வசந்தத்தின் வேர் இஸ்லாம்..!-2

– வலம்புரி ஜான்

வசந்தத்தின் வேர் இஸ்லாம்..!-2

(அந்த வேதத்தைப் போன்றே) இதுவும் ஒரு வேதமாகும். இதனை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம். இது அருள்வள மிக்கதாகவும், தனக்கு முன்னால் வந்த வேதத்தை மெய்ப்படுத்துவதாகவும் இருக்கின்றது. மேலும், இத்தலைநகரத்திலும் (மக்காவிலும்) அதன் சுற்றுப்புறங்களிலும் வசிப்பவர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் இது அருளப்பட்டுள்ளது. மேலும், எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்

வசந்தத்தின் வேர் இஸ்லாம்..!-2

வசந்தத்தின் வேர் இஸ்லாம்..!

கள் இவ்வேதத்தையும் நம்புவார்கள்; தமது தொழுகையிலும் பேணுதலாக இருப்பார்கள்.

இஸ்லாம்: ஒரே உலகத்திற்கு நம்மை அழைக்கிற ஒளிவிளக்கு…
உலகத்தின் பல்வேறு சின்னதும் பெரிதுமான பிரசங்கத் தொட்டிகளிலிருந்து ஒரே மாதிரி எடுத்துச் சொல்லப்படுகிற தத்துவார்த்தம் ஒன்று உண்டென்றால் அது ஒரே உலகம் தான்.

உலகம் ஒன்றாக இல்லை என்பதற்குக் காரணம், உலகத்தின் அடிப்படை அழகான மனிதனும் ஒன்றானவன் இல்லை என்பதுதான். அடையாளம் காண்பதற்காகவே மனிதன் வெவ்வேறாகப் படைக்கப்பட்டான். இப்படித்தான் திருகுர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் உலகம், மதம், மொழி, இனம், நாடு என்கிற அடித்தளத்தில் பிரிந்தும், பிளந்தும் கிடக்கிறது.

ஒருவரிடமிருந்து, மற்றொருவர் எதற்காக வேறுமாதிரி படைக்கப்பட்டாரோ அந்த அடிப்படை அவசியத்தையே மனிதகுலம் தாறு மாறாக்கி விட்டது. தாமஸ் மூரிலிருந்து, ஹெச்.ஜி. வெல்ஸ் வரை-அவருக்குப் பிற்பாடும் ஒரே உலகம் கனவுலக சஞ்சாரமாகவே அமைந்துள்ளது.
இப்போது பல்வேறு நாடுகளின் அரசுப் பிரதிநிதிகளின் இரவு உணவுக்குப் பின்னரான மயக்கம் கலந்த பேச்சுகளில் மாத்திரமே இந்த ஒரே உலகம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அமைதி, முன்னேற்றம், செழிப்பு ஆகியவை வழிநடத்தும், புதிய ஒரே உலகத்திற்கான அறைகூவலை இஸ்லாம் முன்வைக்கிறது. இஸ்லாம் ஒன்றுதான் அந்த ஒரே உலகத்திற்கான வழி என்பதாகத் தோன்றுகிறது. உலகின் ஒருமை என்பது சில சமுதாயங்கள் ஒன்று சேர்ந்து விடுவது அன்று. சில நாடுகள் ஒரு தலைப்படுவதும் அன்று. இவ்வாறான ஏற்பாடு செய்யப்படுகிற அமைதி, கடந்த காலத்தில் உலக அமைதிக்கே குந்தகம் உண்டாக்கியிருக்கிறது. வரலாற்றில் இதற்கு நிரம்ப உதாரணங்கள் உண்டு. ஒருவர் மற்றொருவரைத் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொன்றால் அது தண்டனைக்குரிய குற்றம் என்றாகி விடுகிறது.

ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கொல்லுகிறபோது, அதன் ஆத்மாவை நெறித்து அழிக்கிறபோது, வெற்றி பெறுகிறவர்களும், தோற்றுப்போகிறவர்களும் தங்களுக்காகப் போரிட்டவர்கள், படுகொலைகளில் ஈடுபட்டவர்களைப் பாராட்டி மகிழுகிறார்கள்.
ஆகவேதான் சில வேளைகளில் ஒரு நாடு கரை கடந்த தேசப்பற்றால் எரிகிறபோது அது ஒரே உலகம் என்கிற தத்துவத்தற்கு எதிராக போகிறது.

தேசப்பற்று அவசியமே. அது அடுத்த நாட்டை வெறுப்பதாக இருத்தல் ஆகாது. நாடு, நாமே ஏற்றுக்கொண்ட ஏற்பாடுதானே! இதில் அடுத்த நாட்டை வெறுப்பதற்கு எங்கே இடமிருக்கிறது?

இவ்வளவு முயன்றும் ஒரு நாட்டை ஏன் நம்மால் ஒற்றுமைப்படுத்த முடியவில்லை? எந்த அடிப்படைகளில் நாட்டு மக்களை ஒன்று சேர்க்க முயலுகிறோமோ, அந்த அடிப்படைகளே தவறானவையாக இருக்கின்றன. இன அடிப்படையில் தனது மக்களை ஒன்று சேர்க்க ஒருவர் முயலுகின்றார். சமயப் பிரிவினைகள் தலைதூக்குகிறபோது, இன ஒற்றுமை எடுபடாமல் போகிறது.

மற்றொருவர் சமய அடிப்படையில் தமது மக்களை ஒன்று திரட்ட முனைகின்றார். இனப் பிரிவுகள் தலைகாட்டி இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிகின்றன. தேசீயம் என்கிற அடிப்படையில் வேறொருவர் மக்களை ஒன்று திரட்ட முற்படுகிறார். ஆனால், பல்வேறு மொழிகள், மொழி உணர்வுகள், அதனதன் வரலாறுகள், செழுமைகள், பாரம்பரியங்கள் தேசீய அடிப்படையில் சேர இயலாமல் இந்த முயற்சியை அழித்து விடுகின்றன. காரணம் மொழிதான் மனிதனின் கடைசியான மானச் சின்னம். அந்த மொழியை அவமானப் படுத்திவிட்டு, நாட்டொருமை பேசுவது வீண்வேலை.

ஒருவர் மொழி அடிப்படையில் அம்மொழி பேசுவோரை ஒன்றிணைக்க முயலுகின்றார். அதிலும் அவர் தோல்வியே பெறுகின்றார். காரணம் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பணம் படைத்தோர் என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தலைகாட்டி விடுகின்றன. நீங்கள் ஒன்றாக்க நினைக்கிற மனிதத் தொகுதி மண்புழுவைப் போல பிரிந்து கொண்டே போகிறது! ஏன்?

மனிதர்களைப் பிரிக்கிற, பேதப்படுத்துகிற அடிப்படை அலகுகளை வைத்துக் கொண்டு அவர்களை ஒன்று சேர்க்கிற மடத்தனத்தில் இவர்கள் இறங்குகிறார்கள், இம்மாதிரியான தவறான முயற்சிகளுக்கும் வரலாற்றில் வெற்றி வந்ததுண்டு. ஆனால் அந்த வெற்றி நீடித்ததாகவோ, நிலைத்ததாகவோ இருந்ததில்லை.

முதலாவதாக நம்மில் ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தில் ஒரு மகத்தான மகரந்தம் மாத்திரமே என்பதை உணர வேண்டும். வானத்தை, அதில் இயங்கும் பல்வேறு கோளங்களை, தாளகதி தப்பாமல் இயங்கும் உடுக்களை, இரு சுடர்களை எண்ணிப் பார்த்தால் இயற்கையில் ஒரு ஒழுங்கு இருப்பது புலப்படும்.

காஸ்மாஸ் (cosmos) என்கிற வார்த்தைக்கே ஒழுங்கு என்பதுதான் அடிப்படைப் பொருள். பஞ்சபூதங்களும் ஏவல் செய்கிற பேராண்மை நம்மை வியக்க வைக்கிறது. இவற்றையெல்லாம் இயக்குவோன் யார்? எந்தப் பெயராலும் அவனை அழைத்துக் கொள்ளுங்கள்.

Related Post