கல்விக்கான தேடலில்..,மாற்றத்திற்கான அடிப்படைக் காரணங்கள்.!

இந்த மாற்றத்திற்கான அடிப்படைக் காரணங்களில் …

கல்விக்கான தேடலில்..!

கல்விக்கான தேடலில்..!

i)    முஸ்லிம் கல்வி நிறுவனர்களின் விழிப்புணர்வு :

(கல்வி ஞானத்தின் மூலமாக) யார் நேர் வழியின் பக்கம் அழைக்கின்றாரோ அவருக்கு அந்நேர்வழியை பின்பற்றக்கூடியவர்களின் நற்கூலிகளைப்போன்று கிடைக்கும். எனினும் அவர்களின் (பின்பற்றுபவர்களின்) நற்கூலிகளில் எதுவும் குறையாது.     நபிமொழி –முஸ்லீம்

1850-ஆண்டுமுதல் 1970-வரை தமிழகத்தில் தொடங்கப்பட்ட முஸ்லீம் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை விட 1970 முதல் இன்று வரை துவங்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம். கடந்த 30 வருடங்களில் பொருளாதாரத்தில் ஓரளவு வசதி படைத்த இஸ்லாமிய கல்வி ஆர்வலர்கள் புதிய பல கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று தலைப்பட்டதன் பயனாக இன்று அதிகமாக இல்லாவிட்டாலும் ஓரளவு இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் தெரிகிறது. கல்வி நிறுவனர்களின் விழிப்புணர்விற்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்வோம்.

ii)    சமுதாய இயக்கங்களின் கல்வி விழிப்புணர்வு:

உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்,கல்வி ஞானம் கொடுக்கப்பட்வர்களுக்கும், அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.     (அல் குர்ஆன்- 58:11 )

இன்றைய தமிழகத்தில் இஸ்லாமிய கொள்கைகளையும் முஸ்லீம்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் நம்மிடையே அரசியல் சார்ந்த கட்சிகளும், அரசியல்சாரா இயக்கங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அத்தனை இயக்கங்களும் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளைத் தவிர மற்ற பல்வேறு கருத்துகளில் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு நிற்பதும் நமக்கு தெரியும். ஆனால் இந்த இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தும் ‘இஸ்லாமிய சமுதாயம் கல்வி நிலையில் கடைநிலையில் உள்ளது. மற்ற சமுதாயத்தோடு 200 ஆண்டுகள் கல்வியில் பின்தங்கி நிற்கும் முஸ்லீம்கள் உடனடியாக கையிலெடுக்க வேண்டிய ஆயுதம் கல்வி ஒன்று தான்’. என்ற ஒரு கருத்தில் மட்டும் தான் ஒத்துப்போகின்றன. அதற்காகவும் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் முஸ்லிம்களிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களிடையே கல்வி ஆர்வத்தை தூண்டி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. படிக்க வேண்டும் என்ற மனநிலையை மாணவர்கள் மனதில் விதைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர். கல்விக்கு தடையாக நிற்கும் பொருளாதார பிரச்சினையை கல்வி உதவித்தொகைகள் வழங்கி கல்விச் சாலைகளுக்கு வழிகாட்டுகின்றனர்.

iii)    வெளிநாடு வாழ் தமிழக முஸ்லீம்களின் கல்வி விழிப்புணர்வு:

சமீப காலங்களில் வெளிநாடுகளில் வாழும் தமிழக முஸ்லீம்களிடையே கல்வி சார்ந்த விழிப்புணர்வு பிரகாசமாக எரிய துவங்கிவிட்டது. மற்ற நாடுகளில் வாழும் தமிழர்களை காட்டிலும் வளைகுடா நாடுகளில் வாழும் நம்மவர்களுக்கு இந்த விழிப்புணர்வு தீ சுவாலையாக சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. காரணம், ஒரு முஸ்லீம் நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கீழ், முஸ்லீம்கள் பலர் கொத்தடிமைகளாக இளமையை இழந்து கொண்டிருக்ககூடிய அவலத்தை அனுபவிப்பதால் தான். இந்த அவலத்திற்கு முதல் முழு காரணம் தேவையான கல்வி இல்லாதது தான் என்பதை புரிந்து கொண்டதால் தான். தாங்கள் இழந்த கல்வி வாய்ப்பை தனது சந்ததிகளாவது பெற்று சிறக்கட்டுமே என்ற வெறியில் இஸ்லாமியர்களின் கல்வி வளர்ச்சிக்காக தனது குறைந்த சம்பளத்தில் சிறிய தொகையையினை தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தானமாகத் தருவதன் மூலமாகவோ அல்லது தன்னிச்சையாக செலவிடுவதன் மூலமாகவோ தனது கடமையை நிறைவேற்றிக்கொண்ட ஆத்ம திருப்தி அடைந்து வருகின்றனர்.

 உலகத்தில் நூல்கள் எழுதுவதிலும், கல்விக்காக செலவழிப்பதிலும்  இஸ்லாமியர்களுக்கு எதிராக யாரும் போட்டி போட முடியாது. –  இமாம்  அல்ஜாயீ (ரஹ்)

இன்றைய இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு ஆக்கப்பூர்வமான மாற்றமா ?

நாம் மிகவும் சந்தோசமடைந்து கொள்ளும் மிதவேகமான மாற்றங்கள் விவேகமான பாதையில் செல்கின்றதா? இந்த மாற்றத்திற்கு ஏற்ப ஆக்கப்பூர்வமான கல்வி வளர்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் எட்ட முடியுமா? இன்று கல்வியின் அடிப்படையில் சமுதாய மாற்றத்திற்காக செலவழிக்கப்படும் மனித ஆற்றல்களுக்கும் பொருளாதார செலவுகளுக்கும் சரியான தீர்வு கிடைக்குமா?

கடந்த சில வருடங்களாக எந்த ஒரு அமைப்பையும் சாராது அதே வேளையில் அனைத்து அமைப்புகளுடன் ஐக்கியமாகி தமிழக மாணவர்களிடையே குறிப்பாக இஸ்லாமிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருபவன் நான். எனது கல்வி பயணத்தில் நான் கண்ட தமிழக இஸ்லாமிய மக்களிடையே கல்வி விழிப்புணர்வு சார்ந்த அனுபவ ஆதங்கங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

கல்வி விழிப்புணர்வில் சமுதாயத்தின் தடுமாற்றங்கள்

தமிழக அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கல்வி நிலைய நிறுவனங்களும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கல்வி ஆர்வ தனவந்தர்களும் கல்வி விழிப்புணர்வு செயல்பாட்டில் தங்களை முடிந்தளவு பிணைத்துக்கொண்டு வருவது மிகப்பெரிய மாற்றமே. ஆனாலும்… சாதகமான சூழலுக்கிடையே பாதக விளைவுகளை உண்டுபண்ணும் சில தடுமாற்றங்ளை முடிந்தவரை தவிர்ப்பதன் மூலம் நமது இலக்கினை அடையும் தூரத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.அந்த வகையான தடுமாற்றங்களில்  சில…

இருட்டில் இருக்கும் இன்றைய தமிழ் இஸ்லாமிய விஞ்ஞானிகள்:

இறைவணக்கத்தில்  ஈடுபட்டிருக்கும் ஆயிரம்     வணக்கசாலிகளை விட சைத்தானுக்கு நுட்பறிவாய்ந்த ஒரு அறிஞர் மிகவும் கடினமானவர்.     (நபி மொழி- திர்மிதி)

யானை தன் பலம் அறியாது என்று சொல்லுவார்கள்…மிகப்பெரும் பலம் கொண்ட யானையை மிகச்சிறிய சங்கிலியால் கட்டி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். பலம் இல்லாத பால்யவயதில் மனரீதியாக பழக்கப்பட்டு விட்டதால்  யானையும் தன் பலத்தை சோதித்துப் பார்ப்தில்லை (மதம் பிடிக்காத வரை). மிகப்பெரும் ஆற்றல் மிகுந்த இந்த சமுதாயமும் இன்றுவரை தன்பலத்தை உணராத நிலையில் தான் உள்ளது.

இந்தியாவில் .இஸ்லாமியர்கள் முன்னேறுவதை மற்றவர்கள் அங்கீகரிப்பதில்லை என்பது நமது பொதுவான குற்றச்சாட்டுகளில் ஒன்று. ஆற்றல்மிகு இஸ்லாமிய அறிஞர்களை அடுத்தவர்கள் அங்கீகரிப்பது ஒருபுறம் இருக்கட்டும், இன்றைய தினத்தில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைகழகங்களிலும் ஒருசில கல்லூரிகளிலும் தங்களின் அற்புமான ஆராய்சிகள் மூலம் உலக ஆராய்சியாளர்களை திரும்பிப் பார்க்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் பல தமிழக முஸ்லீம் விஞ்ஞானிகள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இது வரை இவர்களை அடையாளம் கண்டிருக்கிறோமா? அல்லது இவர்களின்  அறிவியல் சாதனைகளை குறைந்தது நம்மவர்களுக்காகவாவது அறிமுகப்படுத்தி அங்கீகரித்திருக்கிறோமா…?

மண்புழு என்ற அற்பஉயிரியை அற்புத உயிரியாக்கி இயற்கை உரம் உருவாக்கி வரும் டாக்டர். ‘சுல்தான்அஹமது இஸ்மாயில்'(சென்னை புதுக்கல்லூரி, பாசுமதி அரிசி மூலம் இந்தியாவின் அன்னிய செலவானியை உயர்த்திய அரிசி விஞ்ஞானி ‘பத்மஸ்ரீ சித்தீக்’  (இளையான்குடி), புற்றுநோய் ஆராய்சியில் திருப்புமுனை கண்ட ‘அக்பாஷா’ (பாரதிதாசன் பல்கலைக்கழகம்-திருச்சி), நுண்ணுயிரி ஆராய்சியில் புதுமைபடைத்த ‘தாஜூதீன’; (பாரதிதாசன் பல்கலைக்கழகம்,-திருச்சி), ஆழ்கடல் மீன்களில் அற்புதங்களை அள்ளித்தரும் ‘அஜ்மல்கான்'(அண்ணாமலை பல்கலைக்கழகம்-) சதுப்பு நில ஆராய்சியில் ஆச்சரியங்கள் படைத்த அப்துல் ரகுமான் (பூண்டி புஸ்பம் கல்லூரி தஞ்சாவூர்), பாக்டீரியாக்களில் மரபணுமாற்றத்தை கண்டறிந்த ‘ஹூசைன் முனைவர்’ (மதுரை காமராஜர் பல்கலைகழகம்), மாசுக்கட்டுப்பாட்டு ஆராய்சியில் புதுமை செய்த ‘அப்பாஸி’    (பாண்டிச்சேரி பல்கலைகழகம்),  மீன் இன ஆராய்சியில் புது வகை மருத்துவங்கள் கண்டறிந்த ‘முகமது அனீபா’ (புனித சேவியர் கல்லூரி – பாளையங்கோட்டை) உள்ளிட்ட இன்னும் பல்வேறு அறிவியல் விஞ்ஞானிகளும் பல பொருளாதார நிபுணர்களும் ,  இலக்கிய அறிஞர்களும் வெளிச்சத்திற்கு வராமலேயே உள்ளனர்.

சிறிய செயலுக்காக பெரிய அளவில் விளம்பரப் படுத்தும் நம்மவர்கள் , பெரிய அளவில் கல்விச் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் இவர்களை குறைந்தது தமிழக முஸ்லீம் சமுதாயத்திற்குக்கூட அறிமுகப்படுத்தி  ஆவணப்படுத்தவில்லையே என்பதும் மிகப்பெரிய ஆதங்கமாக உள்ளது.

சமகாலத்தில்,நம்மிடையேயும் ஆற்றல்மிகு அறிவியல் அறிஞர்கள் உள்ளார்கள்  அவர்களும் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை நம்மவர்களுக்கும் தெரியவேண்டும். இது  நமது சமுதாய இளைஞர்கள் மனதில் புரையோடியிருக்கும் கல்வி சார்ந்த தாழ்வு மனப்பான்மை வேரறுக்கும். யானைக்கு கட்டபட்ட சங்கிலி போன்று நமது சமுதாயத்தின் மீதும் சுற்றப்பட்டிருக்கும் கல்வியற்ற சங்கிலியும் தகர்ந்து போக வாய்ப்புள்ளது.

•    அமைப்புகளின் தனித்துவ முயற்சி

பெரும்பாலான ஊர்களில் நடைபெறும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒரு இஸ்லாமிய அமைப்பு நடத்தும்பொழுது அந்த ஊரில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகள் அதை வரவேற்காவிட்டாலும் அங்கு மாணவர்களின் வருகையை தவிர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், கல்வி விழிப்புணர்வு என்ற பெயரில் நடத்தப்படும் பெரும்பாலான நிகழ்சிகள் வீரியம் இழந்த நிகழ்ச்சியாக முடிந்து விடுகிறது. காரணம் கல்வி விழிப்புணர்வு என்ற பெயரில் அமைப்புகளின் தனித்துவத்தையும் அந்தந்த இயக்கங்களின் விளம்பரத்தையும்  பிரதிபலிக்கவே  முயற்சிக்கின்றனர். அத்துடன், கல்விஉதவி செய்யும் ஒவ்வொரு அமைப்புகளும் அந்தந்த மாணவர்களிடம் தங்களின் இயக்கம் சார்ந்த கொள்கைகளை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் மற்ற அமைப்புகளோடு இருக்கும் ஆர்வத்தை பிரித்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்ற சூழலும் ஆங்காங்கே நடக்கிறது.

இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், படித்து முடித்து தனது கல்வி அறிவால் சமுதாயத்தை மேம்படுத்த இருக்கும் மாணவர்களின் மனநிலை, நமது சமுதாயத்திற்குள்ளே இருக்கும் பிரிவுகளை இன்னும் வலுப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

கல்வியின் மூலம் பிற அறிஞர்களுக்கு நிகராகிவிட வேண்டும் என்பதற்காக அல்லது அறிவீனர்களின்  வாதம் புரிவதற்காக அல்லது அதன் மூலம் மக்களின் உள்ளங்களைத் தன் பக்கம் திருப்புவதற்காக ஒருவர் கல்வியை நாடினால் அவரை அல்லாஹ் நரகில் புகுத்துவான் .          ( நபிமொழி-திர்மிதி)

•    சிதறடிக்கப்படும் பொருளாதாரம்:

கல்விக்காக தமிழக அளவில் ஒவ்ஒரு வருடமும் தனவந்தர்களால் செலவு செய்யப்படும் பணத்தின் மதிப்பு பல நூறு

கல்விக்கான தேடலில்..!

கல்விக்கான தேடலில்..!

கோடிகளை தாண்டுகிறது என்கிறது புள்ளி விபரம். கல்விக்காக இஸ்லாமியர்களால் வழங்கப்படும் பெரும்பாலான பொருளாதாரம் முறைப்படுத்தப்படாமல் சிதறடிக்கப்படுகிறது என்பது தான் உண்மை. முறைப்படுத்தப்படாத கல்வி உதவித்தொகையால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பெரும்பாலான பணம் கல்விக்காக அல்லாமல் பலநூறு மாணவர்களின் பாக்கெட் மணியாக கரைந்து போகிறது என்பதும் நடைமுறை உண்மை.

•    கல்வி நிலையங்கள் துவங்காத சமுதாய அமைப்புகள்

இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் சமுதாய இயக்கங்களை தங்கள் கல்வி நிறுவனங்களுக்குள் ஊடுருவ அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் கல்வி விழிப்புணர்வு பேசும் எந்த ஒரு சமுதாய இயக்கங்களும் தங்கள் பங்கிற்கு ஓரிரு உயர்கல்வி நிலையங்களையாவது உருவாக்குவது பற்றி இது வரை சிந்திக்கவும் இல்லை. இதை சாதிப்பதற்கான திறனும் ஆற்றலும் இருந்தும் சமுதாய இயக்கங்கள் ஒதுங்குவதும் புரியவில்லை.

•    பணத்திற்காக படிக்கும் மாணவர்கள்

கல்வி ஆர்வலர்களும் சமுதாய அமைப்புகளும், அரசு மற்றும் சிறுபான்மை பிரிவுகளும், வெளிநாட்டு வாழ் தனவந்தர்களும் கல்விக்காக ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய அதிக அளவு ஆர்வம் காட்டும் காலகட்டம் இது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிறு எண்ணிக்கையில் பெற்றோர்களும் மாணவர்களும் கல்வி உதவி தொகையை பல இடங்களில் பெறுவதில் படிப்பதை காட்டிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது ஒரு கசப்பான உண்மை. ஒரு பட்டப்படிப்பிற்கு ஒரு ஆண்டு ஆகும் செலவை காட்டிலும் ஐந்து மடங்கு வசூல் செய்யும் அவலமும் மறைமுகமாக நடக்கிறது. இதனை, ‘படிக்கும் மாணவர்கள் தானே போகட்டும்’ என்று ஜீரணித்துக்கொண்டாலும் இந்த மனநிலையில் உள்ள மாணவர்கள் மூன்று, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பட்டப்படிப்பையும் சரியாக முடிக்காமல் வெளியேருகின்றனர் என்பதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை. முறைப்படுத்தப்படாத கல்வி உதவி இது போன்ற முறையற்ற மாணவர்களை வளர்க்க வழி வகுக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச்சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் , நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்.  ( நபி மொழி) 

தொடர்புடைய ஆக்கங்கள்:

கல்விக்கான தேடலில்..!

Related Post