ரமளான் நோன்பின் சிறப்புகள் – 3

 

‘நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்’

‘நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்’

 

1) ‘நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்’ ஆகவே, நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது. இன்னும் இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்களையும் செய்யக் கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் ‘நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி’ என்று கூறிக்கொள்ளட்டும். என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை, அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) நோன்பு நோற்றவன் தன் உணவையும், குடிபானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகின்றான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

3) சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு ‘அர்ரய்யான்’ என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். ‘நோன்பாளிகள் எங்கே’ என்று அழைக்கப்படும். அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசலால் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் (என) இரு சந்தோசங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

விளக்கம்: வணக்கங்களை அல்லாஹ் நம்மீது கடமையாக்கியது நாம் அல்லாஹ்விற்கு, கட்டுப்படுகின்றோமா இல்லையா? என்பதை சோதனை செய்வதற்குத்தான். வணக்கங்களை நாம் செய்வதினாலோ, அல்லது விடுவதினாலோ அல்லாஹ்விற்கு எந்த இலாபமோ, நஷ்டமோ கிடையாது. இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு வணக்கத்தை கடைமயாக்குவதின் மூலமாக ”எப்படிப்பட்ட தியாகத்தையும் அல்லாஹ்விற்காக நாம் செய்யத் தயாராக இருக்கின்றோமா” என்பதைச் சோதிப்பதற்கும்தான். அப்படிச் செய்பவர்களுக்கு கூலியாக, மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பைப் பொறுத்தவரை, மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது, பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும், இவைகளை வெறும் சடங்குக்காகச் செய்யக்கூடாது. வணக்கம் என்ற தூய எண்ணத்தோடு செய்ய வேண்டும். நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான். அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)

தக்வா (இறையச்சம்) என்றால், அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏவியவைகளைச் செய்தும், தடை செய்தவைகளை முற்றாக தவிர்ந்து நடப்பதாகும். ”தக்வாவின் உரிய தோற்றத்தை” நோன்பு நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. நோன்பாளி யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும்போதும், பசியுள்ளவராக இருந்தும், தன்னிடமுள்ள உணவை உண்பதில்லை. தாகமுள்ளவராக இருந்தும் எதையும் குடிப்பதில்லை. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றுவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் தனிமையில் இருந்தாலும் இந்த நோன்பை கடமையாக்கிய அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தினால்தான். இதுதான் ”இறையச்சத்தின் உண்மையான தோற்றமாகும்”. இத்தன்மை நோன்போடு முடிந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு வினாடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும். இந்த எண்ணத்தோடு வாழ்ந்தால்தான் தொழாதவர், நான் ஏன் தொழவில்லை? இத்தொழுகையைக் கடமையாக்கிய இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்து, தொழ ஆரம்பித்து விடுவார். பாவங்களில் ஈடுபடக்கூடியவர், அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் என்னைத் தண்டிப்பான் என்று நினைத்து, அதை விட்டுவிடுவார். இதனால்தான் அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில், ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான். ஆகவே, அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஏவியதில் முடியுமானவைகளைச் செய்தும், தடை செய்தவைகளை முற்றிலுமாக தவிர்ந்து நடப்பதற்கு உறுதியான முடிவெடுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

நோன்பில் இந்த உயரிய பண்பு இருப்பதினால்தான் அல்லாஹ் அதனை ஒரு தனிப்பட்ட வணக்கமாகக் கூறுகின்றான். ஹதீஸுல் குத்ஸியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ”நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யக்கூடிய எல்லா வணக்கங்களும் அவனுக்குரியதே” அது (நோன்பு) எனக்குரியது, அதற்கு நானே கூலிகொடுக்கின்றேன், (காரணம்) அவன் தன் இச்சையையும், உணவையும், குடிபானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகின்றான். எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். அப்படி இருந்தும் நோன்பை மட்டும் அல்லாஹ் தனித்துவப்படுத்திச் சொல்வதற்குக் காரணம், அது உண்மையான இறையச்சத்தோடும், இக்லாஸ் (மனத் தூய்மை) உடனும் நோற்கப்படுவதினால்தான். எனவே, நோன்பு விடயத்தில் அல்லாஹ்விற்கு நாம் அஞ்சுவது போன்று மற்ற எல்லா விடயங்களிலும், எல்லாக் காலங்களிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோமாக..!

யார் நோன்பை இந்த உயரிய நோக்கமின்றி வெறும் சடங்குக்காக நோற்கின்றாரோ, அதில் எந்தவித பயனும் இல்லை. ”யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டு விடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (புகாரி)

பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல், மற்ற எல்லாப் பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரமளான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா நற்செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய ஒரு மாதமாகும். தொழாதவர்கள் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கின்றனர். உம்ராச் செய்யாதவர்கள் உம்ராச் செய்கின்றனர். குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்துவிடுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் இது போன்ற பல நற்செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த நோன்பு. ஏன் இந்த நற்பண்புகளை நோன்பு அல்லாத மாதங்களிலும் தொடரக்கூடாது? நோன்பு மாதத்தில் எந்த இறைவனை அஞ்சி இந்த நற்செயல்களில் ஈடுபட்டோமோ, அதே போன்று மற்ற மாதங்களிலும் ஈடுபடவேண்டும். அவன் நோன்பு அல்லாத மாதங்களில் நம்மை கண்காணிப்பதில்லையா? நோன்பு அல்லாத மாதங்களில் நாம் மரணிப்பதற்கு வாய்ப்பில்லையா? ஏன் நோன்பு மாதத்தோடு இந்த நல் அமல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்? சிந்தியுங்கள்! விடை கிடைக்கும். நல் அமல்களை, தொடர்ந்து செய்வதற்கு, அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக…!

Related Post