குடும்பம் எங்கே..?-1

புதாபியில் இருக்கும் தோழியுடன் பேசிக்

குடும்பம் எங்கே..?-1

குடும்பம் எங்கே..?-1

கொண்டிருந்தபோது,  எப்பவும் பேசி முடித்ததும் ஞாபகம் வரும் ஒருவிஷயம், அன்று நல்லவேளை பேசும்போதே ஞாபகம் வந்தது. ‘உன் கொழுந்தனுக்குப் பெண் பார்த்துகிட்டிருந்தீங்களே என்னாச்சு?’ என்றேன். ‘ம்.. ஒரு பொண்ணு பாத்துருக்காங்க, கல்யாணம் ஒரு 6 மாசம் கழிச்சு இருக்கும்’ என்றாள். ‘ஆமா, உன் கொழுந்தனுக்கு துபாயிலதானே வேலை. கல்யாணம் ஆனதும் ஃபேமிலியைக் கூட்டிவர்றதுக்கு வசதியா, அவளை இப்பவே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணிவைக்கச் சொல்றதுதானே? உனக்கு கல்யாணத்துக்கப்புறம் எடுக்கும்போது ரொம்ப லேட் ஆச்சே?’ என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்.

‘என்னது, பாஸ்போர்ட்டா, இப்பவேவா? கிழிஞ்சுது போ!! பெண்ணைப் பற்றி விசாரிக்கும்போதே பாஸ்போர்ட் இருக்குன்னு தெரிஞ்சா உடனே ரிஜக்ட் பண்ணிடுவாங்க. அதெல்லாம் கல்யாணமாகி குறைஞ்சது ஒரு வருஷம் கழிச்சு, மாமியார் பெர்மிஷன் கிடைச்சாத்தான் பாஸ்போர்ட் அப்ளை பண்ணனும்’ என்றாள்!! ‘ஓ, அப்ப அந்த ஒரு வருஷமும் ப்ரோபஷனரி பீரியட்னு சொல்லு. மருமகப் போஸ்டிங்ல பெர்ஃபார்மன்ஸ் ஓக்கேன்னாதான் பாஸ்போர்ட்டு, ஆன் ஸைட்டெல்லாம் அப்ரூவல் ஆகுமோ??!!’ என்று சொல்லிச் சிரித்துக் கொண்டோம்.

பேசிமுடித்த பின்னரும் அதைக் குறித்த சிந்தனைகள் மனதை நிறைத்தன. பலப்பல வருடங்களாக, தமிழக முஸ்லிம்கள் அரபு நாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். ஒரு 20 வருடங்கள் முன்பு வரை, அரபு நாட்டில் வேலை செய்யும் ஒரு

குடும்பத்தோடு இருப்பது என்பது மிகமிக அபூர்வம். அதன் காரணங்கள் குறித்து யோசித்தால், அரபு நாடுகளில் தமிழக முஸ்லிம்களில் எத்தனை பேர் குடும்பத்தை உடன் அழைத்துச் செல்லுமளவு நல்ல வேலைகளில் இருந்தார்கள்? அதற்குண்டான கல்வியறிவு குறைவான சமுதாயமாக அல்லவா (அப்போது) நாம் இருந்தோம் என்பது புரிந்தது.

பின்வந்த வருடங்களில், முஸ்லிம்களிடையே இஸ்லாமிய விழிப்புணர்வோடு, கல்வி குறித்த தெளிவும் ஏற்பட ஆரம்பித்திருந்தது. ஆகையால், படிப்படியாக நம்மவர்களும் நல்ல வேலைகளில் காலூன்ற ஆரம்பித்தனர். இருப்பினும், நான் திருமணமாகி கணவரோடு அமீரகம் வந்தபோது, அதற்கு முன்பிருந்ததுபோலவேதான் குடும்பங்கள் அரிதாக இருந்தது. நல்ல வேலைகளில் இருந்தவர்கள் பலர், ஏன் இப்போது இருப்பவர்கள்கூட சிலர் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டே இருந்தது ஏனென்று புரியவில்லை. பின்னர் பேசிப் பார்க்கும்போதுதான் புரிந்தது, காரணங்களில் முக்கியமான ஒன்று:புகுந்த வீட்டினர்!!

பொதுவாகவே, மருமகள் வந்தால், மாமியாருக்கு மிக உதவியாக இருக்கும் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்பும். அதற்கேற்றாற்போலவே மருமகள்களும் பெரும்பாலும் அனுசரணையாகவே இருக்கிறார்கள். இருப்பினும், மகன் வெளிநாட்டில் இருந்தால், மகனோடு அவரின் மனைவியும் செல்வதென்பது, மாமியாரின் அதிகாரத்தை மீறிய செயலாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம், மகன் மீதான தங்கள் பிடி விலகிவிடுமோ என்ற பயமும், மறுபக்கம் மருமகளைக் கூட்டிச் சென்றால் மகனின் செலவுகள் அதிகமாகி, பெற்றோருக்கு அனுப்பும் பணம் குறைந்துவிடும் என்ற எண்ணமும் கூட இதற்குக் காரணம்.

வெளிநாடுகளில் வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணங்கள், மருத்துவம், அன்றாடச் செலவுகள் எல்லாமே இந்தியாவைவிட அதிகம்தான். ஆகையால், செலவுகள் அதிகமாகும்தான். ஆனால், அதற்காக மகன், தன் மனைவியைப் பிரிந்தே இருக்கவேண்டுமென நினைப்பது முறையல்லவே. அதிலும் மூத்த மகனாக இருந்துவிட்டால், தம்பி, தங்கைகள் எல்லாருமே அவரின் பொறுப்பு என்பது சொல்லப்படாத நியதியாகிவிட்டதால், அந்தத் தியாகத்தைச் செய்தே ஆகவேண்டுமென சமூகம் எதிர்பார்க்கின்றது. தம்பி, தங்கைகளின் படிப்பு, நல்வாழ்வு ஆகியவற்றில் அண்ணனுக்கு பங்கில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், அதைச் சாக்கிட்டு, அண்ணனின் குடும்ப வாழ்வில் கைவைப்பது ஏன்?

இஸ்லாம் கணவன் மனைவியரை ‘ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்கிறீர்கள்’ என்று சொல்கிறது. ஆடை எப்போதுமே அணிந்திருக்க வேண்டிய ஒன்று என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனில், முறையான காரணங்கள் இல்லாமல் கணவன் மனைவி பிரிந்திருக்கலாகுமா? பிரித்து வைத்தலாகுமா?

ஒரு ஆணுக்கு, குடும்பத்திற்குச் சம்பாதிப்பது மட்டுமே பொறுப்பு அல்ல. சிறந்த குடும்பத் தலைவனாக இருக்கும் பொறுப்பும் இருக்கிறதென்று’ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு உண்டு; அதுகுறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான்.’ என்ற ஹதீஸ் தெரிவிக்கிறது. மனைவிக்குக் கணவனாக மட்டுமல்ல, பிள்ளைகளுக்குத் தகப்பனாக ஆற்ற வேண்டிய கடமைகளை யாராலும் ரீப்ளேஸ் செய்ய முடியாது. மனைவியாவது கட்டாயத்தினால் சூழ்நிலைகளைப் புரிந்து தன் கவலையை மறைக்கலாம். ஆனால், சிறுகுழந்தைகள்? குழந்தைகள் தந்தையின் அன்பை முழுதாகப் பெற முடியாதவர்களாகவே வளர்கிறார்கள்.

இத்தனை கடமைகள் அந்த ஆணுக்கு தன் மனைவி, மக்களின் பேரில் இருந்தாலும், தாய்தந்தையர் விரும்பவில்லை என்ற காரணத்தினால் மனைவியை வெளிநாட்டுக்கு, அதற்கான வசதியிருந்தும் அழைத்து வராத ஆண்கள் இன்னும் உண்டு!! விளைவு? பிள்ளைகள் தகப்பனிடம் ஒட்டுதல் இல்லாமலே இருக்கிறார்கள். தகப்பனின் கண்டிப்பும் இல்லாததால் இளவயதினர் வழிகேட்டில் ஆகும் நிலைகளையும் பார்க்கிறோம். சில பெண்களும் பொருளாதாரத்தைச் சரியாகப் பேணத்தெரியாமல், கணவன் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைத் தொலைக்கின்றனர்.

தந்தையில்லாத ஒரு நண்பர், தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து, வெளிநாடு வந்து குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்கி, தங்கைகள் இருவருக்கும் திருமணம்முடித்து, சீர்வரிசைகள் செய்து, தம்பியை வேலைக்கமர்த்தி, பின் 3010 வயதில் திருமணம் செய்துகொண்டார். விடுமுறைக்குப் பின் (தனியாகத்தான்) வெளிநாடு கிளம்பிய அவரிடம் சகோதரி சொல்கிறார், ‘காக்கா, நீ எனக்குப் போடவேண்டியதில் இன்னும் 8 பவுன் பாக்கி இருக்கு, மறந்துடாதே!!’ ஞாபகப்படுத்தவில்லையென்றால், அண்ணன் பணம் முழுவதையும் மனைவிக்கு அனுப்பிவிடக்கூடுமோ??!!

இன்னும் சில பாசமலர் சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களின் கணவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும், அதற்கான வசதி இல்லாததால் தம் மனைவியை அழைத்துச் செல்ல முடியாததால் இங்கிருப்பார்கள். இவர்களுக்கு, தம் சகோதரன் மட்டும் மனைவியை அழைத்துச் செல்வது பொறுக்காது. ஏதாவது சொல்லி, தம்பதியரிடையே பிரச்னைகளை உருவாக்குவார்கள்.

அமீரகத்தில் இருக்கும் ஃபௌஸியாவுக்கு, வெள்ளிக்கிழமை என்றாலே பயம். அன்றுதானே மாமியாரிடம்

குடும்பம் எங்கே..?-1

குடும்பம் எங்கே..?-1

தொலைபேசியில் பேச வேண்டும்!! மகனைத் தன்னிடமிருந்து பிரித்து(!!) அழைத்துத் தனிக்குடித்தனம் சென்று விட்டதுபோல கோபமாகவே பேசுவார். இத்தனைக்கும், ஃபௌஸியாவின் கணவர் தன் பெற்றோருக்கும், உடன்பிறப்புகளுக்கும் (திருமணமானவர்கள் உட்பட) எந்தக் குறையும் வைத்ததில்லை. இருப்பினும் மாமியார் வன்மத்தோடே குத்திப் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

மதுரையைச் சேர்ந்த நசீமா, திருமணமாகி 15 வருடங்கள் கணவர் சவூதியிலும், கணவன் அழைத்துச் செல்ல முடிந்தாலும், மாமியார் தடை போட்டதால் மிகப் பொறுமையோடு, மாமியாரின் காரணமற்ற ஏச்சுபேச்சுகளைத் தாங்கிக் கொண்டு மதுரையில்தான் இருந்தாள். கணவரிடம் சொன்னால், ‘எனக்காகவும், இறைவனுக்காகவும் என் தாயைப் பொறுத்துக் கொள்’ என்பதுதான் ஒரே பதில்!!

இவரைப் போலத்தான் பலரும். ஏன் இவர்களால் தன் தாயிடம் இதைக் குறித்துப் பேச முடிவதில்லை? தாயின் காலடியில் சொர்க்கம் என்பதால்,சொர்க்கம் செல்லக் கிடைக்கும் எளிய வழி அடைபட்டுப் போகுமோ? தாயின் தவறை எடுத்துச் சொன்னால்கூட இறைவன் குற்றம் பிடிக்கக்கூடும் என்கிற தவறான புரிதல்.

இதுவா இஸ்லாம் சொல்லித் தந்தது? மனைவியைத் தன் தாய் வேலைக்காரி போல நடத்துவதையோ, கணவனுடன் சேர்ந்து வாழ்வதைத் தடுப்பதையோ எதிர்க்காமல் மௌனமாக இருப்பதா இஸ்லாம் சொல்லித் தரும் வழிமுறை? தாயை எதிர்த்துப் பேசாமல் இருப்பதால், மகன் சுவர்க்கத்துக்குச் சென்றுவிடலாம், இறைவன் நாடினால். ஆனால் அந்தத் தாய்? நீங்கள் சொர்க்கப் பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு, தாயை நரகிற்கு அனுப்பும் வழியல்லவா காட்டிக் கொடுக்கிறீர்கள்?

தஞ்சாவூர் ஷம்சின் தாயார், முதுமை, நோய் காரணமாக வீல் சேரில்தான் வாசம். துணைக்கு வேலையாள் மட்டுமே. எனினும், ஒரே மகன் ஷம்சுக்குத் திருமணம் செய்வித்து, மருமகளையும் அபுதாபிக்கு உடன் அனுப்பி வைத்திருக்கிறார். தன் நோயையை, முதுமையைக் காரணமாகக் காட்டி அவர்களைப் பிரிக்க நினைக்காத அவரின் பெருந்தன்மையைப் பாராட்ட வார்த்தைகளில்லை.

ஷார்ஜாவில் உள்ள மரியமின் மாமனார், மாமியார் சென்னையில் தனியேதான் இருக்கிறார்கள். ஒரு மகன் ஷார்ஜா, ஒரு மகன் அமெரிக்கா. எனினும்கூட மகனையோ, மருமகளையோ குறை சொன்னதில்லை. சென்ற வருடம் இங்கு வந்திருந்த அவர்களைச் சந்தித்தபோது, தம்பதியர் ஒன்றாக வாழவேண்டியது, இக்காலக் குழந்தைகள் பெற்றோருடன் இருந்து வளரவேண்டியது போன்ற எதார்த்தங்களை உணர்ந்தவர்களாகவே உரையாடினார்கள்.

ஒருத்தன்கிட்ட, ஒரு கற்புக்கரசி பேரு சொல்லுன்னா, அம்மா, மனைவியெல்லாம் விட்டுட்டு கண்ணகின்னானாம். அதுமாதிரி நான் என் மாமியாரை விட்டுட்டு யாரு மாமியாரையெல்லாமோ சொல்லிகிட்டிருக்கேன். என்னவர் அபுதாபி வந்த நாள்தொட்டு நான் இங்க அபுதாபியிலத்தான் இருக்கேன். என் நாத்தனாரின் கணவர்(மட்டும்) வெளிநாட்டில் என்ற போதிலும், இன்றும் என்னுடைய வீட்டுத் தேவைக்கான பெரும்பான்மையான பொருட்கள் வாங்கி அனுப்பித் தருவது, ஆலோசனைகள் கூறுவது எல்லாம் மைனிதான்.

இவர்களையெல்லாம் போலப் பார்த்துவிட்டு, ஒருசில மாமனார்-மாமியார், நாத்தனார்களால் மட்டும் ஏன் இதுபோல இருக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், தவறு செய்பவர்களுக்கு அதை எடுத்துச்சொல்லாமல், அவர்களுக்கு தந்தைஃகணவர்கள்ஃமகன்கள் ஒத்துப்போவதால், ‘பெண்கள் அடிமைப்படுத்துதல்’ என்று இஸ்லாம் மேல் பழி விழும் சூழ்நிலையாகிறது.

ஒருவர் பிறந்ததிலிருந்து, இறக்கும்வரை அவருக்கு தாய் காலடியில் சுவர்க்கம்தான். ஆனால், திருமணத்திற்குப் பிறகுதான், தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்பதே சில இளைஞர்களுக்குப் புரியும். அதுவரை, தாயை எப்படியெல்லாமோ உதாசீனப்படுத்தியிருப்பார்கள். மனைவி வந்ததும், தான் அதுவரை செய்த அலட்சியங்களுக்குப் பகரமாக, தன் பெற்றோரைக் கவனிக்கவேண்டிய தன் கடமையை, பொறுப்பை லாகவமாக மனைவியின் தோள்களுக்கு இடம்மாற்றிவிட்டு, அவளை அடிமையாக நேர்ந்து விடுகிறார்கள்.

மேலே சொன்ன நசீமாவும் 15 வருடங்களாக கடமையை ஏற்று, பொறுமையாகத்தான் செய்துவந்தாள். ஆனால், ‘இவ எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாடா. ரொம்ம்ம்ப நல்லவ’ என்கிற ரீதியில் கடுமைகள் குறையாமல் போகவே, பெற்றோர்களோ, உடன்பிறந்தவர்களோ ஆதரவுக்கு இல்லாத அப்பேதைப்பெண் தற்கொலை ஆயுதத்தைக் கையில் எடுத்த பின்பே ஒருவழியாய் கணவர் சவூதிக்கு அழைத்துச் சென்றார்.

போராடிச் சென்றவளுக்கு, ஹஜ் செய்ய ஆசை, பேராசை. ஆனால், மாமியார் தானும் இந்தியாவிலிருந்து வரும்போது தன்னுடன்தான் ஹஜ் செய்யவேண்டும் என்று சொல்லிவிட, மக்காவைத் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும்கூட காத்திருக்கிறாள் – மூன்றாண்டுகளாக!! பல காரணங்களால் மாமியார் வருவது தள்ளிப் போகிறது. அடுத்த வருடம், பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு, மீண்டும் ஊர் திரும்ப வேண்டியிருப்பதால், இவ்வருடமே கடைசி வாய்ப்பு, இன்ஷா அல்லாஹ். அதன்பிறகு இந்தியாவிலிருந்து பெரும் பணம் செலவழித்து வருவதென்பது விரைவில் கைகூடும் நிலையிலில்லை.

வெளிநாடுகளில் வீட்டு வாடகை, செலவினங்கள் அதிகம் என்பது சிலருக்குக் குடும்பத்தை அழைத்துவர ஒரு முட்டுக்கட்டை. ஆனால், நானறிந்த ஒருவருக்கு இலவசமாகத் தங்கும் இடம் கிடைத்தபோதும் மனைவி குழந்தைகளை அழைத்து வரமுடியவில்லை. காரணம்? அவரின் சகோதரிக்கு சொந்த வீடு இல்லாததால், ஒரு வீடு வாங்கிக் கொடுத்துவிட்டு, பின் அவர் இஷ்டப்படி நடந்துகொள்ள வேண்டுமாம், தாயின் ஆணை! நகை, வரதட்சணை, சீர் கொடுத்து திருமணம் முடித்து, பின்னரும் பலப்பல சீர்கள் செய்து, தங்கை கணவரின் தொழில் ஆதாரத்துக்கும் முடிந்த உதவி செய்த அவரால் முடிந்தால் வீடென்ன, பங்களாவே வாங்கிக் கொடுத்திருப்பார். அவரும் மிகச் சொற்ப சம்பளத்தில் இருப்பவரே. 40 வயது தாண்டி, பெண் குழந்தைகள் வைத்திருக்கும் மகனை எப்படித்தான் இப்படிப் பிழிய மனம் வருகிறதோ பெற்ற தாய்க்கு?

மனைவியை இங்கு அழைத்து வந்து வைத்திருப்பவர்களில் ஒரு சிலர், ஏதோ அவர்கள் மனமிரங்கி மனைவிக்குக்

குடும்பம் எங்கே..?

குடும்பம் எங்கே..?

கருணைப்பார்வை காட்டியதால்தான் இந்த அரபு நாட்டு வாசம் மனைவிக்குக் கிட்டியதென்பதாக அக்கணவர்களின் நடவடிக்கைகள் இருக்கும்.

-ஹுஸைனம்மா

தொடர்புடைய ஆக்கங்கள்:

ஓ.., பெண்ணே..! 

ஓ.., பெண்ணே..! – 2

 

 

 

Related Post