-மு.அ.அப்துல் முஸவ்விர்
அரேபிய நாயகன்! அகிலத்துக் காவியத் தலைவன்..! அனைவருக்கும் அன்பான அழகிய ஆதவன்..!அறிவியலையே அசர வைத்த அறிஞன்! அகிலத்துக்கோர் அருட்கொடை! பிஞ்சுள்ளங்களையும் போற்றிய பிதாமகன்! பெண்ணியத்தைப் போற்றிய பெருமான்! நற்குணங்களின் நாயகன்! எங்கள் உயிருக்கும் மேலான, தானைத் தலைவன்..!
உலக மதக் கண்ணோட்டத்தில் நீங்கள் எந்த மதச்சார்புடையவராகவும் இருக்கலாம். உங்கள் கொள்கை எதுவாகவும் இருக்கலாம்.இவ்வையகத்தை சிறந்த உயர் கொள்கைகளைக் கொண்டு அலங்கரித்த ஒரு மனிதப்புனிதரை அறிந்து கொண்டீர்கள் என்றால், வாழ்வின் உண்மைப் பொருள் என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.அவருடைய ஆளுமையின் உன்னத தாத்பர்யத்தை புரிந்துகொள்ள முடியும்.உலகாயத மோகம் கொண்ட சக்திகள் அவரை பழிப்பது எத்துணை பெரிய குற்றம், அபாண்டம் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்..!
யார் இந்த மனிதர்..?
அகிலத்தாருக்கெல்லாம் முன்மாதிரி அவர்..!ஆனால் இறைவிதி மீறா இனிய அலங்காரம் அவர்..!!அனைவரும் போற்ற வேண்டிய ஆளுமையின் சிகரம் அவர்..!ஆனால், பிறரை ஆட்டிப் படைக்கும் அகங்காரம் கொண்டவர் அல்ல அவர்..!!அமைதியின் அழகு கோலோச்சும் நீரோடை அவர்..! எண்ணத்தினால்கூட பிறரை மாசுப்படுத்தாத தூய நெஞ்சக்காரர்! நீதியை ஏட்டளவில் ஏந்தி வந்த ஏவல்காரர் மட்டுமல்ல.., அதனை அமல்படுத்தி.., நெஞ்சத்து அடைத்த வன்நெஞ்சரையும் நெகிழ வைத்து நெடிதுயர்ந்த நீதிமான் அவர்..!!
அன்னாருடைய காலத்தில் நடந்த நிகழ்வொன்றின் இரத்தினச்சுருக்கம் இது: யூதர் ஒருவர்;, ‘ உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்’ என அந்த நீதிமானிடம் வந்தார். ‘அவரைக் கூப்பிடுங்கள்’ என்றார் அந்த நீதிமான்!
(அவரிடம்) ‘இவரை முகத்தில் அறைந்தீரா?, என்று கேட்டார். அதற்குஅவர், ‘… நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக!’என்று கூறக் கேட்டேன். உடனே நான், முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா?’ என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்’ என்றார். உடனே அந்த நீதிமான் ‘இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். சர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள்.அவர்கள் எனக்கு முன்பே சர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது தூர், (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டார்களா? என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூஹூரைரா (ரலி) ஆதாரம்:புகாரி எண்:620
ஆம்..! முஹம்மத் (ஸல்) அவர்கள்தான், அந்த நீதிமான்..!
இங்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் தன்னை மற்ற தூதர்களை விட உயர்த்தி பேச வேண்டாம் என்று தடுப்பதைப் பார்க்கிறோம்.
சற்று சிந்தியுங்கள்.எந்த ஒரு மனிதனும் தனது சீடர்கள் தனக்கு சேவகம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தன்னை முன்னிறுத்தி எதுவொன்றையும் தோற்றுவிக்கின்றான். நவீனகால தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல..!
ஆனால் இங்கு நிலைமை தலைகீழ்..! ஒரு முஸ்லிம் தன் உயிரினும் மேலான முஹம்மத் (ஸல்) அவர்களை உயர்த்தி பேசி ஒரு யூதரை அடித்து விடுகிறார். அந்த யூதரும் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் முறையிட்டால் நீதி கிடைக்கும் என்று நம்பி முறையிடுகிறார். முஹம்மத் (ஸல்) அவர்களும் தன்னைப் புகழ்ந்த முஸ்லிமை கண்டித்து மூஸா (அலை) அவர்களைவிட என்னை அதிகம் புகழாதீர்கள் என்று அந்த முஸ்லிமுக்கு அறிவுறுத்துகிறார்.
இதுதான் அந்த மாமனிதரின் வெற்றிக்கு அடிப்படை..! எங்கு தேடினாலும் இத்தகையதொரு ஆளுமைக்கு நிகராக ஏன் அதன் ஒரு பகுதியாகக்கூட எவரையும் பார்க்க முடியவில்லை வரலாறு முழுவதும்..!
யார் இந்த முஹம்மத் (ஸல்)..?
இறைவனிடமிருந்து இத்தரணியில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப் போகின்ற உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்ட இறைத்தூதர்தாம் முஹம்மத் (ஸல்). மனிதகுல மாணிக்கமாக,அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாக வாழ்ந்து சென்றவர்தாம் அண்ணலர் நபிகளார் (ஸல்).
அரபி அல்லாதவரைவிட அரபியோ,அரபியைவிட அரபி அல்லாதவரோ சிறந்தவர் அன்று.உங்களில் எவர் இறையச்சம் மி;க்கவரோ அவரே உங்களில் சிறந்தவர்’ என்றும், பிறரைக் கீழே வீழ்த்திவிடுபவன் பலசாலி அல்ல.,கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே பலசாலி’ என்றும், பொறாமை நற்செயல்களை அழித்துவிடும்’ என்றும் ஏராளமான நல்லுரைகளைச் சொல்லி அமைதியான சமூகத்திற்குப் பாதை அமைத்துக் கொடுத்தவர்!
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியார் அன்னை ஆயிஷா (ரலி), அண்ணல் (ஸல்) அவர்களின் மரணம் வரை அவருடன் இருந்தவர்.அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்:அண்ணலார் (ஸல்) எவரையும் எந்தக் காலத்திலும் திட்டியதில்லை.தனக்குக் தீங்கிழைத்தவர்களை மன்னித்து அவர்களுக்கும் நன்மையையே செய்து வந்திருக்கின்றார்.சொந்த விவகாரங்களில் எவரையும் பழிக்குப் பழி வாங்கியதில்லை.எந்தவொரு மனிதரையம் அவர் சபித்ததில்லை.எந்தவொரு பணியாளரையும் பணிப்பெண்ணையும் கை நீட்டி அடித்ததில்லை’
பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள், ‘தீண்டாமை நோய்க்கு ஒரே மருந்து முஹம்மதின் மார்க்கம் மட்டுமே! அதுதான், இருக்க
இடம் கொடுக்கும்! நிமிர்ந்து நடக்கச் செய்யும்! வீரம் கொடுக்கும்..!’ (1947 மார்ச்-18, திருச்சி சொற்பொழிவில்) என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவுறுத்திய மார்க்கத்தைப் புகழ்கின்றார்.
அறிவும் ஆர்வமும் வாய்ந்த நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இவ்வளவு தான். சற்று நிதானித்து, உங்களை நீங்களே வினவிக் கொள்ள வேண்டும். இந்தக் கூற்றுக்கள் எல்லாம் உண்மை தானா? இந்த அசாதாரனமான, புரட்சிகரமான சாதனைகள் உண்மையில் நடைபெற்றனவா? அவை உண்மையாயிருப்பின் இம்மாமனிதரை நான் அறிந்திருக்கின்றேனா?
இன்றை வரையிலும் நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளவில்லை என்றால் இனியும் நேரத்தை வீணாக்காமல் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அதற்கு உங்களுக்கு அதிக நேரமும் சக்தியும் அவசியப்படாது. அன்றியும் உங்களுடைய இந்தத் தூய முயற்சி உங்கள் வாழ்வில் ஒரு புதிய சகாப்தத்தை அமைக்கும், ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்து விடும்.
வாருங்கள்! வியக்கத்தக்க இம்மாமனிதருடைய வாழ்வைப் பயில நாம் முற்படுவோம். இவரைப் போன்ற எந்தவொரு மனிதரும் இம் மண்ணுலகில் வாழ்ந்ததேயில்லை. அவருடய வாழ்வையும் முன்மாதிரியையும் பின்பற்றுவோமேயானால் நம் வாழ்விலும் பெரும் திருப்பம் ஏற்படும். உன்னதமிக்க ஒரு புத்துலகம் உருவாகும். இறைவன் அண்ணலார் மீது சாந்தி மழை பொழிவானாக..!அவர் தம் இனிய வாழ்க்கையை பின்பற்றுவோமாயின் இருமை வாழ்விலும் நாம் மேன்மையடைவோம்.
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali


