தீவிரவாத மதமல்ல, இஸ்லாம் .,!

– பீர்

இஸ்லாத்தை பற்றிய தவறான உருவகத்தை மாற்ற வேண்டிய கடமை, பொறுப்பு, இஸ்லாமியர்களுக்கே இருக்கிறது.

இஸ்லாத்தை பற்றிய தவறான உருவகத்தை மாற்ற வேண்டிய கடமை, பொறுப்பு, இஸ்லாமியர்களுக்கே இருக்கிறது.

“எங்கள் அதிபதியே! உன்னையே நாங்கள் முழுமையாகச் சார்ந்திருக்கின்றோம். உன் பக்கமே நாங்கள் மீண்டுவிட்டோம். உனது திருச்சமூகத்திற்கே நாங்கள் திரும்பிவரவேண்டி இருக்கின்றது. எங்கள் அதிபதியே! நிராகரிப்பாளர்களுக்கு எங்களை ஒரு சோதனையாய் ஆக்கிவிடாதே! எங்கள் அதிபதியே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருள்! ஐயமின்றி நீயே வல்லமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றாய்.” அதே மக்களுடைய நடத்தையில் உங்களுக்கும், அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்ற ஒவ்வொருவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. எவரேனும் இதனைப் புறக்கணித்தால், அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான். உங்களுக்கும், நீங்கள் (இன்று) யாருடன் பகைமை கொண்டிருக்கின்றீர்களோ அவர்களுக்குமிடையே அல்லாஹ் என்றைக்கேனும் அன்பை ஏற்படுத்தக்கூடும். அல்லாஹ் பேராற்றலுடையவன்; மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான்.  தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான். அவன் தடுப்பதெல்லாம் எவர்கள் தீன் தொடர்பாக உங்களுடன் போர் புரிந்தார்களோ, உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றினார்களோ மேலும், உங்களை வெளியேற்றுவதில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டார்களோ அவர்களுடன் நீங்கள் நட்பு கொள்வதைத்தான்! அவர்களுடன் எவரேனும் நட்பு கொண்டால் அவர்களே கொடுமையாளர்கள் ஆவர்.

‘அமைதி’ என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து பிறந்த சொல்லையே தனது மதத்தின் பெயராகக்கொண்ட இஸ்லாமியர்களுக்கெதிரான பிரச்சாரத்தில் ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்ற சொல்லாடலுக்கான எண்ணம் ஃ திட்டம் ஒரளவு வெற்றி பெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். நீண்டகாலமாக கட்டவிழ்த்து விடப்படும் இப்பிரச்சாரத்தின் பெரும் பங்கு ஊடகத்துறையையே சாரும் என்பதையும் மறுக்க முடியாது. பொதுஅறிவு வளர்க்க வேண்டிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவையே இந்த பாதகச்செயலை முன்னின்று செய்வது துரதிஷ்டவசமானது. பொழுதுபோக்கு சாதனமாக திரைப்படம் பார்க்கப்பட வேண்டும் என்றாலும், பார்க்கப்பட்டாலும், அதற்கு மிகப்பெரிய (அழிவு) ஆக்கசக்தி உண்டு என்பதையும், உளவியல் ரீதியில் நிச்சயம் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதையும் சமீபத்திய திரைப்பட விமர்சனங்களில் பார்க்க முடிகிறது. இத்திரைப்பட விமர்சனமானது, படைப்பை விமர்சித்து, படைப்பாளனை விமர்சித்து, தற்போது விமர்சகனை விமர்சிக்கும் நிலையில் நிற்கிறது. இந்நிலையில் இரண்டு விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று; பொழுதுபோக்கு சாதனமான திரைப்படம், முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று சொல்லக்கூடிய இணைய நண்பர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை நேரடியாகக் காண முடிவது. (தவிர, எந்த முற்போக்கு சிந்தனையுமில்லாமல், பொழுதுபோக்கிற்கு திரைப்படம் காண வரும் ஒருவனின் உளவியல் பாதிப்புக்களை அவதானிக்க முடியாது, அது எத்தன்மை கொண்டதாகவும் இருக்கலாம்.) இரண்டாவது; இணையம் என்ற ஊடக வெளியும், முன்னெப்போதையும் விட தற்போது மிக வீரியமாக துவேஷப்பரப்புரையை நிகழ்த்தி வருவது. அதற்கான மிக முக்கிய காரணமாக நான் விளங்குவது, மற்ற ஊடகங்களைப்போல இங்கு முகம் காட்டவேண்டியதில்லை என்பதே. மேலும், இப்பதிவு திரைப்பட விமர்சனமோ, விமர்சக விமர்சனமோ இல்லையாதலால், இது… இங்கேயே கிடக்க.

‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்ற சொல்லாடல் இஸ்லாமியர்களுக்கு கசப்பு தருவது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மையே தீவிரவாத விகிதாச்சாரத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதும். அமைதியை போதிக்கும் இஸ்லாத்தில், சிலரது இத்தகைய தீவிர நடவடிக்கைகள், இஸ்லாத்தை காக்கும் என்பதோ, அதன் வளர்ச்சிக்கு உதவும் என்பதோ எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, வரலாற்றில் இதுவரை நிரூபிக்க முடியாததும் கூட. அமைதியை அமைதி எனச் சொல்லும், அமைதியாய் வாழ்ந்து காட்டும் முயற்சியும் இதனால் சாத்தியப்படாமல் போகிறது என்பதே உண்மை. வன்முறையால் அவர்கள் தமக்குத்தாமே ‘கபர்’ குழிபறித்துக்கொள்ளவதோடு, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் தடையாகிறார்கள் என்பதை உணரவேண்டும். வன்முறையால் எதையும் சாதிக்கலாம் என்பது இஸ்லாமிய சிந்தனை அல்ல. வன்முறையால் வளர்ந்த சித்தாந்தம் காலப்போக்கில் மக்கிக்போன வரலாறுகளைப் பார்க்க முடிகிறது. இத்தகைய செயல்களாலேயே, இஸ்லாம் போதிக்கும் முறைப்படி, ‘தன்னை படைத்தவனுக்கு நன்றி செலுத்தி, அமைதியாய் வாழும்’ பெரும்பான்மை முஸ்லீம்களும், ”என்னடா! எங்க குண்டு வைக்கலாம்ன்னு பிளான் செய்யறீங்களா?” போன்ற அருவருக்கத்தக்க கேளிச் சொற்களால் கூனிக்குறுகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இஸ்லாமியன் பெயரைக்கேட்டாலே ‘வீடு காலி இல்லை’ என்பது இன்றைய பெரு நகர சகோதரர்களின் டெம்ப்ளேட் பதிலாகிவிட்டது. தீவிரவாதத்தின் ஒருசில எதிர்வினைகளான இவற்றையும் மனச் சங்கடங்களோடு எதிர்கொள்ள வேண்டியிருப்பது, ஆண்டாண்டு காலமாக சகோதர சமூகத்தில் ‘மாமு, மச்சான்’ எனப்பழகிவந்த முஸ்லீம்களுக்கு வேதனையளிக்கிறது.

இஸ்லாத்தை பற்றிய தவறான உருவகத்தை மாற்ற வேண்டிய கடமை, பொறுப்பு, இஸ்லாமியர்களுக்கே இருக்கிறது. பேச்சிலும் எழுத்திலும், குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரங்களை எடுத்துக்காட்டி ‘இஸ்லாம் அமைதி மார்க்கம்’ எனச் சொல்லிவிடுவதால் மட்டுமே, அது உண்மை என்பதை நிரூபித்துவிட முடியாது. இஸ்லாம் கூறும் அமைதி முறையை, மனித நேயத்தை, சீறிய வாழ்க்கை நெறியை பின்பற்றி வாழ்ந்து காட்டுவதால் மட்டுமே, இஸ்லாம், தீவீரவாதத்தை, பயங்கரவாதத்தை வெறுக்கிறது, இஸ்லாத்திற்கும் அதற்கும் துளியளவும் தொடர்பில்லை என்பதை நிரூபிக்க முடியும். அதன் மூலமே, சிலரது செய்கைக்கு முழு சமூகமும் பொறுப்பாகாது என்ற புரிதலுடனான, மாற்று மத சகோதரர்களின் நம்பிக்கையையும் நல்மதிப்பையும் பெறமுடியும். இஸ்லாமியர்களுக்கெதிரான மிகமோசமான சூழல் நிலவும் இந்தியப் பன்முகச் சமூகத்தில், இவற்றை சாத்தியப்படுத்துவது மிகக்கடினம் என்றாலும், செய்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய சிறுபான்மையினர் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தீவிரவாதம் என்பது நாடு, இனம், மதம் (சார்பு, சார்பற்ற), மொழி என்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை  உரக்கச்சொல்லியும் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை. நாடு, இனம், மதம் மற்றும் மொழி அடையாளங்களைச் சொல்லி தீவிரவாதத்தை தூண்டும் (i), அவற்றால் உந்தப்பட்டு தீவிரவாதம் செய்யும் (ii), தீவிரவாதத்திற்கு (நேரடி தொடர்பில்லை எனினும்) வர்க்க அடையாளங்கள் பூசும் (iii)அனைவரும் குற்றவாளிகளே, தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டியவர்களே. இவை மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையது போலவே சங்கிலித்தொடரானதும் கூட.

சிறுவயது முதல் கற்பித்து வளர்க்கப்படும் பல கருத்துக்களே மனிதர்களிடத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேர் விடுகின்றன. (என்னை அப்படியெல்லாம் வளர்க்கவில்லை என்று நாம் இப்போதும் சொல்லவதுண்டு.) அசோகர் மரம் நட்டார், பாலம் கட்டினார் என்பதாகச் சொல்லும் ஆரம்பப் பள்ளிக்கல்வியின் வரலாறு, முகலாய மன்னரின் பதின்மூன்று மனைவிகளையும், கஜினியின் பதின்நான்கு படையெடுப்பையும் மட்டும் சொல்லி ஒருதலைபட்ச இஸ்லாமியர்களுக்கெதிரானதுவேஷப்பரப்புரையை தொடங்குகிறது. இத்தகைய விஷவேர்கள் பிற்பாடு, ‘இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது’ எனும் பொய் கூற்றை பகுத்தறியாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது. அதுபோலவே, ‘இஸ்லாமியர்களுக்கு தேசப்பற்று இல்லை’ எனும் விஷமத்திற்கு வெள்ளையின எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த இஸ்லாமியர்களின் வரலாறு மறைக்கப்படுவதும் காரணமாக அமைந்து விடுகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் (கடவுள் நம்பிக்கை, வழிபாடு, நோன்பு, தானம் மற்றும்) கடைசியான ஹஜ் எனப்படும் புனித காபா செல்லும் கடமையை எந்த முகலாய மன்னரும் நிறைவேற்றிதாக குறிப்பு இல்லை. இஸ்லாத்தின் கடமையையே செய்யத்தவறிய முகலாய மன்னர்கள், இஸ்லாத்தை பரப்ப வாளேந்தியிருப்பார்கள் என்பதை பகுத்தறிவால் ஏற்க முடியவில்லை. வெள்ளையர்களுக்கு முன்பு நாடு பிடிக்க வந்தவர்கள், 600 ஆண்டுகளுக்கு முன்பான அகண்ட இந்தியாவை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக முழுதுமாக ஆண்டபோதே, இஸ்லாத்தை வன்முறையால் பரப்ப நினைத்திருக்க சாத்தியம் இல்லை என்பதற்கு இந்த சமூகம் இப்போதும் சிறுபான்மையாக இருப்பதே சாட்சி. இவர்கள், வாணிபத்திற்காக வந்தவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சாதீய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனிதநேயத்தை பார்த்து மனம் மாறி இஸ்லாத்தை தழுவியதனாலேயே இன்றளவும் இஸ்லாம் எனும் கயிற்றை பற்றிப்பிடித்து கொண்டிருப்பதை காணலாம்.

 

தீவிரவாதம் என்பது நாடு, இனம், மதம் (சார்பு, சார்பற்ற), மொழி என்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டது

தீவிரவாதம் என்பது நாடு, இனம், மதம் (சார்பு, சார்பற்ற), மொழி என்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டது

அது நிற்க… வணிக மையங்களிலும், இரயில் நிலையங்களிலும் வெடிகுண்டுகளை வீசி நூற்றுக்கணக்கில் உயிர்களைப் பறிப்பது நியாயம்தானா? விமானங்களைக் கடத்திப் பயங்கரவாதிகளை விடுவிக்கப் பணயம் வைப்பது இஸ்லாம் சார்ந்த பணிகளா? ஒரு பாவமும் செய்யாத பச்சிளங்குழந்தைகளும், பெண்களும் செத்து மடிவதை வேடிக்கை பார்க்கத்தானா இஸ்லாம் கூறுகிறது? இத்தகைய வன்முறைச் செயலுக்கெல்லாம் இஸ்லாத்தை பொதுப்படுத்தி நியாயம் சொல்வது சரியா? என்பது போன்ற பல கேள்விகள் எல்லோருக்கும் எழலாம். இவற்றிற்கெல்லாம் பதில்.

இல்லை… இல்லை.. இல்லை… இஸ்லாம் இதை கற்பிக்கவில்லை. வன்முறையை வெறுக்கும் மார்க்கம் இஸ்லாம். ‘மனிதர்களிடம் நீதியுடனும் நேசத்துடனும் நடந்துகொள்ளுங்கள்’ என்றுதான் முஹம்பது நபி சொல்லிச் சென்றிருக்கிறார்.

ஒரு சிலரின் வன்செயலுக்கு அவர்களது மதத்தையோ, மதத்தை பின்பற்றும் மக்களையோ குற்றவாளியாக்குவது எந்த விதத்தில் நியாயமாகும்? குஜராத்தில் கொடுஞ்செயல் நிகழ்த்திய மோடி, பாபு பஜ்ரங்கி மற்றும் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யாசிங் தாக்கூர்  போன்றோரால் ஒட்டு மொத்த இந்து சகோதரர்களையும் குற்றவாளியாக்கிப்பார்ப்பது எந்தளவு மடத்தனமோ, நியாயமில்லையோ… அதேபோல… இஸ்லாத்தின் பெயர் சொல்லும் சில தீவிரவாதிகளுக்காக மற்ற பெரும்பான்மை இஸ்லாமியர்களை குற்றஞ்சாட்டுவதும் அறிவிலித்தனம்.

எலி இருக்கும் இடத்தில் பூனை வருமாம்… எலியை விரட்ட மனிதனால் முடியாதா? எலியை கொல்ல, பூனை என்ற மிருகம் தான் வேண்டுமெனில், பூனையை கொல்ல, புலி வருவது அதைவிட ஆபத்தாச்சே. புலி என்ற மிருகத்திற்கு, சக மிருகமாகிய பூனை, மனிதன் என்ற வித்தியாசம் இல்லாமல், மனிதத்தையும் சேர்த்தே கொன்றுவிடுமே… எலியானாலும் புலியானாலும் மனிதர்கள் கைகோர்த்து காட்டுக்கு விரட்ட முடியாதா? மனிதர்கள் ஒன்றுபட்டால் மிருகங்களை விரட்டி விடலாமே.

எங்கோ செய்திகளில் கேட்பதையும், முகம் இல்லாதவர்களின் இணைய எழுத்தின் போலி குற்றச்சாட்டுகளையும், துவேஷத்தையும், கட்டுக்கதைகளையும் அப்படியே நம்பிவிடாமல், நம் அண்டை, எதிர் வீடுகளிலிருக்கும் மாற்று மத சகோதர்களை மனிதநேயத்துடன் கை கோர்த்து பார்ப்போம். நிச்சயம் என் அப்பாவி நண்பனால் இத்தகைய வன்செயல்களை ஈடுபடமுடியாது என்பதையும், எந்த கடவுள் கொள்கையும் அத்தகைய சமூக விரோதத்தை செய்யச்சொல்வதில்லை என்பதையும் உணர்ந்து கொள்வோம். மதத்திற்கு அப்பாற்பட்டவனாய் இருந்தாலும், பன்முகச் சமூகத்துடன் ஒன்றியிருக்கும் ஒருவனால் அச்சமூகத்தின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடமுடியாது என்பதை அனுபவித்து உணரலாம்.

தீவிரவாதத்திற்கு ‘புறக்கணிப்பு’ என்ற ஒற்றைச்சொல் தானே காரணமாக இருக்கிறது. தான், தன் இனம், மொழி, மதம் புறக்கணிக்கப்படுகிறது என்ற காரணம் தானே தீவிரவாதி உருவாக காரணியாகிறது.

சிலர் செய்யும் தவறுக்கு ஒரு சிறுபான்மைச் சமூகத்தையே புறந்தள்ளி ஒதுக்கிவிடாமல், ‘மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நீ என்ன செய்வாய்’ என்று தோளோடு கை கோர்த்து அரவணைத்து, அழைத்துச் செல்லவேண்டியது பெரும்பான்மையான ஒவ்வொருவரின் கடமையல்லவா? பயங்கரவாதத்தை வெறுக்கும் அனைவரும் ஒன்றுபட்டால், அதை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாதா? வாருங்கள்…

Related Post