவர்கள் பெறுவார்கள் என்று நம்புகிறேன். கிறிஸ்தவர்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிறிஸ்தவர்களிடம் கிடையாது. ஏனென்றால் அந்தப் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக விளங்குவதே அவர்கள் தான். மாறாக, கிறிஸ்தவ உலகை செல்லரித்துக் கொண்டிருக்கின்ற பிரச்சனைகளுக்கும் மற்றும் உலகில் காணப்படும் மற்ற எல்லா மார்க்கங்களிலும் உள்ள பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு இஸ்லாம் தான். இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் எற்ற சிறந்த நற்கூலியை வழங்குவானாகவும்.
அப்துல்லாஹ் முஹம்மது அல்-ஃபாரூக்கீ அத்தாயிஃப், சவுதி அரேபியா.
அறிமுகம்!
சிறு வயது முதலே கடவுள் பக்தி உள்ளவனாக வளர்கப்பட்டேன். என்னுடைய பாதி வாழ்க்கையை தீவிர பெந்தகோஸ்தே கிறிஸ்தவதத்தைப் பின்பற்றுகின்ற என் பாட்டியிடம் நான் வளர்ந்ததால் சிறுவயது முதலே கிறிஸ்தவ தேவாலயம் எனது வாழ்க்கையின் முக்கிய அம்சமாகி விட்டது. நான் ஆறு வயதை அடைந்தபோது, ‘ஒரு நல்ல சிறுவனாக இருப்பதற்காக பரலோகத்தில் எனக்காக நல்ல வெகுமதிகள் காத்திருக்கின்றது; அடம்பிடிக்கும் மற்ற சிறுவர்களுக்காக தண்டனைகள் காத்திருக்கிறது’ எனவும் நம்பினேன். ‘பொய்யர்கள் அனைவரும் இழிவுபடுத்தப்பட்டு நரகத்திற்கு செல்வார்கள்; அங்கே அவர்கள் நிரந்தரமாக உரிக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார்கள்’ என்றும் எனது பாட்டி எனக்கு போதித்து வந்தார்கள்.
என்னுடைய தாயார் இரண்டு முழு நேரப் பணிகள் செய்து வந்தார். மேலும் அவர் தன்னுடைய தாயார் (எனது பாட்டி) எனக்கு போதித்தவற்றையும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். என்னுடைய பாட்டியின் பரலோகத்தைப் பற்றிய எச்சரிக்கைகளைப் பற்றி நான் சிரத்தை எடுத்துக் கொண்டது போல என்னுடைய இளைய சகோதரரும் மூத்த சகோதரியும் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சிறு வயதில் முழு நிலவை செந்நிறத்தில் காணும் போது நான் அழ ஆரம்பித்து விடுவேன். காரணம் என்னவெனில் உலக அழிவு நாளின் அடையாளங்களில் ஒன்று தான் நிலவு இரத்தத்தைப் போன்று சிவப்பு நிறமாகிவிடுவது என்று போதிக்கப்பட்டிருந்தேன்.
எனக்கு எட்டு வயதாகும் போது இவ்வுலகிலும் ஆகாயத்திலும் காணப்படும் உலக அழிவு நாளுக்கான அடையாளங்களாக நான் நினைத்தவற்றின் காரணமாக எனக்குள் பயம் வளரத் தொடங்கியது. அதன் காரணமாக நியாயத் தீர்ப்பு நாள் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு கணவுகள் தோன்றியது. என்னுடைய வீடு இரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்தது. அந்த தண்டவாளத்தின் வழியே அடிக்கடி இரயில் சென்று கொண்டிருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, இரயில் எஞ்சினின் ஊதல் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு விழித்து, ‘நான் இறந்து விட்டேன்; இப்போது சூர் ஊதல் மூலமாக மீண்டும் உயிர்பிக்கப்படுகின்றோம்’ என்று எண்ணிக் கொள்வேன். சிறுவர் சிறுமியர்களுக்கான பைபிளின் கதைகள் மற்றும் வாய்மொழி போதனைகளின் காரணமாக இத்தகைய எண்ணங்கள் என் பிஞ்சு மனதிலே ஆழமாக பதிந்திருந்தன.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நல்ல உடைகளை உடுத்திக் கொண்டு தேவாலயங்களுக்குச் செல்வோம். என்னுடைய தாத்தா தான் எங்களை எல்லாம் அழைத்துச் செல்வார். நாங்கள் காலை பதினோரு மணிக்கு தேவாலயத்திற்குச் சென்றால் மதியம் மூன்று மணி வரை அங்கேயே இருப்போம். பல நேரங்களில் என் பாட்டியின் காலில் படுத்து உறங்கிய நினைவிருக்கிறது. சில நேரங்களில் நானும் என்னுடைய சகோதரரும் ஞாயிறு வகுப்பு மற்றும் காலை நேர பிரார்த்தனைக்கு இடைப்பட்ட வேளையில் தேவாலயத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதுண்டு. அப்பொழுது எங்கள் தாத்தாவுடன் இரயிலடியில் அமர்ந்துக் கொண்டு போகின்ற வருகின்ற இரயில்களை வேடிக்கைப் பார்ப்பதுண்டு. என் தாத்தா தேவாலயத்திற்குச் செல்வதில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு என் தாத்தா வாத நோயால் பாதிக்கப்பட்டு பகுதியாக செயலிழந்தார். அதன் காரணமாக நாங்கள் தொடர்ந்தார் போல் தேவாலயத்திற்கு செல்ல இயலாமல் போனது. இந்தக் காலக் கட்டம் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமானதாக இருந்தது.
www,islamreligion.com
தொடரும, இறைநாடின்!
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali


