– அப்துல் பாசித் புகாரி
தொழுகையை விடுபவர்களே..!
அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்கின்றது வானங்களில் உள்ள, பூமியில் உள்ள ஒவ்வொன்றும்! ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியதாகும். மேலும், அவன் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றலுடையவன். 64:2 அவனே உங்களைப் படைத்தான். பிறகு, உங்களில் சிலர் நிராகரிப் பாளர்களாய் இருக்கிறார்கள். சிலர் இறைநம்பிக்கையாளர்களாக விளங்குகின்றார்கள். மேலும், நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். 64:3 அவன் வானங்களையும் பூமியையும் சத்தியத்தைக்கொண்டு படைத்தான். மேலும், உங்களுக்கு வடிவம் அமைத்தான். உங்கள் வடிவங்களை மிகவும் அழகிய முறையில் அமைத்தான். இறுதியில் அவனிடமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டி இருக்கிறது. 64:4 வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அவன் அறிகின்றான். நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அவன் அறிகின்றான். மேலும், அவன் உள்ளங்களில் இருப்பவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான். 64:5 எவர்கள் இதற்கு முன்பு நிராகரிக்கவும், பின்னர் தங்களுடைய செயல்களின் கெடுதல்களைச் சுவைக்கவும் செய்தார்களோ அவர்களைப் பற்றி உங்களுக்குச் செய்தி எதுவும் எட்டவில்லையா, என்ன? மேலும், துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு இருக்கின்றது. 64:6 அவர்கள் இந்தக் கதிக்கு ஆளாகக் காரணம் அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் வெளிப்படையான ஆதாரங்களைக் கொண்டு வந்த வண்ணம் இருந்தார்கள். இருப்பினும் அவர்கள் கூறினார்கள்: “மனிதரா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்?” இவ்விதம் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அப்போது அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. மேலும், அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும், தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான். 64:7 இறந்த பின் மீண்டும் ஒருபோதும் அவர்கள் எழுப்பப்பட மாட்டார்கள் என்று நிராகரிப்பாளர்கள் மிக அழுத்தம் திருத்தமாக வாதாடுகின்றார்கள். (அவர்களிடம்) நீர் கூறும்: “இல்லை, என் அதிபதி மீது சத்தியமாக! நீங்கள் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள். பின்னர் (உலகில்) நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று உங்களுக்கு அறிவித்துத் தரப்படும். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதாகும்.” 64:8 எனவே, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும், நாம் இறக்கி வைத்திருக்கும் ஒளியின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். 64:9 நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான். ஒன்றுகூடும் நாளில் அவன் உங்கள் அனைவரையும் திரட்டும்போது (இதுபற்றிய விவரம் உங்களுக்குத் தெரிந்துவிடும்). அந்த நாள் மக்கள், ஒருவர் மற்றவரைப் பொறுத்து வெற்றி தோல்வி பெறும் நாளாக இருக்கும். மேலும், யாரேனும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றாரெனில், அவருடைய பாவங்களை அல்லாஹ் அகற்றிவிடுவான்; கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களில் அவர்களை நுழைவிப்பான். அவர்கள் அங்கே என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே, மகத்தான வெற்றியாகும். 64:10 மேலும், யார் நிராகரித்து நம்முடைய வசனங்களைப் பொய்யெனத் தூற்றினார்களோ அவர்கள் நரகவாசிகளாவர். அதிலேயே அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். மேலும், அது மிகவும் மோசமான இருப்பிடமாகும்.
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali

