
சூரியக்கிரகணத்தைக் கண்டு பயந்து நடுங்கிய மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறையையும், கொலம்பஸ் நடந்து கொண்ட முறையையும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
–முகீரா
பழங்காலந்தொட்டே மக்களிடையே கிரகணம் குறித்த மூட நம்பிக்கைள் பல நிலவி வருகிறது. அவைகளில் ஒன்று தான் கிரகணம் ஏற்பட்டால் தலைவர் ஒருவர் மரணிப்பார் என்பது.
உலக சரித்திரத்தின் ஒரு நிகழ்ச்சியை நாம் பார்ப்போம். அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் என்பவர் சூரிய, சந்திர கிரகணங்கள் எப்போது ஏற்படும் என்பதை முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, தமக்கு உணவுப் பொருட்களைத் தரமறுத்த செவ்விந்தியர்களிடம் ‘நீங்கள் எங்களுக்குப் போதுமான அளவில் உணவளிக்காததால் குறிப்பிட்ட தினத்தில் சூரியன் இருட்டில் மறைந்து விடும்’ என்று அச்சுறுத்தினார். அவர் குறிப்பிட்ட தினத்தன்று சூரியக்கிரகணம் ஏற்படவே, அதைக் கண்டு பயந்து நடுங்கிய செவ்விந்தியர்கள் கொலம்பஸ்ஸிற்கு ஏராளமான உணவுப்பொருட்களையும், மற்ற பொருட்களையும் கொடுத்ததாக சரித்திர குறிப்புகள் கூறுகின்றன.
உலக மாந்தர்களுக்கெல்லாம் வழிகாட்டுவதற்காக சூரியனையும், சந்திரனையும் உள்ளடயக்கிய அகிலங்கள் அனைத்தையும் படைத்த வல்ல ரஹ்மான் அனுப்பிய தூதர் (ஸல்) அவர்கள் “கிரகணங்கள் என்பது யாருடைய பிறப்பு – இறப்பிற்காக ஏற்படுவதில்லை. மாறாக இது இறைவன் வகுத்த ஒரு நியதியே” என்று விளக்கிவிட்டு முஸ்லிம்களை அந்த மூட நம்பிக்கை விட்டும் அப்பாற்படுத்தி விட்டார்கள்.
‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபோது சூரியக்கிரகணம் ஏற்பட்டது. அதனால் மக்கள் எல்லோரும் ‘(நபி (ஸல்) அவர்களின் மகனார்) இப்ராஹீமுடைய மரணத்திற்காகத்தான் இந்த சூரியக்கிரகணம் ஏற்பட்டது’ என்று பேசிக் கொண்டார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘சூரிய, சந்திர கிரகணங்கள் யாருடைய வாழ்விற்காகவோ (பிறப்பிற்காகவோ) இறப்பிற்காகவோ ஏற்படுவதில்லை. நீங்கள் கிரகணங்களைக் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது அவனைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்’ அறிவிப்பவர்: அபூமுகீரா இப்னு ஷுஐபா (ரலி), நூல்: புகாரி.
சூரியக்கிரகணத்தைக் கண்டு பயந்து நடுங்கிய மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறையையும், கொலம்பஸ் நடந்து கொண்ட முறையையும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். சூரிய, சந்திரக் கிரகணங்களைப் பற்றி ஏராளமான வதந்திகளும் மூட நம்பிக்கைகளும் மக்களிடையே நிலவுகின்றன.
இன்றும் நமது முஸ்லிம்களில் சிலர் கூட கிரகணங்களின் போது கர்ப்பிணிப் பெண்கள் ஏதாவது செயலைச் செய்து கொண்டிருந்தால், எந்தச் செயலைச் செய்கிறார்களோ, அதை ஒத்திருக்கின்ற குறைபாடுடைய குழந்தைப் பிறக்கும் என நம்புகின்றனர். இவையெல்லாம் அறிவுக்கு ஒத்துவராத வெறும் மூட நம்பிக்கைகளே என்பதை மறுக்க முடியாது.
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali
