தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்த மகான் அவர் என்று ஒருவ
ருடைய இரக்கத்தை மேம்படுத்துவதாகட்டும்,உன்னை தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திடறேன் பார் என்று ஒருவருக்கு தண்டனை தருவதாகட்டும்,என்னமா தண்ணி காட்றான் பாரு என்று பிறரை சுற்றலில் விடும் ஒருவருடைய கையாலாகாத்தனத்தை விளிப்பது ஆகட்டும்…, வாழ்வின் பல்வேறு அம்சங்களில் இந்த தண்ணீருக்குத்தான் எத்தனை தொடர்பு.
அனைத்தையும் தண்ணீரினால் படைத்தோம் என்கின்றது இறுதி வான்மறை.நீரின்றி அமையாது உலகு என்கின்றான் வள்ளுவன்.ஆனால், இன்றைய உலகிலோ தண்ணீருக்காக உரிமை கொண்டாடுகின்ற..,தண்ணீரைக் காசாக்குகின்ற..,தண்ணீரை விரயமாக்குகின்றவர்களும்; இந்த மனித சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.
மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்பு இருப்பின் அது தண்ணீரைப் பெற வேண்டுவதற்காகத்தான் இருக்கும் என்கின்றது அரசியல்-சமூக பார்வையாளர்களின் பிரிவு ஒன்று.அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கின்ற தண்ணீருக்காக பல ரூபங்களில் பிரச்னைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன அன்றாடம்.
அதிலும் தமிழகம்
இந்த விஷயத்தில் பெரும் அவஸ்தையில் சிக்குகின்றது ஒவ்வொரு முறையும்.
முன்பு கிருஷ்ணா நதி நீருக்காக ஆந்திராவுடன்,பின்னர் காவிரிக்காக கர்நாடகாவுடன்,இப்போது முல்லை பெரியாறு அணைக்காக கேரளாவுடன் என்று முப்புறத்திலும் அண்டை மாநிலங்களுடன் மல்லுக்கட்டி நிற்க வேண்டிய நிலை.
நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று கோரிக்கைகள்,பரஸ்பர கண்டனங்களுடன் போராட்டங்கள்,தெருவாசி முதல் நடிக-நடிகையர் வரை உண்ணாவிரத உசும்பல்கள்,நாட்டுத் தலைவர்களிடமிருந்து உறுதிமொழிகள், என்று பல வகைகளில் தண்ணீருக்காக அப்போது மட்டும் போராடிவிட்டு அமர்ந்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலை மாற வேண்டுமெனில் நிரந்தர தீர்வுக்கு மனித சமூகம் வழி காண வேண்டும்.யாருக்கும் சாதகமோ பாதகமோ இன்றி அதேவேளை நியாயமான வகையில் தீர்வு வேண்டும்.
ஆம், அதற்கு முதலில் இயற்கை தந்த அழகிய வசதிகள் அனைத்தும் ஏகஇறைக்கு சொந்தமான உரிமைகள்.அதனை அனுபவிக்கும் பாத்யதை மட்டுமே எமக்குரிய உரிமைகள்.அதனை எம் வசப்படுத்திக் கொண்டாடுவது மனிதாபிமானமற்ற குற்றச்செயல்கள். இதனை மனித சமூகம் உணர வேண்டும்.
பயன்பாடுகளின் பொதுவான அம்சங்கள் குறித்து வீண் விரயம் கூடாது என்று எச்சரித்த இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், தண்ணீர் விஷயத்தில் அதிகமாகவே எச்சரிக்கைப்படுத்தியிருக்கின்றார்கள்.
பல்வேறு நபிமொழிகள் இதுவிஷயத்தில் இருந்தாலும் உதாரணத்துக்கு ஒன்றாய் இதனைக் கூறமுடியும்: தேவைக்கு அதிகமாக தண்ணீரை தடுத்து வைத்து, (பிற)விளைநிலங்களுக்கு (பாய்ச்சுவதைத்) தடுத்துக்கொள்பவருக்கு இறைவன் மறுமையில் அவர்களுக்குரிய உணவை தடுத்துவிடுவான் எனும் பொருள்பட்ட நபிமொழி ஒன்று அம்ர் பின் ஷூஐப் அன் அபீஹி அன் ஜன்திஹி அவர்களுடைய அறிவிப்பில் முஸ்னத் அஹ்மத் எனும் நபிமொழி கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.
அந்த அளவுக்கு தண்ணீர் முக்கியத்துவம் வாய்ந்தது.
எனவே, எந்தவொரு தரப்பும் இத்தகைய விஷயங்களில் இறைநியதிப்படியான வழிமுறைகளைக் கைணயாண்டால் பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை.அனைத்துக்கும் உரிமையாளன் ஏகஇறைவன் மட்டுமே என்பதை உணர்ந்து அவன் காட்டிய வழியில் தண்ணீர்ப் பிரச்னை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய மற்றும் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு காண முடியும் அதற்கு வழிகாட்டுவதுதான் திருக் குர்ஆனும் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையும்.அவற்றைப் பின்பற்றுவோம்.தீர்வுகள் பெறுவோம், இறைநாடின்.
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali

