மனம் எப்படி.., மனிதன் அப்படி..!

– நூருத்தீன்

மனம் ஒரு குரங்கு என்பார்கள்

மனம் ஒரு குரங்கு என்பார்கள்

னம் ஒரு குரங்கு என்பார்கள். அந்த குரங்கின் நிலை குறித்து பல்வேறு விளக்கங்கள் தரப்பட்டாலும், அத ஒவ்வொருவரையும் ஆட்டவிக்கும் கருவி என்பதும் மறுப்பதற்கில்லை. இத்தகைய மனத்தை அடிப்படையாக வைத்து மனம்பொல வாழ்வு என்று கூறுவொரும், அந்த வாழ்வில் வெற்றி பெற்றதில்லை!
நமது மனம் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் அது உலகையும் உணர்கிறது. மனம் உலகை எப்படி உணர்கிறதோ, அப்படித்தான் உலகம் நம்மைப் பிரதிபலிக்கிறது.
குழப்புகிறதோ?
மிகவும் எளிது..!
நீங்கள் உற்சாகமாய், ‘குட் மூடில்’ இருக்கிறீர்கள் என்றால், நீங்களும் மற்றவர்களிடம் அன்பாய், இனிமையாய், நகைச் சுவையாய்ப் பேசுவீர்கள்..! பதிலுக்கு அவர்களும் உங்களிடம் அப்படியே பிரதிபலிப்பர். நீங்கள் சிரித்து நண்பரின் முதுகைத் தட்டினால் அவர் கத்தி எடுத்துக் கொண்டு உங்களைக் குத்த வரப்போவதில்லை. பதிலுக்கு அவரும் சிரித்தாக வேண்டும். உலகமே அன்று உங்களுக்கு மகிழ்ச்சியாய், இனிதாய்த் தோன்றும்.
நீங்கள் உற்சாகம் குன்றி, வருத்தத்திலும் அழுது வடியும் முகத்துடனும் இருந்தால்? பொறுமைசாலியான நண்பராய் இருந்தால், ஒரு சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்து உங்கள் சோகக் கதையைக் கேட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம். அல்லது, தூரத்திலிருந்தே உங்களைப் பார்த்துவிட்டு ஓடும் பஸ்ஸில் ஃபுட்போர்டில் தாவி ஏறி ஓடிவிடலாம். அதைக் கண்டால் மேலும் சோகம் பெருகி, மேலும் வருத்தப்பட்டு… கஷ்டம்…!
நம்மைப் பற்றி நம் மனதிலுள்ள சுயபிம்பம்தான், நாம் எப்படி நடந்துகொள்ளப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில் தான் நாம் யாரிடம் பழகப் போகிறோம், என்ன செய்யப் போகிறோம், அல்லது செய்யாமல் இருக்கப் போகிறோம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது..!
சரி, நம்மைப் பற்றிய பிம்பம் நமக்குள் எப்படி உருவாகிறது?
அது நமது அனுபவங்களின் கலவை. நாம் சந்தித்த வெற்றி, தோல்வி, நம்மைப் பற்றி நாம் நினைப்பது, மற்றவர்களைப் பற்றி நம் மனதில் ஏற்படும் அபிப்ராயம், மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறை, இவையெல்லாம் நம்முடைய சுயபிம்பம் உருவாகும் காரணிகள். அதை மனம் நம்புகிறது. அந்த பிம்பத்தின் கட்டுமானததிற்குள்ளேயே நம்முடைய வாழ்க்கையை அது அமைத்துக் கொள்கிறது.
அந்த சுயபிம்பம் தான், இந்த உலகத்தை நாம் எந்தளவு நேசிக்கப் போகிறோம், அதில் வாழ என்னென்ன முயற்சி எடுக்கப் போகிறோம் என்பதையும், நாம் வாழ்க்கையில் எதை சாதிக்கப் போகிறோம் என்பதையும் நிர்ணயிக்கிறது.
நாம் யார் என்று நினைக்கிறோமோ அது தான் நாம்!
அந்த சுயபிம்பம் நம்மை எப்படி வடிவமைகிறதோ அது தான் நாம்!
எனவே, சுயபிம்பங்களை சரியாக வடியுங்கள்..!வாழ்வை வெல்லுங்கள்..!!

Related Post