அலிஃப், லாம், மீம், இவை ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களாகும். இது நற்செயல் புரிபவர்களுக்கு வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் திகழ்கின்றது. அவர்களோ தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள். ஜகாத்தைக் கொடுக்கிறார்கள். மேலும், மறுமையை உறுதியாக நம்புகின்றார்கள். இத்தகையவர்கள்தாம் தங்கள் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருக்கிறார்கள். மேலும், இவர்கள்தாம் வெற்றி பெறுபவர்கள். மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அவர்கள், எவ்வித அறிவுமின்றி மக்களை அல்லாஹ்வின் வழியை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அந்த வழியி(ல் வருமாறு விடுக்கப்படும் அழைப்பி)னை ஏளனம் செய்வதற்காகவும்தான்! இத்தகையோருக்கு இழிவுபடுத்தும் வேதனை உள்ளது. அவனிடம் நம் வசனங்கள் ஓதிக்காண்பிக் கப்பட்டால், அவனுடைய காதுகளில் மந்தம் ஏற்பட்டிருப்பது போன்றும், அவற்றை அவன் கேளாதது போன்றும் தற்பெருமையுடன் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றான். எனவே, துன்புறுத்தும் வேதனை குறித்து அவனுக்கு நற்செய்தி கூறிவிடும்! ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு அருள் நிறைந்த சுவனத்தோப்புகள் உள்ளன. அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். மேலும், இது அல்லாஹ்வின் வலுவான வாக்குறுதியாகும். அவன் வலிமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். அவன் உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானங்களைப் படைத்துள்ளான். மேலும், அவன் மலைகளை பூமியில் ஊன்றியுள்ளான்; அது உங்களோடு சேர்ந்து சரிந்துவிடக்கூடாது என்பதற்காக! மேலும் எல்லாவிதமான பிராணிகளையும் பூமியில் பரவச் செய்திருக்கின்றான். மேலும், வானிலிருந்து மழை பொழிய வைத்து பூமியில் விதவிதமான பயன்மிகு தாவரங்களை முளைக்கச் செய்தான். இவை யாவும் அல்லாஹ்வின் படைப்புகள்! இனி அவனை விடுத்து மற்றவர்கள் என்ன படைத்துள்ளனர் என்பதை எனக்குக் காட்டுங்கள்! உண்மை யாதெனில், அக்கிரமக்காரர்கள் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். திருக் குர்ஆன் 31:1-11
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali
