– வலம்புரி ஜான்
வசந்தத்தின் வேர் இஸ்லாம்..! அல்லாஹ்வை எவ்வாறு மதிப்பிட வேண்டுமோ அவ்வாறு அவர்கள் மதிப்பிடவில்லை. அதனால்தான் “அல்லாஹ் எந்த மனிதன் மீதும் எதனையும் இறக்கிடவில்லை” என்று அவர்கள் கூறினார்கள். “மூஸா கொண்டு வந்த வேதத்தை இறக்கியவன் யார்?” என்று அவர்களிடத்தில் நீர் கேளும்! அதுவோ மனிதர்களுக்கு ஒளியாகவும், நேர்வழியாகவும் திகழ்ந்தது. அதனை நீங்கள் பகுதி பகுதிகளாய்ப் பிரித்து அதில் சிலவற்றை வெளிப்படுத்துகின்றீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்து விடுகின்றீர்கள். மேலும், நீங்களும் உங்களுடைய மூதாதையர்களும் அறிந்திராதவையெல்லாம் எதன் மூலம் உங்களுக்குப் புகட்டப்பட்டதோ அதனை இறக்கியவன் யார்? “அல்லாஹ்தான்” என்று கூறுவீராக! அவர்களைத் தங்களின் வீண் விவாதங்களிலேயே விளையாடிக் கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக!
இஸ்லாம் – ஒரு நாடு கடந்து வந்த நதி:
நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு.இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சத்திய ஆவேசம் அதில் தகித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் செய்தி குறிப்பிட்ட வகுப்பாருக்கு உரியதில்லை. இஸ்லாமியச் செய்தி உலகம் முழுவதற்கும் உரியது. காரணம் இறைவன் ‘ஆதமின் மக்களே!’ என்று அழைத்து அந்தச் செய்தியைப் பொதுமைப் படுத்துகிறான். இஸ்லாத்தில் வருகிற அல்லாஹ், ஆண்டவனுக்கான அரபுப் பெயரே தவிர, அவன் அரேபியர்களின் ஆண்டவன் மாத்திரம் அல்லன்.
அவன் எல்லா உலகங்களின் இறைவன் (திருகுர்ஆன் 1:1)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் மனித குலம் அனைத்திற்கான இறைத்தூதர் ஆவார்.
ஓ மக்களே! நான் உங்கள் எல்லோருக்குமான இறைத்தூதன்: (திருக்குர்ஆன் 8:158)
சகல நாடுகளுக்குமான அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் (திருகுர்ஆன் 25:1)
எல்லா நாடுகளுக்கும் உம்மை இரக்கத்தின்படியே அனுப்பியிருக்கிறோம். (திருகுர்ஆன் 21:102)
இஸ்லாத்தைப் போல பிற எந்தச் சமயமும் உலக சகோதரத்துவத்தை வற்புறுத்தவில்லை. இஸ்லாம் ஒரு குறுகிய பிரிவினைச் சபை அல்ல. இது இஸ்லாத்தின் உள்ளொளியும், ஆற்றல் களமும் ஆகும், இஸ்லாம் மனித குலத்தின் மனச்சாட்சிக்கு ஒட்டுமொத்தமாக அறைகூவல் விடுக்கிறது. எல்லாப் படைப்புகளும் இறைவனைச் சார்ந்தவையே, அவனது படைப்புகளைச் சிறப்பாக நேசிக்கிறவனே, அவனால் அதிகமாக அன்பு செய்யப்படுகிறவன் ஆவான் என்கிறார். இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்)
மேலும் அவரே குறிப்பிட்டதாவது: ஷஎன் அருமை எஜமானே! என் உயிரின் மற்றும் எனது எல்லாவற்றிற்குமான கர்த்தாவே! உலகத்தில் உள்ளோர் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே என்று உறுதி கூறுகிறேன்.
கடவுளின் வழிகளைக் கனம் பண்ணுங்கள், கடவுளுக்குச் சொந்தமான உலகப் படைப்பினிடம் அன்பு பாராட்டுங்கள். ஆகவே செயற்கைப் பிரிவுகளால் உருவாகிற வேறுபாடுகள், தடைகள் ஆகியவற்றை இஸ்லாம் ஏற்பது இல்லை.
இஸ்லாம் அரேபியர்களுக்காக இறக்கப் பட்டதைப்போல் தோற்றமளிக்கிறது. ஆனால் உலகத்திற்காக, அனைத்து மக்களுக்குமாக அது இறக்கப்பட்டது என்பதை ஏற்காமலிருந்தால் அது மனித குலத்திற்கு தான் மாபெரும் இழப்பாகிப் போகும்.
இஸ்லாம், சர்வதேச வாழ்க்கை முறையை எவ்வாறு அங்கீகரிக்கிறது, என்று பார்ப்பது நலம். ஒரு இஸ்லாமிய குடியரசிற்கும் அல்லது அரசாங்கத்திற்கும் மற்ற நாடுகளுக்குமான உறவு முறைகளை இது குறித்துக் காட்டுகிறது. இம்மாதிரியான உறவுமுறைகளும் இறைவனின் கட்டளைப்படியே அமைந்திடல் வேண்டும். இதற்கான அடிப்படைகளை இப்போது பார்க்கலாம்.
மனிதத் தொடக்கம், மனிதனின் நிலை, அவனது சமுதாய நோக்கம். ஆகியவற்றில் உள்ள ஒரே மனித சமுதாய உணர்வின் மீது அசைவற்ற நம்பிக்கை வைத்திருப்பது (திருகுர்ஆன் 4:1, 7:189, 49:13)
மற்றவர்களாக ஆக்கிரமிப்பில் ஈடுபடாத வரை அவர்களது உயிர், உடமை, உரிமைகளுக்கு பாதுகாப்புத் தருவதில் உறுதியாக நிற்பது. (திருகுர்ஆன் 2:190-193,42:42)
நாடுகளுக்கு இடையிலான நல்லெண்ணத் தின் அடிப்படையில் சமாதானத்தை உறவு முறைகளில் கடைபிடித்தல். (திருகுர்ஆன் 8:61)
இஸ்லாமிய அரசாங்கத்தின் இறையாண்மைக்குச் சவால் விடுத்து, அதன் உரிமைகளைக் காலில் இட்டு மற்ற நாடுகள் மிதிக்கிறபோது, வேறு வழிகள் பயன் தராவிட்டால் தற்காப்பிற்காகப் போரிடலாம். (திருகுர்ஆன்; 2:190-195,216,218, 22:39-41)
மற்ற நாடுகள் பிரமாணிக்கமாக இருக்கிறவரை அந்த நாடுகள் செய்து கொண்ட உடன்படிக்கைகளை மதித்தல்-நிறைவேற்றுதல். (திருகுர்ஆன் 5:1, 8:55-56,58, 9:3-4)
உள்நாட்டில் அமைதியைக் கட்டிக் காத்து, மக்கள் நலத்தை மேம்படுத்துவது மாத்திரம் போதாது: ஒவ்வொரு இஸ்லாமிய அரசும், மனித குலத்தின் ஒட்டுமொத்தமான, பொதுவான முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டும். இதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே வற்புறுத்தி வந்தார்கள். ஆகவே, உலக நலத்திற்காகச் சில சமயங்கள் பிரார்த்திப்பதோடு நின்று விடுகிற நாட்களில், மனித குல ஈடேற்றத்திற்காக முன்நிற்பதை, உழைப்பதை இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது. ஆகவேதான் இஸ்லாத்தை நாடு கடந்து வந்த நதி என்று அழைக்கலானேன்.
நூல் : இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம், (வலம்புரிஜான்) பக்கம். 256-269)
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali


