-S.கமாலுத்தீன் மதனி
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான். இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான். உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.
அல்லாஹ், தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை தீமை பாவம் புண்னியம் என்பதை அறிவித்துக்கொடுத்தான்; அவற்றின் பிறதி பலனையும் விளக்கி காண்பித்தான்; மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும் தீயவைகளையும் செய்யக்கூடிய இயல்புடையவனாக அவனை ஆக்கியுள்ளான்.
எனவே மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களைத் தான் மன்னித்து விடுவதாக அல்லாஹ் கூறுகின்றான். இப்பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருப்பினும் அதற்காக பரிகாரம் கோரக் கூடியவர்களுக்கு அதை பொறுத்து மன்னித்து விடுவதாகவும் கூறுகின்றான். ஒருவன் தான் செய்த பாவங்களுக்காக உலகில் பாவமன்னிப்பு கோரி பச்சாதாபப் படுவானாயின், அப்பாவங்கள் அனைத்தயும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். சில பாவங்களுக்காக மன்னிப்புக் கோராமல் இறந்து விடுபவனுடைய பாவங்களை மறுமையில் அல்லாஹ் நாடினால் அவைகளை மன்னித்தருளவும் செய்யலாம்; மன்னிக்காமலும் இருக்கலாம். இது அல்லாஹ்வின் நாட்டத்தை பொருத்தாகும்.
ஆனால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் அல்லாஹ் மறுமையில்மன்னிப்பதே இல்லை. எல்லா பாவங்களையும் தான் மன்னித்து விடுவதாக கூறிவிட்டு, ஒரு பாவத்தை மட்டும் மன்னிப்பதில்லை என கூறும்போது அது மகா கொடிய பாவன் என்பது புலனாகிறது. இந்த பாவத்தை செய்யக் கூடியவன் சதா நரகத்திலேயே இருப்பான் எனவும் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறாயின் இவ்வளவு பெரிய கொடிய பாவம் எது? அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதில்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டியது மிக இன்றியமையாத ஒன்றாகும்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (அல்குர்ஆன் 4:116)
மற்றோர் இடத்தில்: எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ்சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும். (அல்குர்ஆன்5:72) ஷிர்க் என்னும் அல்லாஹ்விற்கு இணைவைத்தல் அல்லாஹ்வால் மன்னிக்கப் படாத கொடிய பாவமாகும் என்பது இந்த இறை வசனங்கள் மூலம் தெரிய வருகின்றது.
ஷிர்க் என்றால் என்ன? இவ்வளவு பெரிய கொடும்பாவமான ஷிர்க் என்பதன் பொருள் என்ன? அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதைல்லை? என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவதுகட்டாயக் கடைமையாகும். அவ்வாறு அறியும் போதுதான் ,அதை விட்டு விலகி, உண்மையாகவும் தூய்மையாகவும் அல்லாஹ்வை வணங்க முடியும்.
ஷிர்க் என்பது சிலைகளை வனங்குவதும், கோவில்களுக்குச் சென்று அவைகளுக்கு வழிபடுவதும் மட்டும்தான் என முஸ்லிம்களில் பலர் கருதி வருகின்றனர். இதனால் ஷிர்க்கான பல செயல்களை செய்து விட்டு அவைகள் ஷிர்க் அல்ல என்றும் எண்ணுகின்றனர். இந்த தப்பெண்ணத்தால் பலர் பாதிக்கப்பட்டு ஷிர்க்கான செயல்களை செய்து தங்களை நரகநெருப்பிற்காக சித்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் இஸ்லாமிய பெயர் வைத்துக்கொண்டு சமுதாயத்தில் ஒருவனாக ஆகிவிடுவதால் மட்டும் ஷிர்க்கை விட்டு தூய்மையாகி விடலாம் என்று. எனவே இவர்களிடம் ஷிர்க்கான செயல்களைச் செய்யாதீர்கள் விட்டு விடுங்கள் என்று கூறும்போது, நாங்கள் என்ன ஹிந்துக்களா? நாங்கள் ராமனை வணங்குகிறோமா? கிருஷ்ணணை வணங்குகிறோமா? எங்களைப் பார்த்து ஷிர்க்கான செயல்கள் புரிகிறோம் என்று கூறுகின்றீர்களே? என்று கேட்கின்றனர். ராமன், கிருஷ்ணன் போன்றவர்களை வணங்குவது மட்டும்தான் ஷிர்க் என்று இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இதற்குக் காரணம் ஷிர்க்கைப் பற்றிய அவர்களின் அறியாமையே ஆகும்.
ஷிர்க் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் செய்யவேண்டிய வணக்க வகைகளில் எதையாவது அல்லாஹ் அல்லாதாருக்குச் செய்வது, படப்பினங்களில் எதையாவது, எவரையாவது அல்லாஹ்வுக்கு நிகராக்குவது, இதுதான் ஷிர்க்காகும். அதாவது தவ்ஹீத் என்னும் ஏக இறைக்கொள்கைக்கு நேர் முரணானதுதான் ஷிர்க் முஸ்லிம்கள் அனைவருக்கும் லாயிலாஹா இல்லல்லாஹ் என்னும் கலிமாவை மொழிந்திருக்கிறார்கள். இக்கலிமாவின் பொருள் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும். இந்த கலிமத்துத் தவ்ஹீதை நம்பி அதன்படி செயல்படுவதுதான் ஏக இறை நம்பிக்கையாகும்.