மருங்கச் செய்யும் மரணமும்..! நெருங்கி வரும் மறுமையும்..!!

-ஸினூஃபா அன்ஸார்

ஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல

ஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல

ம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல. வாழ்க்கைச் சுருங்கி, மரணப் புள்ளியில் சங்கமித்து, புதைகுழியில்  தனிமையில் தள்ளப்பட்டு, இவ்வாறே , சத்திய குர்ஆனும் , சரிந்திடா இறைத்தூதர் இயம்பிச் சென்ற அடையாளங்களினூடாக அனைத்து உயிரினங்களும், ஏனைய பிற படைப்புக்களும் பூண்டோடு அழிக்கப்படும். அதன் பின் ஆரம்பிக்கும் இறைமை மிக்க இறைவனின்  வீரியமிக்க விசாரனைகள்….

இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ள ஆத்திக  கொள்கை கொண்ட மதங்கள் பெரும்பாலும் மறுமை எனும் இறந்த பின் வாழ்க்கையின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளன என்பது உண்மையே. சுவனம்-நரகம்,நற்கூலி-தண்டனை ஆகியன அவ்வாழ்க்கையில் நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் மதநம்பிக்கையாளர்களின் நம்பிக்கை கருவூலத்தில் பொதிந்திருக்கின்ற பொக்கிஷம்!

ஏக இறைத்துவத்தின் இணையில்லாப் பிரவாகமாக உருவெடுத்து நிற்கும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், மறுமை ஆணித்ததரமாக வலியுறுத்தப்படுகின்றது.இறைநம்பிக்கையின் ஓர் அதிமுக்கிய அம்சமாகவும் அது போற்றப்படுகின்றது.

அவசியமா அந்த நாள்?

மனிதனின் நியாயமான ஆசை-அபிலாஷைகள், எதிர்பார்ப்பபக்கள், ஏக்கங்கள், இலட்சியங்கள் அனைத்தும் ஒரு முடிவின்பால் முற்றுப் பெற வைப்பது மரணம்.அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் ஒரு பொது நிகழ்வாகிய மறுமை, இந்த முடிவுகளின் விளைவுகள் அறிய மிகவும் அவசியம்.உலகம் எனும் தேர்வுக்களத்தில் பல்வகை சோதனைகள்-மீளுதல்கள்,வெற்றிகள்-தோல்விகள் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கிய தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு அதனுடைய முடிவுகள் தெரியப்படுத்தப்பட வேண்டியது நியாயமே! ஆதலால்  மனிதனுக்குரிய உரிமை கிடைக்க வேண்டிய இத்தகைய மறுமை அவசியமே.., அதில் அவனுடைய கருமங்களின்படி நற்கூலியோ.தண்டனையோ, எது கிடைத்தாலும் சரியே!

எப்போது ஊதப்படும் மறுமை எக்காளம்?

மறுமை பற்றிய அம்சங்களை நிலைநிறுத்திக் கொள்வதில்  முஸ்லிம்களின் அறிவு விளக்கம் எத்துணை உறுதியாக இருக்க வேண்டுமோ, அதேபோன்று மறுமை எப்போது நிகழும் எனும் வினாவுக்குரிய விடையையும் ஒரு முஸ்லிம் அதற்குரிய முறையில் விளங்கியிருக்க வேண்டும்.இந்த வினாவுக்குரிய பதில் பின்வரும் திருக் குர்ஆன் வசனத்தின் விடையில் அடங்கியிருக்கின்றது:-

மறுமை நாள் எப்போது வரும் என்று மக்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்.நீர் கூறும்: அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. உமக்குத் தெரியுமா அந்நாள் நெருங்கி வந்திருக்கலாம். (33:63)

அதற்கடுத்து அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாய்மொழியாகவே இந்த நாள் நிகழக்கூடிய நேரத்தையும்-அது எப்போது வரும்என்பதற்குரிய கால ஒப்பீட்டையும் குறித்து பின்வரும் நபிமொழி வாயிலாக அறிய முடிகின்றது:-

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது சுட்டுவிரலையும் நடுவிரலையும் (ஏ போன்று) காட்டி, நானும் மறுமைநாளும் இவ்விரண்டும் அண்மித்து இருப்பது போன்று இருக்கும் நிலையில் நான் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன் என்றார்கள். –ஆதாரம்: புகாரி

அதாவது, மறுமை நாள் நிகழும் கால தொலைவு மிகவும் சுருக்கப்பட்ட நிலையில் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவம் நிகழ்ந்துள்ளது.தூதுத்துவம் முடிவுக்கு வந்து 1440 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இனி,இவ்விரண்டுக்கும் உள்ள இடைவெளி மறுமை வரக்கூடிய குறுகிய காலகட்டத்தையே உணர்த்துவதாக அண்ணலார் (ஸல்) அவர்களுடைய விரல் சைகை காட்டுகின்றது.

Related Post