ரியாளுஸ் ஸாலிஹீன் ..!

 

இந்நூல் வெளிவருவதற்கு தக்க ஆலோசனைகள் கூறி உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

இந்நூல் வெளிவருவதற்கு தக்க ஆலோசனைகள் கூறி உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

தமிழில்:  மஸ்தான் அலீ பாகவி, உமரி

அள்ளக்குறையாத அறிவுச் சுரங்கம்!

பதிப்புரை:
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலாத்தும் ஸலாமும் நபிகள் நாயகம் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் பொழியட்டுமாக!
இவ்வுலகையும் உலகின் மிகச்சிறந்த படைப்பாக மனிதனையும் படைத்த இறைவன் மனித வாழ்க்கை இப்படித்தான் அமைய வேண்டுமென வகுத்துக் கொடுத்த மகத்தானதொரு வாழ்க்கை நெறிதான் இஸ்லாம்!
மனிதனை அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழச் செய்து மரணத்திற்குப் பின்னர் நாளை மறுமையில் அவனுக்கு, அல்லாஹ்வின் அன்பையும் கிருபையையும் மன்னிப்பையும் பெற்றுத் தந்து அருட்பேறுகள் நிறைந்த சுவனபதிக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் இனிய நெறிதான் – இறைமார்க்கம்தான் இஸ்லாம்!
இத்தகைய ஒப்பற்ற இஸ்லாமிய சன்மார்க்கத்தை இவ்வுலகத்தாருக்கு எடுத்துரைத்து நேர்வழி காட்டுவதற்காக எண்ணற்ற நபிமார்கள் இவ்வுலகில் தோன்றினார்கள். அவர்களுள் இறுதித் தூதராக முஹம்மத் நபி(ஸல்) அவர்களை அனுப்பி வைத்த எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ், அல்குர்ஆன் எனும் மகத்தான வேதத்தையும் அவர்களுக்கு வழங்கினான்.
திருக்குர்ஆனும் திருநபி(ஸல்) அவர்கள் அருளிச்சென்ற ஹதீஸ்களும் இஸ்லாமிய சன்மார்க்கத்தின் இரு மூலாதாரங்களாகும்!
இறைவன் தன்னுடைய இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை முழுமையான அறிவு ஞானத்துடன் பேசச் செய்தான். நாளும் பொழுதும் அப்படி அவர்கள் நவின்ற நல்வாக்குகள்தான் ஹதீஸ்கள் என்கிற பொன்மொழிகள். அவை யாவும் தூய்மையானவை. பாதுகாக்கப்பட்டவை! குர்ஆன் ஓரிடத்தில் கூறுகிறது:
‘அவர் மன இச்சைப்படி பேசுவதில்லை. அவர் பேசுவது, (அவர் மீது ) இறக்கியருளப்பட்ட வஹியே தவிர வேறில்லை!’ (53 : 3-4)
நபிகளார் மொழிந்தவை மட்டுமல்ல, அவர்கள் செய்தவையும் செய்வதற்கு அனுமதி அளித்தவையும் – அனைத்தும் ஹதீஸ்களின் கீழ் வருபவைதான். இம் மூவகை ஹதீஸ்களும் குர்ஆனுக்கு அழகியதொரு விரிவுரையாகவும் அதன் உன்னத கருத்துக்களையும் உயர் இலட்சியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் கலங்கரை விளக்காகவும் அமைந்துள்ளன.
ஆம்! அகிலத்திற்கோர் அருட்கொடையாய், அழகிய முன்மாதிரியாய் அனுப்பப்பட்ட, நற்குணத்தின் மிக உன்னத நிலையில் நின்று வாழவும் வழிகாட்டவும் செய்த பூமான் நபியவர்களின் பாக்கியம் நிறைந்த ஹதீஸ்கள்-
 வானுலகத்து வஹி அருளிய தெளிந்த நீரோடை மூலம் இப்புவி வாழ் மக்களுக்குப் புது வாழ்வு நல்கின. நல்கிக் கொண்டே இருக்கின்றன!
 மனித வாழ்வின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் ஊக்கமளித்து மிகச் சிறந்த பண்பாட்டைத் தோற்றுவிக்கக்கூடிய நன்நெறிகளையும் நல்லொழுக்கங்களையும் அவற்றிற்குத் தேவையான அறிவுரைகளையும் ஞானங்களையும் அளித்தன. அளித்துக் கொண்டே இருக்கின்றன!
 வாய்மையும் தூய்மையும் மிக்க வணக்க வழிபாடுகளையும் அவற்றின் ஒழுங்கு முறைகளையும் வழங்கின. வழங்கிக் கொண்டே இருக்கின்றன!
சுருங்கக்கூறின், எத்தகைய தூய்மையான வணக்க வழிபாட்டை, நேர்மையான வாழ்க்கையை மனிதனிடம் இருந்து இஸ்லாம் விரும்புகிறதோ அதற்கேற்ப அல்லாஹ்வின் அருள் வேதமாகிய அல்குர்ஆனின் கருத்துக் கருவூலங்களை வெளிக்கொணரும் அள்ளக் குறையாத அறிவுச் சுரங்கமே அண்ணல் நபிகளாரின் ஹதீஸ்கள்!
அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களாகிய ஸஹாபாப் பெருமக்கள் திருக் குர்ஆனுடனும் ஹதீஸ்களுடனும் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருந்தார்கள். அவ்விரண்டின் அடியொற்றியே அவர்கள் வாழ்ந்தார்கள் என்பது மட்டுமல்ல குர்ஆனையும் ஹதீஸ்களையும் மனனம் செய்தார்கள். ஆய்வு செய்தார்கள், தொகுத்துப் பாதுகாத்தார்கள். தொல்லுலகெங்கும் பரப்பிடப் பாடுபட்டார்கள்.
அல்லாஹ்வின் பேருதவியினால், எல்லாக் காலத்திலும் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள், மார்க்க அறிஞர்கள், மாமேதைகள் அனைவரின் கருத்திலும் கவனத்திலும் அண்ணல் நபிகளாரின் ஹதீஸ்கள் இடம்பெற்றன. அனைவரின் வாழ்வையும் பண்படுத்தின. ஹதீஸ்களை மனனம் செய்வதும் ஆராய்வதும் அவற்றிற்கு நூல் வடிவம் கொடுப்பதும் இவ்வுலகில் தொடர் பணிகளாயின. பல்வேறு கோணங்களில் ஹதீஸ்கள் ஆய்வு செய்யப்பட்டு முஸ்னத்களிலும் ஸிஹாஹ்களிலும் ஸுனன்களிலும் முஃஜம்களிலும் வரிசைப்படுத்தப்பட்டன.
இத்தகைய பணிகளில் பங்கு பெற்றவர்களுள் ஒருவர்தாம் இமாம் அபூ ஜகரிய்யா யஹ்யா ஷரஃப் அந் நவவி (ரஹ்) அவர்கள். (631 – 676) இவர்கள் ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டின் புகழ் மிக்க மாமேதைகளுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவை யாவும் மக்களின் வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றன. மார்க்க அறிஞர்கள் அந்நூல்களை பல கோணங்களில் ஆய்வு செய்தனர். தாங்களும் பயன் பெற்றனர். மக்களுக்கும் பயனளித்தனர்.
இமாம் நவவி அவர்களின் நூல்களில் மக்களின் அதிகப் பயன்பாட்டிற்குரிய, பாமரர் – பண்டிதர் அனைவரிடையேயும் அறிமுகமான நூல்தான் ரியாளுஸ் ஸாலிஹீன் மின் கலாமி ஸைய்யிதில் முர்ஸலீன்.
அனைத்துத் தரப்பு மக்களிடையும் இத்தொகுப்பு அதிக அளவு புகழ் பெற்றதற்குக் காரணம், இந்நூல் வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய சீரான அறிவுரைகளைத் தனித்தனித் தலைப்புகள் அமைத்துச் சிறப்பாய் வழங்குகிறது என்பதுதான்.
இஸ்லாத்தின் நன்நெறிகளிலும் நற்குணங்களிலும் நல்லார்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு பாடத்திற்கும் குர்ஆன் வசனங்களை மணிமகுடமாகச் சூட்டி ஆர்வமூட்டுதல், அச்சுறுத்துதல் எனும் இரு அம்சங்களைக் கொண்ட ஹதீஸ்களையும் அணிகலன்களாக அணிவித்துப் பார்ப்போரும் படிப்போரும் கேட்போரும் இன்புறும் வகையில் அறிவுக்கு அருசுவை விருந்தொன்றை இந்நூல் படைத்துத் தருகிறது!
பள்ளிவாசல் இமாம்கள் தொழுகைக்குப் பின்னர் அல்லது முன்னர் இந்நூலைப் படித்துக் காட்டுவதும் மக்கள் அனைவரும் நல்லார்வத்துடன அதனைச் செவிமடுப்பதும் உலகின் பலநாடுகளிலும் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுவதே இதற்குச் சான்றாகும்.
சமகால அறிஞர்களிடையே கல்வி ரீதியில் ஓர் ஒளிமிக்க உன்னத இடத்தை இமாம் நவவி (ரஹ்)அவர்கள் பெற்றிருந்ததும் ஒரு காரணமாகும். அந்த அளவுக்கு ஆழமான அறிவு ஞானமும் நபிமொழியின் இலக்கினைத் துல்லியமாகப் புரிந்து கொள்கிற – புரிய வைக்கிற ஆற்றலும் அவர்களிடம் நிறைந்திருந்தன.
இவ்வாறாக இந்த ரியாளுஸ்ஸாலிஹீன் நூல், ஏனைய நபிமொழித் தொகுப்புகளைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்து விளங்குவதை நாம் காணலாம்! உண்மையில் இந்நூல் சொற்பொழிவாளர்களின் துணைவன். அறிவுரை பெறுவோர்க்கு ஓர் அரிய கருவூலம்! நடைபயில்வோருக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு! உத்தமர்களின் பூங்காவனம்!
ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் தொகுப்புக்கு – சுவூதி அரேபியாவின் உனைஸா மாநகரைச் சேர்ந்த, அண்மையில் காலமான அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாய் இருந்தார்கள். இமாமாகவும் கத்தீபாகவும் அவர்கள் பணியாற்றிய உனைஸா பெரிய பள்ளிவாசலில் நாள்தோறும் தொழுகைக்குப் பிறகு இந்நபிமொழிகளுக்கு விரிவான விளக்கத்துடன் அழகியதோர் உரையினை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவை யாவும் சுமார் ஏழு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன!
உனைஸா இஸ்லாமிக் சென்டரில் இரவு நேர ஹதீஸ் வகுப்புகளில் கலந்துகொண்ட தமிழ் அன்பர்கள், ஷைகு முஹம்மத் (ரஹ்) அவர்களின் விரிவுரை நூலை அடிப்படையாகக் கொண்டு நான் அளித்த விளக்கங்களைக் கேட்டதும் இவற்றைத் தமிழில் நூலாகத் தொகுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே என்று விரும்பினார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்பவே இந்நூலை நான் எழுதத் தொடங்கினேன்.
அல்லாஹ்வின் பேருதவியினால் இப்பொழுது முதல் பாகம் நிறைவு பெற்று உங்கள் கைகளில் மலர்ந்துள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
தமிழ்நாட்டிலுள்ள மகளிர் மத்ரஸாக்களில் ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் தொகுப்பு பாடநூலாக இடம் பெற்றுள்ளது. ஆகையால் மாணவிகளின் பயன்பாடு கருதியே ஒவ்வொரு ஹதீஸ் தெளிவுரைக்கும் பொருத்தமான தலைப்பும் இறுதியில் அறிவிப்பாளர் அறிமுகமும் அரபியிலும் தமிழிலும் அருஞ்சொல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த முதல் பாகத்தில் 59 நபிமொழிகளின் தெளிவுரையே இடம் பெற்றுள்ளது. இமாம் நவவி(ரஹ்) அவர்கள் தங்களது தொகுப்பை பதினேழு அத்தியாயங்களாக அமைத்து 265 பாடங்களும் 1897 நபிமொழிகளும் இடம்பெறச் செய்துள்ளார்கள்! இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து இப்பணியை நிறைவு செய்ய நாடியுள்ளேன். அதற்கான கால அவகாசத்தையும் உடல் நலத்தையும் அல்லாஹ்விடம் யாசிக்கிறேன்!
இந்நூல் வெளிவருவதற்கு தக்க ஆலோசனைகள் கூறி உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!
அபூ காலித் உமரி

வெளியீடு: இஸ்லாமிக் சென்டர், உனைஸா, சவுதி அரேபியா

Related Post