கப்பாப் பின் அல்-அரத் (ரலி)-3

– நூருத்தீன்

ப்பாப் பின் அல்-அரத் (ரலி)-3

மிக இளவயதுதான்.

மிக இளவயதுதான்.

மனிதன் மீது, அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே இல்லாதிருந்த ஒரு நீண்ட காலகட்டம் செல்லவில்லையா? நாம் மனிதனை கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்; நாம் அவனைச் சோதிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், இந் நோக்கத்திற்காக நாம் அவனைச் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். நாம் அவனுக்கு வழிகாட்டினோம். இனி, அவன் நன்றியுள்ளவனாகவும் இருக்கலாம் அல்லது நன்றி கொன்றவனாகவும் இருக்கலாம்.

மக்காவில் ஒருநாள் உம்மு அன்மார் எனும் பெண்மணி சந்தைக்குப் போனார். காய்கறி, சாமானெல்லாம் வாங்க அல்ல. ஓர் அடிமை வாங்குவதற்கு. இப்பொழுதெல்லாம் நாம் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வதுபோல் அப்பொழுது அவர்களுக்கு அடிமைகள் வைத்துக் கொள்வது சௌகரியம், பெருமையான காரியம். விற்பனைக்கு நிறுத்தப்பட்டிருந்த சிறுவர்களிலேயே இளையவனாய், பருவ வயதை அடையாத ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்தார். நல்ல ஆரோக்கியத்துடன் புத்திசாலியாய் இருந்தான் அவன்.

பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது பேச்சுக் கொடுத்தார்.

“உன் பெயர் என்ன?”

“கப்பாப்”

“தகப்பனார் பெயர்?”

“அல் அரத்”

“எந்த ஊர் உனக்கு?”

“நஜ்து”

“ஹா! அப்படியானல் நீ ஓர் அரபியா?” ஆச்சரியமாய்க் கேட்டார்.

“ஆம். நான் பனூ தமீம் கோத்திரம்”

“எப்படி அடிமைச் சந்தைக்கு வந்து சேர்ந்தாய்?”

“எங்கள் கோத்திரத்தாரின் நிலங்களை பாலை அரபிகள் படையெடுத்து வந்து தாக்கினர். விலங்குகளையெல்லாம் கைப்பற்றி, பெண்களைக் கடத்திக் கொண்டு, என்னைப் போன்ற சிறுவர்ககளையெல்லாம் அடிமைகளாக விற்று விட்டனர். நான் பலர் கை மாறி மக்கா சந்தைக்கு வந்துவிட்டேன்”.

மக்காவிலுள்ள நல்லதொரு கொல்லனிடம் வேலை கற்றுக்கொள்ள கப்பாபை அனுப்பி வைத்தார் உம்மு அன்மார். வாள்கள் தயாரிக்கும் பணி. சேர்ந்த சில நாட்களிலேயே அந்த வேலையில் கப்பாப் ஸ்பெஷலிஸ்டாகி விட்டார். எனவே அவர் சற்று வளர்ந்தவுடன் உம்மு அன்மார் தனியாகப் பட்டறை வைத்துக் கொடுத்து விட்டார். கப்பாபின் திறமையால் கடை வெற்றியடைய அடிமையின் தலைவிக்குக் கொழுத்த இலாபம். கடை பிரபல்யமடைந்துவிடவே, “நல்ல அருமையான வாள் வேண்டுமா, நட கப்பாப் கடைக்கு” என்று படையெடுக்க ஆரம்பித்தனர். வேலை நேர்த்தி மட்டுமல்ல, நம்பிக்கையும் நாணயமும் அதற்குக் காரணம்.

மிக இளவயதுதான். ஆனாலும் அவர் தயாரிக்கும் வாள் போலவே இயற்கையாகவே புத்திக் கூர்மையும் பக்குவமும் கப்பாபிடம் இருந்தன. நிறைய யோசித்தார். மக்காவில் அப்பொழுது நிலவி வந்த சீர்கேடு, ஜாஹிலிய்யாஹ், ஒழுக்கக் கேடான வாழ்க்கைமுறை – “இவையெல்லாம் தப்பு, எங்கோ தப்பு” என்று ஆழ்மனதில் நிச்சயமாய் அவருக்குப் பட்டது.

“இந்த நீண்ட காரிருள் ஒரு முடிவுக்கு வந்தாகத்தான் வேண்டும்” என்று அவருக்குள் ஒரு இனந்தெரியா நம்பிக்கை. தான் அதுவரை வாழக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே என்று மட்டும் ஆயாசம் ஏற்படும். ஆனால் அதற்கு அவர் நீண்ட நாள் காத்திருக்க வேண்டியதில்லாமல் போனது.

அப்துல்லாஹ்வின் மகனாம், முஹம்மதாம், என்னவோ புதுசு புதுசா சொல்லி வருகிறாராம் என்று கேள்விப்பட்டு, கேட்டுத்தான் பார்ப்போமே என்று ஆவலில் ஒருநாள் சென்றார் கப்பாப். சட்டென்று உணர்ந்து கொண்டார். இது உண்மை! இது புனித வழி! இது சத்தியம்! அவ்வளவுதான். உடனே ஆரத்தழுவி நுழைந்து கொண்டார் இஸ்லாத்தில்.

அவர் ஆறாவது முஸ்லிம். முஹம்மத் (ஸல்) இஸ்லாத்தை மக்காவின் மக்கள்முன் வைக்க ஆரம்பித்தவுடனேயே அப்பட்டமாய் ஏற்றுக்கொண்ட மிகச்சிலரில் அவர் ஆறாவது. இதனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிச் சொல்லப்படும் போது, “கப்பாப் ஒரு காலத்தில் இஸ்லாத்தில் ஆறில் ஒரு பங்கு” என்று பெருமை சொல்லப்பட்டது.

குரைஷிகளின் குழுவொன்று ஒருமுறை வாள்கள் சில கப்பாபிடம் செய்து கேட்டிருந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது கப்பாப் இல்லை. அப்படியெல்லாம் எங்கும் செல்லும் அளவுக்கு அவருக்கு வேறெந்த சோலியும் இருந்ததில்லை. எனவே சற்று ஆச்சர்யத்துடன் காத்திருந்தனர்.

சிறிது நேரம் கழித்து கப்பாப் வந்து சேர்ந்தார். முகத்தில் இனந்தெரியா ஒளி. வந்தவர்களை அமரச் செய்து விட்டு அவர்களுக்கு முடித்துத் தரவேண்டிய வேலையில் மூழ்கினார். கனாக்காணும் கண்களுடன் தனக்குத் தானே பேசிக் கொண்டார். பிறகு பேசினார். “அவரைப் பார்த்தீர்களா? அவரது பேச்சைக் கேட்டீர்களா?”

வந்தவர்களுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை. ஏளனமாய் அவர்களில் ஒருவன் “நீ அவரைப் பார்த்தாயா கப்பாப்?”

“யாரை?”

கேட்டவனுக்குக் கோபம் வந்தது. அவரது பதில்கேள்வி அவனுக்கு ஏளனமாய்த் தெரிந்தது. “நீ யாரைச் சொன்னாயோ அவரை”

“ஆம் நான் அவரைப் பார்த்தேன். உண்மை அவரது பக்கத்திலிருந்து வெளிவருவதைப் பார்த்தேன். ஒளி அவரது வாயிலிருந்து வெளிப்படுவதைப் பார்த்தேன்”

வந்தவர்களுக்குப் பொறி தட்டியது. “யாரைப் பற்றிச் சொல்கிறாய் உம்மு அன்மாரின் அடிமையே?”

ஏற்றுக் கொண்ட இஸ்லாத்தை அவர் மறைக்க விரும்பவில்லை. “முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் சத்தியம் பேசுகிறார், நான் அதை ஏறறுக் கொண்டேன்” என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான். சேதி உடனே அம்மா காதுக்குப் போனது – உம்மு அன்மார் காதுக்கு. அதைக் கேட்டு சிரிப்பா வரும்? சீற்றம் வந்தது. ஆத்திரம் வந்தது.

”யாரங்கே. கூப்பிடு என் சகோதரனை” என்று உடனே உடன்பிறப்பை வரவழைத்தார். அவன் பெயர் சிபா இப்னு அப்துல் உஸ்ஸா. பேட்டை தாதா ரேஞ்சுக்கு அடி-பொடி அடியாட்கள் சகிதம் கப்பாபின் கடைக்கு வந்து சேர்ந்தார்கள். பாலை மக்காவில் தூசு பறந்தது!

நேராகவே கேள்விக்கு வந்தான் சிபா. “உன்னைப் பற்றி நம்பமுடியாத செய்தியெல்லாம் நாங்கள் கேள்விப்பட்டோம்”

“என்ன அது?” என்றார் கப்பாப்.

“அந்த பனூ ஹாஷிம் பயல் சொல்லும் பேச்சைக் கேட்டு நாத்திகனாய் மாறி, அவனை நம்பி விட்டாயாம். எல்லோரும் சொல்கிறார்கள்”

முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அப்பொழுது நாற்பது வயது. அவரை ஏளனமாய், கேவலமாய், ஒரு பொருட்டே இல்லை என்பதைப் பிரஸ்தாபிக்கவே கெட்ட பயல் சிபாப், முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயரைக்கூடச் சொல்லாமல் “பனூ ஹாஷிம் பயல்” என்றான். அத்தகைய இறுமாப்பு.

கப்பாப் நிதானமாய், ஆனால் தெளிவாய் பதில் சொன்னார்: “நான் நாத்திகனாகவெல்லாம் மாறவில்லை. ஆனால் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு இணையில்லை என்று நம்பிவிட்டேன். உங்களது கடவுளர் சிலைகளைகளின்மேல் எனக்கு இனி நம்பிக்கையெல்லாம் இல்லை. அந்த முஹம்மத் ஏக இறைவனின் அடிமை, தூதர் என்று வாக்குமூலம் அளிக்கிறேன்”

அவர் சொல்லி முடிக்கவில்லை. சிபாவும் அவனது கூட்டமும் அவர் மேல் பாய்ந்தது. சகட்டுமேனிக்கு, இஷ்டத்திற்கு அடி, உதை என்று பின்னி எடுத்தார்கள். கீழே தள்ளி உதைத்து அவர் கடையில் இருந்த இரும்பு சாமான்களை எடுத்தே அவரைத் தாக்கினார்கள். அவர் சுயநினைவற்றுக் கீழே விழுந்தார்.

பாலைவனத்தில் காட்டுத் தீ பரவியது. கேவலம் ஓர் அடிமை. அவன் தனது எஜமானியை மீறி “முஹம்மதாம்”, “நபியாம்”, “இஸ்லாமாம்” ஏற்றுக் கொண்டானாம். அதையும் பகிரங்கமாய் சொல்லிக் கொள்கிறானாம். அந்தச் செயல், அடிமையிடம் அவர்கள் முதன் முதலாய்க் கண்ட அந்தத் தைரியம், மக்கத்துக் குரைஷிகளுக்குப் புதுசு. அந்தச் செய்தி அவர்களது தலைவர்கள்வரை சென்று குலுக்கியது. தங்களைக் குலுக்கியது தங்களது மதுபோதை அல்ல என்று உணர்ந்ததும் விஷயத்தின் தீவிரம் புரிந்து, சுதாரித்து, கோபம் கொண்டார்கள்.

ஒரு கொல்லன், அதுவும் அடிமை, தன்னைக் காப்பதற்கு உறவுகளற்றவன், புகலிடம் பெறக் கோத்திரமற்றவன். அவன் துடுக்குத்தனமாய்த்  தன் எஜமானியைத் தூக்கியெறிந்துவிட்டு, நம் கடவுளர்களையெல்லாம் அவமதித்து, மூதாதையர் சமயத்தை உதறித் தள்ளிவிட்டுப் போவதெல்லாம், ரொம்பவும் நல்லாயில்லை. இது பெரிய பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று நினைத்தார்கள். சரியாகவே நினைத்தார்கள்.

கப்பாபின் மனவுறுதி அவரின் சகாக்கள் சிலரையும் தொற்றிக் கொள்ள, பகிரங்கமாய்ச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். “ஆமாமய்யா! நாங்களலெல்லாம் இஸ்லாத்தை நம்புகிறோம். ஏற்றுக்கொண்டோம். உங்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம். இது சத்தியமான மார்க்கம். வந்துடுங்க. முஹம்மது சொல்றதைக் கேளுங்க” அது மேலும் நெய் ஊற்றியது – எரிய ஆரம்பித்திருந்த தீயில்.

..4

Related Post