
அதிகார போதையும், ஆதிக்க மனப்பான்மையும் மனிதனை மிருகமாக்கிடும் கள்ளத்தனங்கள்..! நரமாமிச வேட்டையாடும் களங்கள்..! அவற்றை ஆகுமானவர்கள் அடைந்திட தேவை நற்கரங்கள்..! மிருக வேட்டை மனிதர்கள் வேட்டையாடப்பட வேண்டிய தருணங்கள்..!
-மு.அ. அப்துல் முஸவ்விர்
அதிகார போதையும், ஆதிக்க மனப்பான்மையும் மனிதனை மிருகமாக்கிடும் கள்ளத்தனங்கள்..! நரமாமிச வேட்டையாடும் களங்கள்..! அவற்றை ஆகுமானவர்கள் அடைந்திட தேவை நற்கரங்கள்..! மிருக வேட்டை மனிதர்கள் வேட்டையாடப்பட வேண்டிய தருணங்கள்..!
சலசலக்கும் ஓடைகளும், கண்கொள்ளாக் காட்சியாய் சிலிர்த்து விழும் அருவிகளும் நிறைந்து.., பறவைகளின் கீச்சொலிகள் இரம்மியமாய் செவிக்கு விருந்தளித்து.., எங்கு நோக்கினும் பச்சை பசேலென்ற புல்வெளிகள் பரந்து.., வகைவகையான மரங்கள் செழித்து வளர்ந்து, எங்கும் அடர்ந்து.., மென் விலங்குகளும்.., வன்விலங்குகளும்.., தத்தமது நிலங்களில் திரிந்து…, தனக்கேயுரிய ஆளுமையுடன் நிறைந்திருக்கின்றது காடு…!
அனைத்து விலங்குகளும் தத்தமது வழியில்.., ஒருவர் மற்றவர்களுடன் சகோதரமாய் பழகுகின்றனவோ.., இல்லையோ…, குறைந்தபட்சம் பரஸ்பர உணர்வுகளுக்குக் கண்ணியமளித்தும், உணர்வுகளைக் காயப்படுத்தாமலும் வாழ்ந்து வந்தன அந்த வேற்றுமை நிறைந்த ஒழுக்க காட்டில்..!
ஆனால்..,
அவற்றிடையே இருந்த ஓநாய் ஒன்றுக்கு திடீரென்று காட்டுக்குத் தலைவனாக வேண்டும் எனும் ஆசை..! தனது ஆளுமை தேசத்தில் வந்து சிக்கும் அப்பாவி விலங்குகளைப் பலிகொண்டு பசியாறும் அந்த ஓநாய்ப்புத்தியில், இந்த ஆதிக்க வெறி எத்துணை அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. தனது தற்போதைய தலைமைத்துவத்துக்குட்பட்ட பிரதேசத்தில் அழிச்சாட்டியம் செய்து கொண்டு, அப்பாவி ஆட்டுக்குட்டிகளை விட்டு வைக்காது கொன்று குவித்து வேட்டையாடிவிட்டு, அதெல்லாம் சகஜம் என்று போகும் அந்த ஓநாய், முழு காட்டில் இருக்கும் உயிரினங்களையும் தன்வசப்படுத்த நப்பாசை கொண்டது.
ஆதலால், போலியாகப் புனைந்த தன் பிரதேச வளங்களை மற்ற அப்பாவி உயிரினங்களிடம் சொல்லி, தன் போலி ஆளுமையை விளம்பரப்படுத்திக் கொண்டது. தன் இனம் சார்ந்த அல்லது சாராத பிற உயிரினங்களையும் ஒன்றுபடுத்திக் காட்டும் போலி சாட்சியங்களை முன்னிறுத்தி தனக்கு ஆதரவளிக்க சேர்த்துக்கொண்டது.
ஆட்சியதிகாரத்தில் கொஞ்சம் வந்தால் போதும் எனும் எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்பட்ட சில அதே ஜாதி விலங்கினங்களும், ஓநாய் வலையில் விழ ஆரம்பித்தன. எங்கும் அந்த ஓநாய் பேச்சு நிலவும் வண்ணம், நரிக்கூட்டங்களையும், எல்லாவற்றுக்கும் தலையாட்டும் எருமை மாடுகளையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டன, அந்த ஓநாய்க்கு வக்காலத்து வாங்கும் பிற உயிரினங்கள்..! அனைவருக்கும் குளிரச்சி தரும் ‘அருவி’களும் அந்த ஓநாய்க்கு உச்சி குளிர் ஆதரவை அளித்தன. ஓநாயும் தனது ‘மோடி’ மஸ்தான் வேலையை செயற்படுத்த காடெங்கும் தனது பயணத்தை ஆரமபித்தது. தன்னை விரும்பாத ஆட்டுமந்தைகளின் ஆதரவும் தனக்கு உண்டு என நிரூபிக்க, தனது இன உயிரினங்களுக்கே ஆட்டுத்தோல் உடுத்தி தன் பிரச்சாரத்தில் அவர்களை சேர்த்து வைத்தது.
காட்டுக்கு இராஜாவான ‘சிங்’கமோ தனது ஒரு சில அதிருப்திச் செயல்களால் நிலைமையை சமாளிக்க யோசனையில் மூழ்கியிருந்தது.
ஓநாயின் ஓம்கார மந்தப்புத்தி அறிந்த அமைதிவிரும்பி உயிரினங்களும் அழகிய காட்டின் அமைதிக்குப் பங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சும் அமைதிக் காவலர்களும் தலைமைப்போர் வரட்டும் அப்போது காட்டுவோம் தங்கள் பலத்தை என்று பேசாமல் இருக்கின்றன.
தம்மிடையே பிரிந்து கிடக்கும் ஆட்டு மந்தைகளோ, தமது இயலாமையினால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.அவற்றில் சில இயன்றவரை போர்க்கொடி தூக்கி நிற்கின்றன.
அந்த அமைதியான காடாக இருப்பது பாரத தேசம் என்று நாம் கொண்டால், மேற்சொன்ன கதைக்கு விலாவாரியான விளக்கம் தேவை இல்லை..!
பாரத்தின் அமைதிக்கு ஏகஇறைவனிடம் மட்டுமே ஏந்துவோம் கையை..! அவன் என்றும் புறக்கணிப்பதில்லை, ஒடுக்கப்பட்டோரின் உண்மை இறைஞ்சுதலை..!
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali
