இஸ்லாத்தை புதைக்க நினைக்கும் புல்லுருவிகள்..!உலகளாவிய அளவில் திரிந்து வரிந்துகட்டி நிற்கின்றார்கள்..!
ஆம்..!காட்சித் தாக்குதல்கள் கவைக்குதவாததாக ஆகிவிட்டதால்,இறைவனின் மார்க்கத்தையும், அவனது புகழ் பாடும் அடியார்களையும் சிந்தனைத் தாக்குதல் தொடுத்து, அழித்தொழிக்க நினைக்கும் நவீன ஃபாரோக்கள்..!
ஆம்..!
நம்பிக்கையாளர்களின் உயிருக்கும் மேலானவரும்,உலகத்தார் அனைவருக்கும் அருட்கொடையாகவும் இருக்கின்ற அண்ணலார் (ஸல்) அவர்களை அவமதிப்பதாகக் கருதிக் கொண்டு, குறுமதியாளர்கள் எடுத்த குறும்பட சர்ச்சையின் சூடு ஆறுவதற்குள், தமிழுலக முஸ்லிம்களைக் கொதித்தெழச் செய்திருக்கின்றது ஒரு தமிழ்ப்படம்..!
துப்பாக்கி என்று வன்முறைக் காட்சிப்படுத்தல் உபகரணத்தையே தன் தலைப்பாகக் கொண்ட அப்படம்,திரைப்பட உலகம், பல்வேறு காலகட்டங்களில் இதுநாள்வரை சித்தரித்து வந்த,நல்ல அல்லது தீவிரவாத முஸ்லிம் கதாபாத்திரங்களின் காட்சிப்படுத்தல்களையெல்லாம் தாண்டி ஒரு அபாயகரமான சிந்தனையை முன்வைக்கின்றது.
ஆம்..!
எண்பதுகள் வரை திரைப்படங்கள், குறிப்பாக தமிழ்த் திரைப்படங்கள் ஒரு முஸ்லிம் கதாபாத்திரத்தின் கழுத்தில் தாயத்தை மட்டும் கட்டித் தொங்கவிட்டாலும், குறைந்தபட்சம் அவர்களை நல்லவர்களாகத்தான் காட்டி வந்தன.பாபரி மஸ்ஜித் இடிப்பு,மும்பை குண்டுவெடிப்புக்களுக்குப் பிறகு தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி அவர்களைக் காட்டின.ஆனால், இரட்டைக் கோபுரங்கள் தாக்குதலுக்குப் பின்னர், நிலைமை முற்றிலும் தலைகீழ்..!தீவிரவாதம் என்பது முஸ்லிம்,இஸ்லாம் என்பதாகவே காட்டப்பட்டது.
இந்நிலை வரையில் காட்டப்பட்டிருந்தாலும், வேறு ஏதோ வகையில் ஒருசில நல்ல கதாபாத்திரத்துக்கு உரியவர்களாக முஸ்லிம் குணநலன் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டும் வந்தது.
ஆனால்,இயக்குநர் அன்பர் முருகதாஸ்,இவற்றையெல்லாம் தாண்டி,வன்முறை,தீவிரவாதம்,வகுப்புவாதம் ஆகிய அனைத்தையும் வெறும் கதாபாத்திரமாக அல்லாமல், சிந்தனா ரீதியாக ஒரு ஆபத்தான விதையை ஊன்றியிருக்கின்றார்,அமைதியான நிலங்களில்..!
கதாபாத்திர காட்சிப்படுத்தல் என்பது அந்த கதாபாத்திரத்துடன் நின்றுவிடும்.ஆனால், துப்பாக்கி அந்த கதாபாத்திரங்களை முஸ்லிம்களாக ஆக்கியதுடன் நிற்காமல், அந்த முஸ்லிமகளை சாதாரணமானவர்களாக உலவ விட்டதுடன்,அவர்களைக் குறித்து மாற்றார் மனத்தில், அதுவும் சாதாரண மக்கள் மத்தியில் அதிபயங்கர சந்தேகக் கிளர்ச்சியை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியது.
வெகுஜன ஊடகமாகிய சினிமா, பாமரர்களையும் எளிதில் சென்றடையக்கூடியது.வணிக நோக்கத்துக்காக என்று சப்பை கட்டிக் கொண்டு,ஒரு அபாயகரமான சிந்தனையை உள்வாங்கி, இயக்குநர் இப்படத்தை முன்வைத்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.எனது ஊர்க்காரர்கள் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்று படஇயக்குநரும்,அடுத்த படத்தில் முஸ்லிமாக நடிப்பேன் என்று துப்பபாக்கி நடிகரும் ‘ஆறுதல்’ மொழி கூறுவது செய்திக்கு வேண்டுமென்றால் சுவாரஸ்யம் தரலாம்.ஆனால்,பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் வளர்ந்துவரும் பாசிச சக்திகளின் இன்னொரு வடிவமாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது இப்படத்தையும்.மறுபுறம் ஏதேனும் ஒரு அசமபாவிதம் நடைபெறும் இடங்களை முன்னிலைப்படுத்தி இதுபோனறு திரைப்படங்கள் எடுத்து கல்லா கட்டுவதும், அதற்கு பகடைக்காய்களாக முஸ்லிமும்,இஸ்லாமும் பயன்படுத்தப்படுவதையும் இனியும் ஊடகங்கள் குறிப்பாக திரைஊடகம், கைவிடவேண்டும். முஸ்லிம்களை மட்டுமல்ல, வேறு ஏதேனும் குறிப்பிட்ட சமூகத்தினரை பொத்தாம் பொதுவாக, இதுபோல் சித்தரித்தாலும் எமது நிலைப்பாடு இதுவாகத்தானிருக்கும்.
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali
