– தமிழில் : மு.அ. அப்துல் முஸவ்விர்
அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 8
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரையும் அன்னாரின் தூதுத்துவத்துக்கு முன்பான வாழ்வும்!
பார் போற்றும்அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரை
அசத்திய அல்-ஃபுதவ்ல் ஒப்பந்தம்
மேற்சொன்ன போர்களின் முடிவில் அமைதி உடன்படிக்கை ஒன்றை அடைய இருதரப்பாரும் முன்வந்தனர். வளர்ந்து வரும் வன்முறை மற்றும் அநீதிகளை முடிவுக்குக் கொண்டு வரவும், பலவீனமான மற்றும் நிராயுதபாணியான மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மக்கா மாநகரில் இத்தகையதொரு அமைதி ஒப்பந்தம் அவசியம் என மக்கள் உணர்ந்தனர். பனூ ஹாஷிம், பனூ அல்-முத்தலிப், பனூ அஸத் மற்றும் பனூ ஜுஹ்ரா ஆகிய கோத்திரங்களின் பிரதிநிதிகள், அப்துல்லாஹ் பின் ஜதா’அன் என்பாரின் இல்லத்தில் குழுமினர்.
தான் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிது காலத்தில், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள், பிறிதொரு முறை கூறினார்கள்:- ‘அப்துல்லாஹ் பின் ஜதா’அன் இல்லத்தில் நடந்த அமைதி ஒப்பந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். அந்த நிகழ்வு எனக்கு, செந்நிற ஒட்டகங்கங்களைக் காட்டிலும், விலைமதிப்பற்ற ஒன்றாக பட்டது. இஸ்லாம் (தனது சிறகை விரித்து) வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், அத்தகையதொரு சந்திப்புக்கு நான் அழைக்கப்பட்டால், அதில் எனது ஆக்கபூர்வ பங்களிப்பை நல்குவேன்’ என்று முகமலர்ந்து கூறினார்கள்.
தூயவர் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் துவக்ககால பணி
தனது இளமைப் பருவக் காலத்தின் ஆரம்பத்தில், இளைஞர் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதொரு பணி எதனையும் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால், மக்காவில் பனூ ஸஅத் கோத்திரத்தாருக்காக ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வநததாக அறிகின்றோம். தனது நம்பிக்கi, நேர்மை, இரக்கம் போன்ற நற்பண்புகளின் காரணமாக,அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘அல்-அமீன்’ (உண்மையாளர்) எனும் சிறப்புப் பட்டத்தைப் பெற்றார்கள். தனது 25-ஆவது வயதில், பெரும் செல்வச் சீமாட்டியும், கண்ணியத்துக்கும் உரிய வணிகப் பெண்மணியாக விளங்கிய கதீஜா பின்த் குவைலித் எனும் அம்மையாருக்காக ஒரு வணிகராக சிரியா தேசம் சென்றார்கள்.
அம்மையார் அவர்கள், தனது வணிகத்துக்காக ஆண்களை பணிக்கு அமர்த்தியிருந்தார்கள். அதற்காக அவர்களுக்கு இலாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் ஊதியமாக வழங்கி வந்தார்கள். குறைஷியர் பெரும்பாலும் வணிகர்களாக இருந்தனர். அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் நேர்மை, இரக்கம் உள்ளிட்ட நற்குணங்கள் குறித்து அம்மையார் கதீஜா பிராட்டியாரின் செவிகளில் விழுந்தபோது, அம்மையார் அவருக்கு தூது அனுப்பினார்கள். சிரியா சென்று தனது வணிகத்தை மேற்கொள்ளவும், அதற்காக பிறருக்கு அளிப்பதைக் காட்டிலும் அதிக ஊதியத்தை அவருக்கு வழங்குவதாகவும் கூறினார்கள். தனது அடிமையான மைசறா என்பாரையும் அவருடன் அனுப்பி வைப்பதாகக் கூறினார்கள். அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களும், அம்மையாருடைய பணியாளுடன், சிரியா தேசம் சென்று வணிகம் செய்ய ஒப்புக் கொண்டார்கள்.
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali

