– மவ்லானா ஸஃபீயுர் ரஹ்மான்
– தமிழில் : மு.அ. அப்துல் முஸவ்விர்
அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 5
அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரையும் அன்னாரின் தூதுத்துவத்துக்கு முன்பான வாழ்வும்!
பார் போற்றும்அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரை
எல்லாம் வல்ல இறைவன் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு பாக்கியமும் பேறும், மதிப்பும் மரியாதையும் மிக்க மூதாதையர் பரம்பரையை வழங்கினான். அன்னாரின் மூதாதையர் தொடர், இப்பராஹீம் (அலை) அவர்களின் குமாரராகிய இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்கள் வரை நீளுகின்றது. அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒருமுறை கூறினார்கள்: வல்ல இறைவன் தனது அடியாராகிய இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்கள் அனைவரிலிருந்தும் கினானா அவர்களை தூய்மைப்படுத்தித் தேர்ந்தெடுத்துக் கொண்டான். மேலும், கினானாவின் பிள்ளைச் செல்வங்களிலிருந்தும், குறைஷியரை தேர்ந்தெடுத்துக் கொண்டான். அந்தக் குறைஷியரிலிருந்தும் பனூஹாஷிம் கோத்திரத்தாரையும், பனூ ஹாஷிம் கோத்திரத்தாரிலிருந்து என்னையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான். (ஆதாரம்: முஸ்லிம்)
அவர் முஹம்மத் (ஸல்)! .. பின் அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப் பின் ஹாஷிம் பின் அப்த் முனாஃப் பின் குஸை பின் கிலாப் பின் முர்ரா பின் க’அப் பின் லோ’இ பின் காலிப் பின் ஃபஹர் பின் மலிக் பின் அந்-நத்ர் பின் கினானா பின் குஸைமன் பின் முத்ரிகா பின் எலியாஸ் பின் முதர் பின் நிஸார் பின் ம’அத் பின் அத்னான்..!
அண்ணலார் (ஸல்) அவர்களுடைய மூத்த முப்பாட்டனார் ஹாஷிம் அவர்களின் பெயரிலிருந்தே அன்னாருடைய பரம்பரை ஹாஷிமி என்று வழங்கப்பட்டது. அரபிய தீபகற்பத்தில் மிகவும் மதிப்பும் மரியாதையும் மிக்க குலத்தவராக விளங்கிய குறைஷ் எனும் அரபிய குலத்தை சேர்ந்தவர்தாம் அண்ணலார் (ஸல்) அவர்கள்.,!
அண்ணல் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்
1. ஹாஷிம் புனித யாத்திரிகர்களுக்கு உணவு மற்றும் நீர் வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்தார் இவர். ஹாஷிம் அவர்கள் செல்வந்தர், நேர்மையாளர். புனித யாத்திரிகர்களுக்கு முதன் முதலில் ரொட்டி உணவை வழங்கியவர் இவரே!அன்னாருடைய இயற்பெயர் அம்ர் என்பது! ஆனால், பிற்காலத்தில், (புனித யாத்திரிகர்களுக்கு) ரொட்டி பிசைந்து தயாரிக்கும் பணியை மேற்கொண்டதால், அவருக்கு இந்த புனைப்பெயர் வந்தது. மேலும். குறைஷ்களின் (பிரசித்தி பெற்ற) கோடை மற்றும் குளிர்கால இரட்டைப் பயணங்களை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவரும் இவரே!
2. அப்துல் முத்தலிப் ஹாஷிம் அவர்களின் மரணத்துக்குப் பின்னர், புனித யாத்திரிகர்களுக்கு உணவு மற்றும் நீர் வழங்கும் பொறுப்பு, அவருடைய மகனாராகிய அப்துல் முத்தலிப் அவர்களிடம் வந்தது.குறைஷ் குலத்தவரின் பெருந்தலைவராக விளங்கியவர் இவர்.அவருக்கு பத்து புதல்வரும் ஆறு புதல்வியரும் இருந்தனர்.
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali

