அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா?

– இப்ராஹீம் மதனீ

அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா?

அல்லாஹ் எங்கும் இருக்கின்றானா?

ல்லாஹ் யார்..? எங்கிருக்கின்றான்..? எப்படி இருக்கின்றான்..?? அவன் ஆளுமை என்ன..??

முஸ்லிம்களின் அடிப்படையான நம்பிக்கையில் ஒன்று, அல்லாஹ்வையும் அவனுடைய பண்புகளையும் தெரிந்து கொள்வதாகும். இதுவே ஈமானின் கடமைகளில் முதல் கடமையாகும். இதுபற்றி நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடம் பரவலாக இருக்கும் ஒரு தவறான நம்பிக்கையை மட்டும் தெளிவு படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அதாவது, அல்லாஹ் எங்கும் இருக்கின்றான். தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான் என்ற நம்பிக்கை தவறானதாகும். இப்படி ஒரு முஸ்லிம் நம்புவது, குர்ஆனுக்கும் நபிகளாரின் வழிமுறைக்கும் மாற்றமான கொள்கையாகும். அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான் என்பதே சரியான கொள்கையாகும். பின்வரும் குர்ஆன் மற்றும் ஹதீதுகளும் அல்லாஹ் அர்ஷின் மீது தான் இருக்கின்றான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

அல்லா{ஹவின் கூற்றுக்கள்:

1. அர்ரஹ்மான் அர்ஷின் மீது இருக்கின்றான். (அல்குர்ஆன் 20:5)

அதாவது, அல்லாஹ் உயர்வான இடத்தில் இருக்கின்றான் என்பதாக பல தாபிஈன்கள் இந்த ஆயத்திற்கு விளக்கமளிக்கின்றார்கள். இந்தச் செய்தி, புகாரியில் பதியப்பட்டிருக்கின்றது.

2. வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொருகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும். (அல்குர்ஆன் 67: 16)

அதாவது, வானத்தில் இருப்பவன் என்பதின் கருத்து, அல்லாஹ் என்பதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

3. அவர்கள் தங்களுடைய மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள். (அல்குர்ஆன் 16:50)

இங்கு, அவர்கள் என்று கூறப்பட்டிருப்பது மலக்குகளாகும். அவர்கள் அவர்களுக்கு மேலிருப்பவனை பயப்படுகிறார்கள் என்றால், அந்த அல்லாஹ்வைத் தான் குறிக்கின்றது. இந்த வசனத்திலிருந்து அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது.

 4. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4 :158)

அதாவது, வானத்திற்கு உயர்த்திவிட்டான். இந்த ஆயத்தும் அல்லாஹ் மேலேதான் இருக்கின்றான் என்பதை தெளிவுபடுத்துகின்றது.

 5. இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ் உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான். இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குர்ஆன் 6: 3)

இமாம் இப்னு கஸீர்(ரஹ்) தமது நூலில் இந்த வசனத்திற்கான விளக்கத்தில் அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என ‘ஜஹ்மிய்யா’ என்னும் வழிகெட்ட பிரிவினர் கூறுவது போல கூறமாட்டோம். மாறாக அல்லாஹ் அவர்கள் கூறுவதையெல்லாம் விட உயர்வான நிலையில் இருக்கிறான் என, குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவதாக குறிப்பிடுகின்றனர்.

ஆயினும், நீங்கள் எங்கிருந்தாலும் அவன் (அல்லாஹ்) உங்களோடு உள்ளான். (அல்குர்ஆன் 57: 04) என்ற வசனத்தின் கருத்து என்னவெனில், நீங்கள் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவன் உங்களை கண்காணித்துக் கொண்டும் உங்களின் செயல்களை கவனித்துக் கொண்டும் இருக்கிறான். அனைத்துமே அவனது ஞானத்திற்கும் பார்வை மற்றும் செவிப்புலன்களுக்கும் உட்பட்டவைதாம் என்பதாகும். இதுபோன்று வரக்கூடிய மற்ற ஆயத்துகளின் கருத்துகளும் இதுவேயாகும்.

Related Post