
ஜகாத்தின் முக்கியத்துவம்
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஸகாத்தும் ஒன்றாகும். பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இக்கடமை, உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது. இக்கடமையின் முக்கியத்துவம், சிறப்பு என்பவற்றையும், இதனைக் கூட்டு முறையில் நடைமுறைப் படுத்துவதின் அவசியத்தையும் இங்கு சுருக்கமாக நோக்குவோம்.அடிப்படைக் கடமை:
‘இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிர்மாணிக்கப் பட்டுள்ளது.
(1) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வை அன்றி வேறு யாரும் இல்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுதல்.
(2) தொழுகையை நிலைநாட்டுதல்.
(3) ஸகாத்தைக் கொடுத்தல்.
(4) ஹஜ் செய்தல்.
(5) ரமழானில் நோன்பு நோற்றல். என்பனவே அவை யாகும் என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்’ (புகாரி).
இந்தக் கருத்தில் வரக்கூடிய ஏராள மான அல்குர்ஆன் வசனங்களும்; ஹதீஸ்களும் ஸகாத் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமை என்பதை உணர்த்துகின்றன.
ஜகாத் தூய்மைப்படுத்தும்:
ஜகாத் என்றால், தூய்மை, வளர்த்தல் என்ற அர்த்தங்களைத் தரும்.
‘இன்னும் அவ்விருவருக்கும் பரிசுத்தத்திலும், (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்கக்கூடிய ஒரு மகனை, அவ்விருவருடைய இறைவன் கொலை யுண்டவனுக்குப் பதிலாகக் கொடுப்பதை நாம் விரும்பினோம்’ (18:81).
இங்கே ‘சகாதன்’ என்ற சொல் பரிசுத்தமான என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘அவர்களின் செல்வங்களிலிருந்து, ஸகாத்தை நீர் எடுத்து அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி பரிசுத்தப் படுத்துவீராக’ (9:103)
என்ற வசனமும் ஸகாத் தூய்மையை வழங்கும் என்று கூறுகின்றது.
ஜகாத் வழங்கும் தூய்மை
‘ஜகாத்’ அதைக் கொடுப்போரிடம் பல் வேறுபட்ட தூய்மை நிலையை ஏற்படுத்துகின்றது. அவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்.
1- பொருள்வெறி நீங்கல்
மனிதனிடம் இயல்பாகவே பொருளாதாரத்தில் மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது. தொடராக ஸகாத் வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து அதிலே ஓரளவு தாராளத்தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால் நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும்.
2- கஞ்சத்தனம் நீங்கல்
தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.
‘அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும் படி தூண்டி அல்லாஹ்
தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம் ‘ (4:37).
‘நான் கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகின்றேன், என நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்’ (புகாரி).
இந்த வகையில் உள்ளத்தில் உள்ள கஞ்சத்தனத்தை நீக்கும் மருந்தாக ஸகாத் அமைந்துள்ளது.
3- பொறாமை நீங்குதல்
‘தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்து விடக்கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும்’ என்ற உணர்வே பொறாமையாகும். ஸகாத் கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால் அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் எடுபட்டு விடுகின்றது. ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஸகாத் மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஸகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.
4- கர்வம் அற்றுப்போதல்
சிலரிடம் பெருமை, கர்வம் என்ற தீய குணம் இருக்கலாம். தன்னைப் போல அடுத்தவனும் உயர்வடைவதை, கர்வம் கொண்டவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், ஸகாத் நடைமுறை செல்வந்தர்களிடம் இந்த கர்வ உணர்வை ஒழிக்கின்றது. ஏழைகளும் செல்வந்த நிலையை அடைவதை விரும்புபவனிடம் கர்வம் அற்றுப்போகும்.
5- சமூக உணர்வு அதிகரித்தல்:
செல்வந்தர்களில் அதிகமானோர் சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஸகாத் வழங்குபவர்களாக மாறும் போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் விடயத்தில் கரிசனை காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவர்கள் ஏழைகளின் விடயத் தில் அக்கறை செலுத்தும் போது, இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஸகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை விளை விக்கின்றது.
எழுதியவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
ஜகாத் – தனியாகவா ? கூட்டாகவா ?
httpv://youtu.be/jiCaQTb-QPE
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali

