அனுதினமும் அவளுடன் அன்பாய் பரிபாஷித்தால்
‘நச்சரிப்பு தாங்கலை’ என்று நகைக்கின்றாள்!
அவ்வாறின்றி அமைதியாகிவிட்டாலோ..,
அவளைப் புறக்கணிப்பதாய்..,
புகார் கூறுகின்றாள்!
அவளின் நெற்றிப்பொட்டை ஆதரவுடன் தடவினால்..,
‘நாகரிகம் தெரியாதவன்’ என்கின்றாள்!
அவ்வாறு செய்யாவிட்டாலோ..,
‘முத்தா உதிர்ந்திடும்?’ என்று
முணங்கிக் கொள்கின்றாள்.
அவளின் அபிலாஷைகளை
அணைத்துக் கொண்டால்..,
‘பயங்தாங்கொள்ளி’ என்கின்றாள்!
அவள் விருப்பங்களை விலக்கி வைத்தாலோ…,
‘புரிந்துணர்வு இல்லாதவன்’ என்று புடைக்கின்றாள்!
அழகாய் உடுத்தி ஆண்மகனாய் அலட்டினால்..,
‘தீராத விளையாட்டுப்பிள்ளை’ என்கின்றாள்!
அவ்வாறு உடுத்தாது பொதுவாய் உலாத்தினாலோ..,
‘ரசனையில்லா ராட்சஷன்’ என்று
ராகம் பாடுகின்றாள்!
அவளை பொறாமை கொண்டாலோ..,
நான் ‘கெட்ட குணம்;’ கொண்டவன்!
அவ்வாறு கொள்ளாவிட்டாலோ..,
அவள் அன்பில் அக்கறை கொள்ளாதவன்
என்று அங்கலாய்க்கின்றாள்!
அவள் மீது அளவிலா காதல் கொண்டாலோ..,
‘என் மதிப்பு அறிவதில்லை’ என மருங்குகின்றாள்!
அவ்வாறு செய்யாவிட்டாலோ..,
‘என் மீது விருப்பம் இல்லை’ என
வீம்பாய் விக்குகின்றாள்!
ஒரு நிமிடம் தாமதமானாலோ..,
‘காத்திருப்பது கடினம்’ என கடிந்து கொள்கின்கின்றாள்!
சீக்கிரம் வந்துவிட்டாலோ..,
‘என்ன வேலை இல்லையா?’ என
வெடித்து வதைக்கின்றாள்!
நண்பரை விஜயம் செய்தால்..,
‘நேரத்தை நிர்வகிக்க தெரியாதா?’ என நெத்தியலடிக்கின்றாள்!
தன் தோழி இல்லம் அவள் சென்றாலோ..,
‘அது பெண்கள் சமாச்சாரம்’ என்று
பெருமையடித்துக் கொள்கின்றாள்!
சாலைகடக்க அவள் விரல்நுனி பற்றினாலோ..,
‘ஒழுக்க இங்கிதம் தெரியாதவன்’ என ஒதுங்குகின்றாள்!
அவள் விரல் பற்றாவிட்டாலோ..,
அச்செயல் ‘ஆண்களின் மருவூட்டும் கவர்ச்சி ஆயுதம்’
என்று மாட்டிவிடுகின்றாள்!
அவளிடம் பேச எத்தனித்தால்..,
அவளைக் கவனிக்க வேண்டும் என கடுக்கின்றாள்.
கவனிக்க ஆரம்பித்தாலோ..,
‘ஏன் ‘உம்’-மென்று இருக்கின்றீர் என்று
உதட்டைப் பிதுக்குகின்றாள்!
சுருங்கக் கூறின்..,
சிக்கல் நிறைந்தவள்’-தான்.., ஆனால் எனக்கு ‘இலகு’ அவள்!
‘வலிமை குன்றியவள்’ அவள்.., ஆனால் எனக்கு வலுசேர்க்கும் ‘ஆற்றல் மிக்கவள்!’
‘குழப்பம் நிறைந்தவள்’-தான்.., ஆனால், என் குழப்பம் தீர்க்கும் ‘விரும்பத்தக்கவள்!’
‘கண்டிப்பு மிக்கவள்’ அவள்.., ஆனால், என்னை அழகாய் நடத்திச் செல்லும் ‘எட்டாம் அதிசயம் அவள்!’
அவளே.. என் மனையாள்!
ஒ..! அண்ணலாரே..!
எத்துணை உண்மை உரைத்தீர்!
‘பெண் படைக்கப்பட்டாள் மென்மையான இடுப்பெலும்பு கொண்டு!
அதன் மேற்புறம் வளைவானது..!
அதனை நேராக்க முயன்றால் முறிந்துவிடும்!
எனவே, மங்கையர் விஷயத்தில் முஹம்மத் (ஸல்;) அறிவுரை ஏற்பீர்..,
மங்கையரிடத்தில் அழகிய நடத்தை மேற்கொள்வீர்!
மு.அ.அப்துல் முஸவ்விர்
வசந்தம் மார்ச் 2010
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali



