மருங்கச் செய்யும் மரணமும்..! நெருங்கி வரும் மறுமையும்..!! – 2

-ஸினூஃபா அன்ஸார்

ம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல. வாழ்க்கைச் சுருங்கி, மரணப் புள்ளியில் சங்கமித்து, புதைகுழியில்  தனிமையில் தள்ளப்பட்டு, இவ்வாறே , சத்திய குர்ஆனும் , சரிந்திடா இறைத்தூதர் இயம்பிச் சென்ற அடையாளங்களினூடாக அனைத்து உயிரினங்களும், ஏனைய பிற படைப்புக்களும் பூண்டோடு அழிக்கப்படும். அதன் பின் ஆரம்பிக்கும் இறைமை மிக்க இறைவனின்  வீரியமிக்க விசாரனைகள்….!

அடையாளங்காட்டும் ஆச்சர்யங்கள்

மறுமை வருவது உறுதி எனில், அதன் செயல்பாட்டு அம்சம் குறித்தும் அறிவித்திருக்கலாமே! இப்படி ஐயம் எழுவது சாத்தியமே!இத்தகைய ஐயங்களுக்கு பொதுவான ஒரே பதிலாக  திருக் குர்ஆன்; முன்வைப்பது இதனைத்தான்:-

கேட்கக்கூடியவர்  வேதனையைக்  கேட்டிருக்கின்றார். (அந்த வேதனை) நிச்சயம்  நிகழக்கூடியதாகும், நிராகரிப்பாளர்களுக்கு!அதனைத் தடுத்து நிறுத்துபவர் எவரும் இல்லலை.ஏறிச் செல்லும் படிகளின் உரிமையாளனாகிய அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உள்ளதாகும்.வானவர்களும் ரூஹும்   அவனிடம் அந்நாளில் ஏறிச் செல்கின்றனர்.அந்நாளின் அளவு ஐம்பதாயிரம் ஆண்டுகளாகும்.(நபியே!) பொறுமையை மேற்கொள்ளும், அழகிய பொறுமையை!இவர்கள் அதனை வெகு தொலைவில் இருப்பதாகக் கருதுகின்றார்கள்.நாம் அது அருகில் இருப்பதைப் பார்க்கின்றோம். திருக் குர்ஆன் 70: 1-7

ரூஹ் என்பதன் கருத்து, ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவார்கள்.ஏனைய வானவர்களுக்கிடையே அவர்களைப் பற்றி மட்டும் பிரத்யேகமாகக் கூறப்பட்டிருப்பது அன்னாருடைய மகத்துவத்தின் அடிப்படையில் ஆகும் என்பதே பெரும்பாலான விரிவுரையாளர்களின் ஏகோபித்த கருத்து.

எப்போது நிகழும் அந்த நாள் என்று தெரியாமல் இருப்பினும் அது அண்மிக்கும் வேளையில் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் இறையருளால் , முஹம்மத் (ஸல்) அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.அவற்றிலும் தரம் பிரிக்கப்பட்டு சிறிய அடையாளங்கள்,பெரிய அடையாளங்கள் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.இந்த மறுமை  வருவதற்கான முன்கூட்டிய அடையாளங்களை முஹம்மத்  (ஸல்) அவர்கள் வரிசைப்படுத்திக் காட்டியிருக்கின்றார்கள்.அவைகளில் பெரிய அடையாளங்கள் பத்து உள்ளன. ஏனையவை சிறிய அடையாளங்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டிய சிறிய அடையாளங்களில் பெரும்பாலானவை நடந்து முடிந்துவிட்டன.,மேலும் நடந்துகொண்டிருக்கின்றன…! இன்னும் சில நடக்கக்கூடிய ஆயத்த நிலையில் இருக்கின்றன.அவற்றுக்கான சாத்தியக்கூறுகள் தெளிவாகவும்,குறிப்பாகவும் தென்பட ஆரம்பித்துவிட்டன.

இவையனைத்தையும் வகை பிரித்து விளக்கமாகக் காண்பதற்கு பக்கங்கள் போதா!எனினும், நம்  கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் சிறிய அடையாளங்களின் வலுவை நாம் விளங்கிக் கொள்வது, இப்போது இருக்கும் தலைமுறைக்கும், புதிய தலைமுறையாக உருவெடுக்க தயாராக நிற்கும் இளையோருக்கும் மறுமை நம்பிக்கை பகுத்தறிவு ரீதியாக, மனித இயற்கை வேண்டுகின்ற கொள்கை வழியாக,தவிர்க்க முடியாத ஒப்புக்கொண்டே ஆக வேண்டியஅ ம்சமாக அவர்தம் உள்ளத்தில் பதியும்.இறைநம்பிக்கையோடு தொடர்புபட்ட அம்சமாக மறுமை வருவதற்கான இந்த சிறிய அடையாளங்களைக் காணும்போது அவர்தம் உள்ளத்தில் நம்பிக்கையின் உன்னத தேட்டம் ஐயத்துக்கிடமின்றிய மறுமை ஒப்புதலை அவர்களுக்குள் ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

மற்றொரு முகமாக, உலகவாழ்வு ரீதியாக தொடர்புபடும் சிந்தனையின் அடிப்படையில் நோக்கினும் மக்கள் இந்த அடையாளங்களை மறுமை யானை பிளிறுவதற்கு முன்பாக வரும் மணிஓசை சத்தம் என்பதை புரிந்து கொள்வார்கள்

முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இறைத்தூதுத்துவம் முற்றுப் பெற்றதும்,அன்னாருடைய மரணமும்  முஹம்மத் (ஸல்) அவர்கள் அடையாளப்படுத்திக் காட்டிய சிறிய அடையாளங்களின் ஆரம்பமாக இருக்கின்றன.

அதன் பின்னர் நிகழ ஆரம்பித்த..,நடந்து முடிந்துவிட்ட அடையாளங்கள் சிலவற்றை இவ்வாறு வரிசைப்படுத்திடலாம்:-

ஜிஸ்யா வரி நிறுத்தப்பட்டமை,சந்திரன் பிளவு,ஹிஜாஸ் பிரதேசத்தில் ஏற்பட்ட பெரும் நெருப்பு,தாஊன் அம்வாஸ் எனும் நோய் உள்ளிட்டவை.

இனி, வாழும் தலைமுறையும்,உருவெடுத்து நிற்கும் தலைமுறையும் கண்டுகொண்டிருக்கும் சமீபத்திய அடையாளங்கள் சிலவற்றை மட்டும் ஆழமாகக் கண்டால், மறுமையின் வருகை குறித்த காலதூர அண்மையை அறியலாம்.

முதலில்,….. 3

Related Post