இறைநம்பிக்கையின் பலம்..!பலப்படுத்துவது எப்படி? – 2

Abstract-Blue-Flower-Background-Vector

இறைநம்பிக்கையின் பலம்..!பலப்படுத்துவது எப்படி?

கோதர சகோதரிகளே!

யார் ஒருவர் அளவற்ற அருளாளனின் எண்ணிலடங்காத அத்தாட்சிகளைத் தேடி, அவற்றைப் பற்றி சிந்தித்து ஆராய்ந்து, தெளிவு பெற்று அவனின் நுண்ணறிவாற்றலைக் கண்டு வியந்தவராக இவைகள் அனைத்தையும் இறைவன் வீண் விளையாட்டுக்காக படைக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறாரோ அப்போது அந்த நம்பிக்கை நிச்சயமாக அவருடைய ஈமானையும் அதிகரிக்கும்.

யார் ஒருவர் நிற்கும் போதும், அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவராக அவன் நமக்கு அளித்திருக்கும் அளவற்ற நிஃமத்துக்களை, அருள்களை பற்றி சிந்தித்து அவனுக்கு நன்றி செலுத்த முயல்கிறாரோ அப்போது அது அவருடைய ஈமானையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

அடுத்ததாக ஒருவருடைய இதயத்தில் இறை நினைப்பை அதிகரித்து ஈமானையும் நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்து நம்மை இறைவனுக்கு மிக நெருக்க மாக்கி வைக்கும் மிக மிக முக்கியமான செயல் என்ன வெனில்,

மிகுந்த சிரத்தையுடன் அகிலத்தார்களுக்கெல்லாம் அருளாளனாகிய அல்லாஹ் நமக்கு வழிகாட்டியாக அருளிய அல்-குர்ஆனை பொருளுணர்ந்து படித்து அது கூறும் நல்லுபதேசங்களைப் பின்பற்றி அது விலக்கும் செயல்களை விட்டும் விலகியிருத்தல் ஆகும்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்: –

16:89 மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். 

14:1 அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).

14:2 அல்லாஹ் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தாமாகும்; இன்னும் (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்.

வெறுமனே சில குர்ஆன் ஆயத்துக்களை ஓதுவதாலோ அல்லது பொருளறியமல் சில துஆக்களைக் கேட்பதாலோ ஒருவருடைய தீமையான காரியங்கள் அவரைவிட்டும் அகலாது, மேலும் அவைகள் அவருடைய ஈமானை, நம்பிக்கையை  அதிகரிக்கவோ செய்யாது.

ஆனால் யார் ஒருவர் உண்மையிலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புகளை அல்லாஹ்வுக்காகவே என்று ஆக்கிக் கொண்டவராக அவர் தன்னுடைய இறைவனின் சீரிய வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறாரோ அவருக்கு இறைவனின் வழிகாட்டுதல்களும் மன்னிப்பும் கிடைக்கும். மறுமையில் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

ஆனால் இது ஒருவர் உண்மையாகவே அதிக சிரத்தையுடன் முயற்சி செய்து எவ்வித தயக்கமும் இல்லாமல் தன்னை இறைவழியில் முழுமையாக அர்பனித்துக் கொண்டால் மட்டுமே மறுமையில் நற்பாக்கியத்தைப் பெற்றுத் தரும் நேர்வழியை அடைவதற்கு வழிவகுக்கும்.

ஒருவரை அவர் தொடர்ந்து தவறுகள் செய்வதிலிருந்தும் தடுக்கக் கூடிய சக்தி எதுவென்றால் அவர் எந்நேரமும் தக்வா (இறையச்சமுடன்) இருப்பதுவேயாகும். அதாவது தவிர்க்க முடியாத நாளில் நம்மைப் படைத்த இறைவன் முன்னே நிறுத்தப்படுவோம், அவனுடைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நாம் இவ்வுலகில் தீய செயல்கள் புரிந்தால் தண்டணை கிடைக்கும் என்ற அச்சத்துடன் எப்போதும் நாம் வாழ முற்பட்டால் நிச்சயமாக அது நம்முடைய வாழ்க்கையை சீராக்கி, வாழ்நாள் முழுவதும் மறுமை வாழ்வுக்கு தேவையான நற்கருமங்களைச் செய்வதற்கு அது நம்மைத் தூண்டும்.

இந்த இறையச்சமே இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற செயல்களை செய்வதிலிருந்தும் நம்மைத் தடுக்கும்.

எனவே சகோதர சகோதரிகளே,
– நம்முடைய மனதைச் சுத்தப்படுத்தி அல்லாஹ்வை எப்போதும் நினைவில் இருத்திக் கொள்ள சிறந்த வழி என்ன வென்றால்,
– நம்முடைய எண்ணங்களை சீராக்கி அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்களை செய்யக் கூடிய பக்குவத்தை ஏற்படுத்துவது எது வென்றால்,
– நம்முடைய ஈமானை, நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய சிறந்த வழி என்னவென்றால்,

நிச்சயமாக அது மனிதர்களின் இம்மை மறுமை வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வதற்காக மனிதர்களைப் படைத்த இறைவன் அருளிய அருள் மறையாம் திருக்குர்ஆனை பொருளுணர்ந்து படித்து அதன் படி வாழ முயற்சிப்பதே ஆகும்.

யார் ஒருவர் உண்மையிலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை அல்லாஹ்வுக்கென்றே அமைத்துக்கொண்டு, அவருடைய சொல் செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவனுடைய அருள்மறையின் ஏவல் விலக்கல்களுக்கேற்ப அமைத்துக் கொண்டு வாழ்வாரானால் நிச்சயமாக அவருடைய
ஈமானும் நம்பிக்கையும் அதிகரிக்கும். அல்லாஹ்வின் அளப்பற்ற மன்னிப்பும் அவன் வாக்களித்த சுவர்க்கமும் அதன் மூலம் கிடைக்கும்.

Related Post