– அஹ்மதி
(நபியே!) கூறுவீராக : “நம்பிக்கைக்கொண்டிருக்கின்ற என் அடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு அஞ்சுங்கள். எவர்கள் இவ்வுலகில் நன்னடத்தையைக் கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுக்கு நன்மை இருக்கிறது. மேலும், அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி அளவின்றி வழங்கப்படும்.”
இறைவன் குர்ஆனில் நபிமார்களைப் பற்றியும், இறைவனின் அருள் பெற்ற நல்லடியார்களைப் பற்றியும், அநியாயக்கார சமூகத்தினர்கள் பற்றியும் பல வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான், எதற்காக? நாம் பழங்கதைகளை தெரிந்துக்கொள்வதற்காகவா? இல்லை அதன்மூலம் படிப்பினைப் பெறுவதற்காகவா? பழங்கால மனிதர்கள் செய்த தவறுகள் நவீன வடிவில் நம்மிடம் இன்று இருந்தால் படிப்பினைப் பெற்று நம்மை திருத்திக் கொள்வதற்காகத்தான் இறைவன் பல வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான்.
இமாம் புகாரி போன்ற அறிஞர்களைப் பற்றி நாம் ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும்? இந்த அறிஞர்கள் இஸ்லாத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? நமக்கு அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற முன்மாதிரிகள் என்ன? அவர்களின் தியாகங்கள் போன்றவற்றை நாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பதில்லை. அவ்வளவு ஏன்? இமாம் புகாரி அவர்களின் இயற்பெயர் பெரும்பாலான நம்முடைய சகோதரர்களுக்கு தெரிவதில்லை.
இதை விடக் கொடுமை, சிலர் இமாம் புகாரி அவர்களைப் பற்றி தவறாக அறிந்து வைத்திருக்கிறார்கள். ‘புகாரி ஷரீப் ஓதும் விழா’என்று சொல்லிக் கொண்டு 25, 30 வருடங்களாக அரபியில் ஒன்றும் புரியாமல் வேக வேகமாக ஓதி நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.
இமாம் புகாரி அவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்காக இணையத்தில் உலாவியபோது பல சகோதரர்கள் புகாரி இமாம் அவர்களின் பிறப்பு, பெயர், எழுதிய நூல், சொந்த ஊர், இறப்பு போன்ற விஷயங்களை மட்டும் பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். (இறைவன் அந்த சகோதரர்களுக்குரிய நற்கூலியை வழங்குவானாக!) ஆனால் இமாமவர்களின் ஆளுமையைப் பற்றி படிக்கும்போது நம்மை வியக்க வைக்கிறது! “இன்று இறைவேதமான குர்ஆனுக்கு அடுத்து உலக முஸ்லிம்களால் நம்பக்கூடிய ஒரு நூலாக புகாரி கிதாப் இருக்கிறது. இறைவன் இவ்வளவு பெரிய அந்தஸ்தை இந்த நூலுக்கு கொடுத்திருக்கிறான்.”
இமாம் புகாரி(ரஹ்) அவர்களைப் பற்றியும்.
அவர்களின் பல நூல்களில் ஒரு நூலான புகாரி கிதாபை பற்றியும்.
இந்த நூலை இமாமவர்கள் ஏன் தொகுத்தார்கள் என்பது பற்றியும்.
புகாரி நூலில் அப்படி என்ன சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது என்பது பற்றியும்.
இனி விரிவாகப் பார்ப்போம்.
முதலில் இமாம் புகாரி அவர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம். ‘இமாம் புகாரி’ இவர்கள் யார்? இவர்களின் பெயரென்ன? அனைவராலும் புகாரி என்று அழைக்கப்படுகிறார்களே? ஆனால் அவர்களின் சொந்தப் பெயர் புகாரி அல்ல. ‘புகாரி’ என்பது அவர்கள் பிறந்த ஊரின் பெயர். ‘புகாரா’என்ற ஊரில் பிறந்தார்கள். ‘புகாரி’ என்றால் அரபியில் ‘புகாரா என்ற ஊரைச் சார்ந்தவர்’ என்று பொருள். சரி அவர்களுடைய சொந்த பெயரென்ன? அவர்களின் சுருக்கமான பெயர் ‘முஹம்மத்’. முழுப் பெயர் ‘முஹம்மத் இப்னு இஸ்மாயில் இப்னு இபுராஹீம் இப்னு முகீரா’
இமாம் புகாரி அவர்கள் அரபு நாடுகளில் பிறக்கவில்லை, அவர்கள் அரபியும் அல்ல. ஆனால் அரபிகள் மட்டுமல்ல, எவரும் செய்ய முடியாத மாபெரும் பணியை இஸ்லாத்திற்காக செய்திருக்கிறார்கள். தன் முழு வாழ்வையும் இஸ்லாத்திற்காக அர்ப்பணித்தார்கள். தமிழகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக் கொண்டிருக்கும் நாத்திக/கம்யூனிஸ்ட் நண்பர்கள் சிலர் அறியாமையில் தமிழ் முஸ்லிம்கள் அரபியர்களுக்கு அடிமையாக இருப்பதாக அள்ளி விடுகின்றனர்.
ஆனால் இன்றைய உஸ்பெக்கிஸ்தானில்/ அன்றைய ரஷ்யாவில் பிறந்த இமாமவர்கள் முழு இஸ்லாமிய உலகிற்கும் (அரபியரையும் சேர்த்து) ஒப்பற்ற ஒரு நூலை கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஆதாரப்பூர்வமான 6 ஹதீஸ் கிரந்தங்களையும் எழுதியவர்கள் ஒரிஜினல் அரபிகள் அல்ல. அரபிகளின் வழித்தோன்றல்கள் கூட கிடையாது. ஆகவே இஸ்லாம் எல்லா மக்களுக்கும் உரியது; எல்லா இனத்திற்கும் உரியது என்பதுதான் உண்மை.
இறைவன் தன் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக, முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிலரை மேதைகளை உருவாக்குகிறான். வரும் காலங்களிலும் உருவாக்கிக் கொண்டே இருப்பான்.
இமாம் புகாரி அவர்களுக்கு அபார நினைவாற்றல்களை இறைவன் வழங்கியிருந்தான். அது அன்று தேவைப்பட்டது. அந்த ஆற்றல்கள் இன்று காணக் கிடைக்காது. அக்காலம் கணினி காலமல்ல. அக்கால அறிஞர்களின் மூளைகள் கணினிகளாக ஆக்கப்பட்டிருந்தன. எனவே இலட்சக்கணக்கான ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசைகளுடன் மனனம் செய்திருந்தார்கள்.
இன்று யோசித்துப் பாருங்கள்! நாம் ஒரு 5000 ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசையுடன் மனனம் செய்ய முடியுமா? ஏன்.. இமாமவர்கள் பல இலட்சம் ஹதீஸ்களை ஆய்வு செய்து, தரம் பிரித்து, தேர்ந்தெடுத்த 7000 ஹதீஸ்களை அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் நம்மால் மனனம் செய்ய முடியுமா? ஆனால் புகாரி இமாமவர்கள் அந்த ஹதீஸ் துறையிலேயே முழு வாழ்வையும் செலவழித்து நமக்கு பேருதவி செய்திருக்கிறார்கள்.
இமாமவர்கள் அல்குர்ஆனையும் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களையும் தனது 10 வயதில் முழுமையாக மனனம் செய்திருந்தார்கள். இமாம் புகாரி அவர்களின் மாணவர், அவர்களின் எழுத்தாளர் ‘முஹம்மது இப்னு அபீ ஹத்தீம் அர்வர்ராஹ்’என்பவர் தன் ஆசிரியரைப் பற்றிய குறிப்பில் கூறுகிறார்:
“ஒருமுறை, தாங்கள் எத்தனை வயதில் குர்ஆனையும் ஹதீஸையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போதே ஹதீஸ்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் எனக்கு இயற்கையாக அதிகமாக இருந்தது என்றார்கள். அப்போது உங்களுக்கு எத்தனை வயதிருக்கும் என்று வினவினேன்? 9 அல்லது 10 வயது இருக்கும் என்றும், 16 வயதில் (‘அப்துல்லாஹ் இப்னு முபராக்’ என்பவர் இமாமவர்களின் சமகாலத்தில் வாழ்ந்த ஹதீஸ் துறையில் புலமைப் பெற்ற மிகப்பெரிய அறிஞர் ஹிஜ்ரி 181 ல் மரணித்தவர்கள்) அந்த அறிஞரின் நூலை முழுமையாக மனனம் செய்திருந்தேன் என்றும், அதேபோல இமாம் ஷாஃபி அவர்களின் பிரபல ஆசிரியரான ‘வக்கியா இப்னு ஷர்ரா’ அவர்களின் சட்ட நூல்களையும் மனனம் செய்திருந்தேன் என்றும் கூறினார்கள். அதுமட்டுமல்ல அந்த சமகாலத்தில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களை கூறிக்கொண்ட ‘முஹ்தஜ்லாக்கள்’ என்ற பிரிவினரின் வாதங்கள், தர்க்கங்கள், அவர்கள் முன் வைக்கின்ற நியாயங்கள் இவைகளையும் அவர்களின் நூல்களையும் கற்றுக் கொண்டார்கள்”.
(இன்று பார்க்கிறோம் இறைநம்பிக்கை கொண்டவர்கள் இறையியல் சார்ந்த நூல்களை மட்டுமே படிக்கிறார்கள். எதிர்க்கொள்கைக் கொண்ட நூல்களை படிப்பதில்லை. அவர்கள் என்ன வாதங்களை முன் வைக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்வதில்லை. ‘அசத்தியத்தை/பொய்யை அறியாதவன் உண்மையை/சத்தியத்தை (ஹக்கை) அழித்துவிட்டான் என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். எனவே சகோதரர்களே! நாமும் அனைத்து நூல்களையும் படிப்போமா? முயற்சியுங்கள்! இமாமவர்களின் மாதிரியை முன்மாதிரியாக கொள்ளுங்கள்!)
இமாமவர்கள் தனது 16 வது வயதில் சட்டத்துறையிலும் ஹதீஸ் துறையிலும் முழு அறிவு பெற்றிருந்தார்கள். அவர்களுடைய அன்னையவர்கள், மேலும் கற்றுக் கொள்வதற்காக புகாரி அவர்களுடைய சகோதரர் ‘அஹமது’ என்பவரையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றார்கள். ஹஜ் செய்வது மட்டும் நோக்கமல்ல. அங்கு, மக்காவிலும் மதீனாவிலுமுள்ள அறிஞர்களிடமும் கல்வி கற்பதற்காகவும்தான். ஹஜ் முடிந்த பிறகு இமாம் புகாரி அவர்களை அரபு மண்ணில் விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி விடுகிறார்கள்.
இமாம் புகாரி அவர்களைப் பற்றி ஏன் இவ்வளவு விரிவாக எழுதுகிறேன் என்பதற்கு அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்து விட்டு நாம் விட்ட இடத்திலிருந்து தொடரலாம் என்று நினைக்கிறேன்.
(ஸஹீஹான) சரியான ஹதீஸ்களை தேர்ந்தெடுப்பதில் இமாமவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள்.ஓர் ஊரிலிருந்த பெரியவர் ஒருவரிடம் சில ஹதீஸ்கள் இருப்பதை அறிந்து நீண்ட நெடுந்தூரம் நாள்கணக்காக கால்நடையாகப் பயணம் செய்து அவரைக் காணச் சென்றார்கள்.
அவர் ஒரு பையைக் காட்டி தம் ஒட்டகத்தை அழைத்தபோது அது,அதில் தமக்குரிய உணவு இருக்குமென நம்பி அருகில் வந்ததும் அவர் அதைப் பிடித்துக் கட்டினார். அவர் அந்த பையை உதறியபோது அதில் எதுவுமே இல்லை. இதை தொலைவிலிருந்து கவனித்த இமாம் அவர்கள், உடனே அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிவிட்டார்கள். காலிப்பையை காணம் உள்ள பை போல் காட்டி ஒரு வாயில்லாப் பிராணியை ஏமாற்றும் இவர், எவரைத்தான் ஏமாற்றமாட்டார்? இவர் சொல்லை எப்படி நம்புவது என இமாம் திரும்பி விட்டார்கள்.
ஸஹீஹ்
(பலமானது)
ளயீஃப்
(பலமற்றது)
மவ்ழூஉ
(புனையப்பட்டது)
ஹஸன்
(அறிவிப்பாளர் தகுதியில் சிறு குறைபாடு இருந்து வேறு பல வழிகளில் ஹதீஸின் கருத்தை சொல்லக்கூடியது)
ஹதீது முஅல்லக்
(ஹதீஸை சொன்னவர்களில் ஒருவர் அல்லது இருவர் பெயர் விடுபட்டிருந்தால்)
முன்கத்ஃ
(அறிவிப்பாளர் வரிசையில் சஹாபாக்களுக்கு அடுத்து யாரேனும் விடப்பட்டிருந்தால்)
மக்தூஃ
ஒரு ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு இரண்டாவது தலைமுறையினரால் சொல்லப்பட்டிருந்தால்.
(இதை இன்னும் விரிவாக நூலை தொகுத்த முறையில் பார்ப்போம்)
இப்படி ஹதீஸ்களை தொகுப்பதில் தனக்கு தானே கண்டிப்பான நியதிகளை வகுத்துக் கொண்டு ஹதீஸ் தொகுக்கும் கலையில். புது வழிமுறைகளை ஏற்ப்படுத்தி சென்ற மாமேதை.
சரி தொடருக்கு வருவோம்
இங்கு இமாம் புகாரி அவர்களின் தாயின் தியாகத்தை நினைவு கூற வேண்டியதிருக்கிறது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த மகனுக்கு தாய் பாசம் மட்டுமே கிடைத்த சூழலில் மார்க்க கல்வி கற்பதற்காக அதனையும் இழந்து 16 வயதில் மகனை மக்காவில் விட்டு விட்டு ஊர் திரும்புகிறார்கள் இன்றைய காலம் மாதிரி சாப்பிட்டயா? உடல்நலம் எப்படி இருக்கிறது? என்று மணிக்கொருமுறை கைத்தொலைபேசியில் உரையாடுகிற தொழில்நுட்பம் வளர்ந்த காலமல்ல அவ்வளவு ஏன் கடித போக்குவரத்துக் கூட நவீனமாக இல்லாத காலம் அதுவும் உஸ்பேக்கிஸ்தான் எங்கிருக்கிறது மக்கா எங்கிருக்கிறது. இவர்களின் தியாகத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.
இமாம் புகாரி மக்காவில் வந்ததிலிருந்து அதற்குபிறகு 16 வருடங்களாக மதீனா.எகிப்து,ஷாம்,பாலஸ்தீன்,ஜோர்டன்,லெபனான்,சிரியா,ஈராக் பாக்தாத்,கூபா,பஸார.(இன்றைய ஈராக்) இப்படி ஒவ்வொரு நாடாக பயணம் செய்தார்கள் பிற நாடுகளில் இருக்கின்ற மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்பதற்காகவும்,ஹதீஸ் செவிவழி கேட்டுயிருந்த அறிவிப்பாளர்களை நேரடியாக சந்தித்து ஹதீஸ்களை திரட்டுவதற்காகவும் மாதக் கணக்கில் வருடக் கணக்கில் பயணம் செய்தார்கள் தன்னுடைய வாழ்நாளை பயணங்களிலேயே அதிகமாக செலவழித்தார்கள்.
மக்காவிலிருந்து பாக்தாதிதிற்கு மட்டும் கிட்டதட்ட 7 முறை திரும்ப திரும்ப பயணம் செய்திருக்கிறார்கள் அன்றைய காலப்பகுதியில் பெரிய மார்க்க அறிஞர் என்று போற்றப்பட்ட ‘இமாம் அஹமது’(ரஹ்) அவர்களை சந்திப்பதற்காக அவர்களிடம் ஹதீஸ் கலையை கற்றுக் கொள்வதற்காக. நேரடியாக சந்தித்து ஆலோசனைகளைப் மார்க்க கல்வியை மேருக்கேற்றிக் கொண்டார்கள்.
நாம் இன்று புகாரியில் வருகிறது என்று ஈஸியாக சொல்கிறமே அதனை அவர்கள் தொகுக்கும் போது வீட்டுக்குள் அமர்ந்து அல்லது A.C.க்கு கிழே இருந்து கொண்டு இணையத்தில் தேடி எடுத்து பதிவிடுகிற நம்மை போன்ற டேபிள் எழுத்தளராக இருக்கவில்லை. இரவு பகலும் கொவெறு கழுதையிலும்,ஒட்டகத்திலும் தூசி மணல்,கடுங்குளிர்,பாலைவனவெயில் இவைகளை கடந்து தான் சேகரிக்க முடிந்தது.
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali


